Thanjai

Thanjai

ஞாயிறு, 20 மார்ச், 2011

ஓம் மகாகணபதே

ஞான ஆலயம் – செப்டம்பர் 2000 இதழில் வெளியானது





‘வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு’


நம் பாரத பூமியில் தோன்றிய அனைத்து இந்து மதத்தினரும் கணபதியையே முதல் தெய்வமாகக் கொண்டாடுகிறோம். வீடுகளில் எந்த விசேஷம் ஆரம்பிக்குமுன்பும் கணபதி பூஜை செய்த பின்பே ஆரம்பிக்கிறோம். ஆலயங்களிலும் அவ்வாறே. இந்த ஐதீகம் வட கயிலயங்கிரியிலிருந்து தென்கோடி இலங்கை வரை வேரூன்றி தொன்று தொட்டு இருந்து வருகிறது. விஷ்ணு ஆலயங்களிலும் கணப்தி ‘தும்பிக்கையாழ்வார்’ என்ற நாமத்தோடு விளங்குகிறார். ஜைன மதத்தவர் கணபதியை சிறப்பாகப் போற்றி வணங்குவர். பௌத்த தேவாலயங்களிலும் புத்த பெருமானின் பலவித விக்ரஹங்களுக்கு இடையில் கணபதியின் உருவத்தைக் காணலாம். பிள்ளையார் இல்லாத ஆலயங்களே கிடையாது. பெரும்பாலும் முச்சந்திகள், ஆற்றங்கரை இவற்றில் இவர் எழுந்தருளியிருப்பது நிச்சயம்.

கணபதி எனும் சொல்லில் ‘க’ என்ற அக்ஷரம் ஞானத்தையும், ‘ண’ என்பது மோட்சத்தையும் குறிக்கிறது. ‘பதி’ என்பது தலைவன் எனப் பொருள் படுகிறது. பரப்ரும்ம ஸ்வரூபமான கணபதியே ஞானத்துக்கும், மோட்சத்துக்கும் தலைவனாகிறார். ஸ்ரீ சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் வெள்ளை யானை மீதேறியும், ஸ்ரீ சேரமான் பெருமாள் நாயனார் வெண்பரி மீதேறியும் கயிலைக்குப் போகும்போது விநாயகர் பூஜையில் அமர்ந்திருந்த ஔவையார் அவர்களை அழைக்க அவர் அப்பூஜையை முடித்து ‘விநாயகர் அகவலை’ப் பாடவும், கணபதி அருள் கூர்ந்து ஔவையை அவ்விருவருக்கும் முன்பாக கயிலையை அடையச் செய்தார். இச்சம்பவத் தொடர்பாகத்தான் ‘குதிரையும் காதம், கிழவியும் காதம்’ என்ற பழமொழி பிறந்தது.

கணபதியின் - நாடி ப்ரம்ம ஸ்வரூபம், முகம் விஷ்ணு அம்சம், நேத்ரம் சிவமயம். இடது பாகம் சக்திவடிவம், வலபாகம் சூரிய ஸ்வரூபம், ஐங்கரங்களும் பஞ்ச கிருத்தியத்தை ஐந்தொழிலாய் செய்யும் ஆற்றலுடையவை. விசாலமான இரு செவிகளும் ஆன்மாக்களை மலவாதனை ஆட்கொள்ளாமல் காத்து வினை வெப்பத்தைப் போக்கக் கூடியவை. இத்தகைய தத்துவம் கொண்டவரே கணபதி.

சிவபெருமான் திரிபுராசுரனுடன் போர்புரிய புறப்படுமுன் பிள்ளையார் பூஜை செய்யாமல் புறப்பட்டுச் சென்றதால் சிற்றூர் அருகே தேரின் அச்சு முறிய, சிவபெருமான் திரும்ப வந்து கணபதியைப் பூஜித்து அருள் பெற்று அசுரனை அழித்தார்.

உமாதேவி பண்டாசுரனுடன் போர் புரிந்து வெல்லமுடியாத தருணத்தில் நாரதர் சொல்படி மயூரேச க்ஷேத்திரத்தில் விநாயகரை வேண்டினார். பண்டாசுரனின் அசுரரில் ஒருவனான விசுக்ரன் யுத்த பூமியில் பிரதிஷ்டை செய்திருந்த விக்ன யந்திரத்தை விநாயகர் உடைத்தெறிந்தும் பார்வதி அந்த அரக்கனை மாய்த்ததாக வரலாறு. இதைப் பற்றி லலிதாஸஹஸ்ர நாமத்தில், ‘காமேஸ்வர முகாலோக கல்பித ஸ்ரீ கணேஸ்வரா மஹா கணேச நிர்ப்பின்ன விக்னயந்த்ர ப்ரஹர்ஷிதா’ என்றுள்ளது.

ஸ்ரீ ராமாவதாரத்தில் சீதையைப் பிரிந்த திருமால் சிவபெருமான் உபதேசிக்க ஹேரம்ப விநாயகரை உபாசித்ததாக வரலாறு உள்ளது.

பிரம்மா விநாயகரை வணங்காமல் சிருஷ்டி செய்ததால் சிருஷ்டி செய்யப்பட்ட மனிதன் மிருகம் அனைத்தும் பேயாக மாறியதை அறிந்து, தன் தவறை உணர்ந்து தும்பிக்கை ஆழ்வாரை வழிபட்டு, பின் சிருஷ்டி செய்ததாக வரலாறு.

கணபதியின் திவ்ய வடிவம் ஜீவ-பிரும்ம ஐக்யத்தை எடுத்துக் காட்டுவது. கழுத்துவரை மனித ரூபமும், அதற்கு மேல் யானை முகமும் கொண்டிருப்பது மனித வடிவத்தில் ஜீவாத்மாவையும், கஜ ரூபத்தில் ப்ரும்ம ஸ்வரூபத்தையும் காட்டுகிறது.

விநாயக லோகமான ஆனந்த பவனத்தில் ஸித்தி, புத்தி எனும் இரண்டு சக்திகளுடன் இருப்பது ஞானப்ரம்ம வடிவமே. ஸித்தி-கிரியா சக்தி, புத்தி-இச்சாசக்தியின் வடிவம். இச்சையும், கிரியையும் இருந்தால்தான் ஞானத்தின் மூலம் ஒரு காரியத்தைச் செய்ய முடியும் என்ற தத்துவத்தின் விளக்கமே சித்தி புத்தி ஸமேத ஞான கணபதி.

பிள்ளையார் சுழி

உலகில் முதன் முதலில் எழுத்தைக் கண்டு பிடித்து எழுத ஆரம்பித்தவர் விநாயகரே. வேத வியாசர் மகாகாவியமான பாரதத்தை எடுத்துரைத்த போது, அந்த மாகாவியம் அழியாது அனைவரும் படித்து பேறு பெறும் பொருட்டு கணபதி தன் தந்தங்களில் ஒன்றை ஒடித்து எழுத்தாணியாகக் கொண்டு எழுதினார். எழுத்தைக் கண்டுபிடித்த கருணை கணபதிக்கு நம் நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டே நாம் எழுதத் துவங்குமுன் ‘பிள்ளையார் சுழி’ போட்டு எழுத ஆரம்பிக்கிறோம்.

நெற்றியில் குட்டிக் கொள்வது

நாம் எந்த பூஜை செய்தாலும் முதலில் ‘சுக்லாம் பரதரம்’ சொல்லி நெற்றியில் குட்டிக் கொண்ட பின்பே ஆரம்பிக்க வேண்டுமென்பது தொன்று தொட்டு வரும் பழக்கம். இதற்கு இரண்டு வரலாறுகள் கூறப்படுகின்றன.

அகத்தியர் காவேரியை கமண்டலத்தில் அடைத்து வைக்க, அதனை பூவுலகிற்கு பயனளிக்க வேண்டி கணபதி காக்கை வடிவில் சென்று கமண்டலத்தைக் கவிழ்த்துவிட விடுதலையான காவேரி பொங்கி வந்ததாம். இதனால் கோபமுற்ற குறுமுனி காக்கையின் தலையில் குட்ட, கணபதி தந் சுயரூப தரிசனமளித்தார். இதைக் கண்டு மன்னிப்புக் கேட்டு சரணடைந்தார் அகத்தியர். தன் சந்நிதியில் குட்டுப் போடுபவர்களுக்கு சகல நன்மையும் ஏற்படுமென கணபதி அருளினார்.

மற்றொரு வரலாறு இராவணன் கயிலையிலிருந்து ஆத்ம லிங்கத்தைக் கீழே வைக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் வாங்கி வரும் வழியில் அவனுக்கு சிறுநீர் கழிக்க எண்ணம் ஏற்படுகிறது. கணபதி சிறுவன் உருவில் வந்து அந்த ஆத்ம லிங்கத்தை வாங்கிக் கொண்டு மும்முறை கூப்பிடுவதற்குள் வராவிட்டால் கீழே வைத்து விடுவதாகக் கூறி மும்முறை கூப்பிட்டும் ராவணன் வராததால் அதனைக் கீழே வைத்து விட்டார். சினங்கொண்ட ராவணன் சிறுவனைத் தலையில் குட்ட, சிறுவன் கணபதியாக மாறி தரிசனமளிக்க, ராவணன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதோடு தானும் தலையில் குட்டிக் கொண்டதால் இந்தப் பழக்கம் ஏற்பட்டதாகவும் வரலாறு.

விஞ்ஞான ரீதியாகப் பார்க்கும்போது உள்ளங்காலில் இருந்து தலையுச்சி வரை அனேக நரம்புக் கற்றைகள் உள்ளன. அவை சுருங்கி சோர்வடையாமலிருக்கவும், ரத்தம் நன்கு பாய்ந்து மூளைக்குப் பலம் கொடுக்கவும் நாம் நம் நெற்றியில் குட்டிக் கொள்வது பல நன்மைகளைப் பயக்கும் எனக் கூறப்படுகிறது. அகந்தை, ஆணவம் அழிந்ததைக் காட்டவே குட்டுப் போடுவதும், தோப்புக் கரணம் போடுவதும்.

அருகம் புல்

கஜமுகாசுரனுடன் போர் புரிந்த குழந்தை கணபதி தன் அருகிலிருந்த அருகம்புல்லில் ஒன்றைக் கிள்ளி பிரணவ மந்திரத்தை ஓதி சேனைகளின் மேல் ஏவ, அப்புல்லானது உக்கிரத்துடன் சேனைகளைக் கொன்று விட்டது. அதுமுதலே ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்ற பழமொழி தோன்றியது.

மூஞ்சூறு வாகனம்

கஜமுகாசுரன், கணபதியை எதிர்க்க முடியாமல் அவரைக் கொல்ல எண்ணி, பெருச்சாளி ரூபத்தில் பூமியைக் கிண்டி கணநாதனின் முதுகை அசைக்கும் போது, கணபதி தன் பலத்தால் அவனை அமுக்க, விழிகள் பிதுங்கி பிராணன் நீங்கும் சமயம் கஜமுகாசுரன் விநாயகரைத் துதித்து, தன்னை மன்னித்து வாகனமாய் ஏற்கும்படி வேண்ட, விநாயகரும் அவனுக்கு ‘ஆகுவாகனன்’ எனப் பெயர் சூட்டி தன் வாகனமாக்கிக் கொண்டார்.

மோதக ஹஸ்தர்

அருந்ததி, விநாயக தத்துவத்தை உணர்ந்து அண்டத்திற்குள்ளே விநாயகர் பூரணமாய் நிறைந்திருப்பதைப் போற்றும் வண்ணம், மாவுக்குள் வெல்லப் பூரணம் நிறைத்து மோதகம் செய்து வசிஷ்டர் மூலம் பூஜிக்க, அதை அன்போடு ஏற்ற கணபதி, அவளைப் போன்று மோதகம் செய்து பூஜிப்பவர்க்கு நல்லருள் கிட்டும் என்பதை உணர்த்த மோதகத்தை தம் கைகளில் ஏந்தியுள்ளார்.

சிதறு தேங்காய்


அவரவர் பாவங்கள் உருண்டு திரண்டு தேங்காய் போலிருப்பதால் அவை சிதறிப்போக சிதறு தேங்காய் உடைக்கிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக