Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

தமிழ் நாட்டுக் கோவில்கள்


வாராந்திரி ராணி 13-03-2005 இதழில் வெளியானது




"தீவினைகளை அறுத்து, நல்வினைகள் நல்குவதில் வல்லவள், ஈரோடு மாரியம்மன்" என்பர்.
கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் மாரியம்மன் வழிபாடு பிரசித்திபெற்றது. அங்கே, அம்மன் பல்வேறு கோலங்களில் காட்சி தந்து, பக்தர்களை அருள் பாலிக்கிறாள்.அம்மனை 'சக்தி' என்பார்கள். மாரி, காளி, தேவி, பகவதி, மகமாயி, பச்சையம்மன், பார்வதி எல்லாமே இதில் அடக்கம்.

ஈரோடு மாரியம்மன
அதில், ஈரோடு பெரிய மாரியம்மன், தனி சக்தி மிக்க தெய்வமாக எழுந்தருளியுள்ளாள்.
இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்தது 'ஈரோடை.' அதுவே, மருவி 'ஈரோடு' என்றாகியது. மயிலை, கபாலபுரி என்பன, இவ்வூரின் வேறு பெயர்கள்.

சேரரும், பாண்டியரும், விஜய நகர அரசரும், மைசூர் உடையாரும் ஆட்சி புரிந்த சிறப்புடையது.

மைசூர் மன்னர்களுக்கு எதிரான போராட்டத்தில், அவர்களின் மூக்கை அறுத்து வெற்றி நிலை நாட்டிய 'மூக்கறுப்போர்' என்ற வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் நிகழ்ந்தது இங்குதான். இன்று, ஈரோடு தொழில் நகரமாகி விட்டது.

கோட்டை
ஈரோட்டுக்கு பெருமை சேர்த்து, சக்தி வாய்ந்த காவல் தெய்வமாக விளங்கும் தேவியே, "கோட்டை பெரிய மாரியம்மன்." மாமன்னர்கள் கோட்டை கட்டி ஆண்டதால் இப்பகுதிக்கு கோட்டை என்றே பெயர். அம்மனுக்கும் கோட்டை மாரியம்மன் என்று அடைமொழி ஆகிவிட்டது.

ஈரோடு நகரின் பிரதான சாலையான பிரப் சாலையில் நகராட்சி அலுவலகம் எதிரே வடக்கு நோக்கி பெரிய மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் மிகவும் பழமையானது. ஆலயத்தின் சிம்ம வாகனம் அழகுடன் காட்சி தருகிறது. துவாரபாலகர்களாக ஆண், பெண் பூதங்கள் பெரிய உருவமாக இருபுறமும் விளங்குகின்றன.

கோவில் தல விருட்சம், வேப்பமரம். இங்கு பரசுராமர் சிலை உள்ளது.

கருவறையில் அம்மன் அழகுறக் காட்சி தருகிறாள். சிறிய உருவத்தில் இருந்தாலும் கருணை பொங்கும் கண்களும், காக்கும் கரங்களும், வினைகளை அறுத்து நல்வாழ்வு நல்கும் எழில் தோற்றமும் கொண்டு அண்டியவருக்கு அபயம் அளிக்கும் மகாமாரியாக அமர்ந்த நிலையில் இருக்கிறாள்.

திருவிழா
ஈரோட்டில் பெரியார் வீதியில் அமைந்துள்ள நடுமாரியம்மன் கோவிலும், காளிங்கராயன் வாய்க்கால் கரையில் அமைந்துள்ள வாய்க்கால் மாரியம்மன் ஆலயமும், பெரிய மாரியம்மன் ஆலயத்திற்கு இணையான சிறப்பு பெற்றவை.

இங்கு, ஆலயங்களில் தேர் விழா முக்கியமானது. முப்பது அடி உயர தேரில் நான்கு முனைகளிலும் அழகிய யானைகள் தாங்குவது போன்ற சிற்பங்கள் கண்ணைக் கவரும். தேரோட்ட்த்தன்று அம்மன் அழகிய அலங்காரத்துடன் பவனி வருவதைக் காண கண் கோடி வேண்டும். 

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் முதல் செவ்வாய்க் கிழமை விழா தொடங்கும். இரவு பூச்சாற்றுதல் நடை பெறும். தொடர்ந்து கம்பம் நடுதல், மாவிளக்கு, பொங்கல் வைத்தல், கரகம் எடுத்தல், தேரோட்டம் என்று மிக விமரிசையாகக் கொண்டாடப்படும்.

கம்பம்
இங்கு, கம்பம்-தேவியின் அம்சமாகக் கருதப்படுகிறது. கம்பம் நட்டதும், நாளும் பெண்கள் மஞ்சள் நீரை விடுவர். அது தேவியை அபிசேகம் செய்வது போலாகும்.

மூன்று மாரியம்மன் கோவில்களிலும் பெண்கள் கூட்டம் அலைமோதும். திருவிழா நடக்கும் 20 நாளும் ஊரே ஆட்டமும், பாட்டமுமாகக் காணப்படும்.

விழாவின் கடைசி நாளில் மூன்று கம்பங்களும் ஊர்வலமாக வீதிகளில் எடுத்துச் செல்லப்படும். இறுதியில் வாய்க்காலில் விடப்படும். அப்போது, பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வர். மஞ்சள் நகரம், மஞ்சள் நீரில் குளிக்கும். அது, வடநாட்டு 'ஹோலி' என்ற பண்டிகையை நினைவூட்டும்.

குழந்தை வரம்
பெரிய மாரியம்மன், பக்தர்கள் வேண்டியதை, விரும்புவதை நிறைவேற்றும் சக்தி கொண்டவள். "அம்மை உள்பட, வெப்பத்தால் வருகிற நோய்களை விரைவில் குணப்படுத்தித் தருவாள், இந்த அன்னை மாரி" என்கிறார்கள்.

குழந்தை இல்லாதவர்கள் தொடர்ந்து 45 வெள்ளிக்கிழமை இங்கு அர்ச்சனை செய்து, வழிபட்டு வந்தால் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆடி, தை மாத வெள்ளிக் கிழமைகளிலும், நவராத்திரி நாட்களிலும் அன்னைக்கு அலங்காரம், சிறப்பு பூஜைகள் உண்டு. ஈரோடு பேருந்து நிலையம், ரெயில் நிலையங்களிலிருந்து பெரிய மாரியம்மன் ஆலயத்திற்கு பேருந்து, ஆட்டோவில் செல்லலாம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக