Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

அஸ்வத்த பிரதட்சிணம்

தீபாவளி சோமவார அமாவாசையில்...
அசுவத்த பிரதட்சிணம்
ஞான ஆலயம் நவம்பர் 2002 இதழில் வெளியானது.



‘மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்’ என்கிறர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், பகவத் கீதையில். அரச மரத்தின் சமஸ்கிருத பதம் ‘அஸ்வத்த விருக்ஷம்!’ மரங்களிலேயே மிக புனிதமும், பெருமையும், உயர்வும் கொண்ட்து அரசமரம். ஸ்ரீமந்நாராயணனின் அம்சமாகப் போற்றப்படுவது அரச மரம்.

அரச மரத்தின் வேரில் பிரம்மாவும், மத்தியில் விஷ்ணுவும், மேல் பகுதியில் சிவனும் குடி கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மற்ற அனைத்து தெய்வங்களும், உப தேவதைகளும் அரச மரத்தின் பழங்களில் வாழ்வதாயும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

உபநிஷதங்களில் மனித உடல், மரத்துக்கு உவமையாகக் கூறப்படுகிறது, உலகியல் ஆசைகள் நிறந்த உடல் மரமாகவும், அதை ‘ஞானம்’ என்ற கோடரியால் வெட்டும்போது, இறைவனை அடையலாம் என்றும் கூறப்படுகிறது. அகன்று, ஆழமாக பூமிக்கடியிலுள்ள வேர் ‘ஆத்மா’. அரசமரம் பெரும்பான்மையான இடத்தை ஆக்ரமித்துக் கொண்டு அகன்று, பெரிதாக வளரும். அதனுடைய இலைகள் சிறு காற்றுக்கும் ‘சல் சல’வென்று சத்தம் ஏற்படுத்தும். மனிதன் ‘தான்’ என்ற பெருமையில், ஆணவம் அடைவது போல், அரசின் பூக்களும், பழங்களும் மனிதர்களுக்கு எவ்வகையிலும் பயன்படுவதில்லை. மரம் எந்த தச்சு வேலைகளுக்கும் உபயோகப்படாது. ஆனால் யாகங்கள், ஹோமங்கள் போன்ற புனித காரியங்களுக்கு அரசமர சமித்துகள் மட்டுமே ஏற்றவை.

இது போன்று மனித உடலும் அழகு, ஆரோக்கியம், பலம் இவற்றுடன் விளங்கினாலும். இறுதியில் எதற்கும் உபயோகப்படாமல் அழியக் கூடியது என்பதே உண்மை. மண்ணில் மறைந்துள்ள அரசமர வேர் போன்ற நம் ‘ஆத்மா’வை இறைவன் பால் திருப்புவதே நாம் பிறவி எடுத்ததன் பயன். அதனை உணர்த்தவே இறைவன் ‘மரங்களில் நான் அரசு’ என்று உரைக்கிறார்.

சகல தேவர்களும் இதில் வாழ்வதாலேயே இதனை சமித்துகள் தவிர, வேறு விஷயங்களுக்கு வெட்டுவது பாபம். அப்படி வெட்டுவது தன் மூதாதையரேயே கொலை செய்வதற்குச் சமம் என்பர். அதனாலேயே இம்மரத்தைத் தண்ணீர் விட்டு வளர்ப்பதும், பூஜிப்பதும், பிரதட்சிணம் செய்வதும் ஒருவர் செய்த பாபங்களை அழித்து, விஷ்ணு லோகம் அடையச் செய்யும் எனப்படுகிறது.

திங்கட்கிழமையும், அமாவாசையும் சேர்ந்து வரும் நாட்களில் அரச மரத்தை 108 முறை பிரதட்சிணம் செய்வது மகா புண்ணியம் தரும். நீண்ட ஆயுள், பிள்ளைப் பேறு, நோயிலிருந்து நிவாரணம், வைகுண்ட பிராப்தி இவை கண்டிப்பாகக் கிட்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

ஒரு புனித நாளில் இம்மரக் கன்றை நட்டு, தினம் நீர் ஊற்றி, எட்டு வருடங்கள் சொந்த மகன் போல் வளர்க்க வேண்டும். பின் அம்மரத்திற்கு முறைப்படி உபநயனம் செய்வித்து, பூணூல் அணிவித்த பின், அதன் பக்கத்தில் ஒரு வேப்பங்கன்று நட்டு, இரண்டுக்கும் திருமணம் செய்ய வேண்டும். அப்படிச் செய்பவர்களுக்கு குறையாத செல்வம், நிறைந்த இறையருள், நீண்ட ஆயுள், முன்னோர்களுக்கு முக்தி ஆகிய அத்தனை பேறுகளும் கிட்டும். வைகாசி மாதம் இம்மரத்திற்கு நீர் ஊற்றி வழிபடுவது மிக உயர்ந்த பலனைத் தரும்.

சோமவார அமாவாசையன்று விடியற்காலையில் அரசமர ப்ரதட்சணம் செய்வது மிக விசேஷமாகும். அரச பிரதட்சணத்தால் பெண்களின் மலட்டுத் தன்மை நீங்கி, பிள்ளைப் பேறு உண்டாகும். இதனாலேயே ‘அரச மரத்தைச் சுற்றி விட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாள்’ என்ற வழக்கு உண்டாயிற்று!. இம்மரத்தின் மருத்துவக் காற்று பெண்களின் உடலில் பட்டு, மலட்டுத் தன்மை நீங்குவதாக விஞ்ஞானக் குறிப்புகள் உரைக்கின்றன.

மாங்கல்ய தோஷம் ஜாதகத்தில் இருக்கும் பெண்கள், விடிகாலை மரத்தை சுத்தம் செய்து, கோலம் போட்டு, மரத்தை அலங்கரித்து வைதீகரின் உதவியோடு பூஜை செய்து, ஒரு வெள்ளை நூலால் மரத்தில் 108 முறை பிரதட்சிணம் செய்தவாறு சுற்ற வேண்டும். இதனால் தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும். அரசமரத்தின் கீழே நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதும், நாக தோஷம் நீங்குவதற்கேயாகும்.

இவ்வருடம் நவம்பர் 4, தீபாவளியன்று சோமவார அமவாசை நாள். அன்று கீழ்கண்ட சுலோகத்தைச் சொல்லி அஸ்வத்த பிரதட்சிணம் செய்து, இகபர சுகங்களை அடைவோமாக!
மூலதோ ப்ரம்ம ரூபா: மத்யதோ விஷ்ணு ரூபிணே
அக்ரத: ஸிவரூபாய வ்ருக்ஷ ராஜயதே நம:
|




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக