Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

சித்தி விநாயகா சரணம்

ஞான ஆலயம் செப்டம்பர் – 2002 இதழில் வெளியானது





ஸ்ரீகணபதி செல்வம் கொழிக்கும் மஹாராஷ்டிரத்தின் முதல் முக்கிய கடவுள். ஆவணி மாதம் வரும் விநாயக சதுர்த்தி இங்கு மிக மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். வீடுகளில் ஐந்து நாட்களும், ஆலயங்களில் பத்து நாட்களும் கோலாகலமாகக் கொண்டாடப்படும். கடைசி நாளன்று ‘கணபதி பப்பா மோரியா’ என்று விண்முட்டும் கோஷத்துடன் விசர்ஜன் செய்தபின் ஊரே மிக அமைதியாகி விட்டதான உணர்வு தோன்றும். மொத்தத்தில் இவ்வூர் மக்களின் செல்லப்பிள்ளையாக பிள்ளையார் விளங்குகிறார்.

இங்குள்ள விநாயகர் ஆலயங்கள் எண்ணிலடங்கா. ஒவ்வொன்றும் புகழும் பெருமையும், பிரசித்தமும் உடையவை. ‘அஷ்ட விநாயகத் தலங்கள்’ மிக முக்கியமானவை.

மும்பை மற்றும் மும்பையைச் சுற்றியுள்ள பல விநாயகர் ஆலயங்களுக்கும் சிகரமாக விளங்குவது பிரபாதேவியில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயம். 200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், படிப்படியாக விரிவு படுத்தப்பட்டு, ஹிந்து சாஸ்திர நிபுணர்களால் கர்ப்பக்கிரகத்தின் புனிதத் தன்மை கெடாதவாறு பெரிதாகக் கட்டப்பட்டுள்ளது. கோயிலுக்கு 13 அடி உயரமுள்ள மூன்று மரக் கதவுகள் உண்டு. அவற்றில் அஷ்ட லட்சுமி, அஷ்ட கணபதி தசாவதாரக் காட்சிகள் மிக அருமையாகக் கண்ணைக் கவரும் வகையில் உள்ளன.

ஆலயத்தின் பிரதான கோபுரத்தின் மேலுள்ள கலசம் 12 அடி உயரமும், 1500 கிலோ எடையும் கொண்டு தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. அது தவிர 37 கலசங்களைக் கொண்டு, கம்பீரமாக அமைந்துள்ளது ஆலயம். இறைவன் அமர்ந்து அருள் தரும் கர்ப்பக்கிரஹம் பத்தடி உயரத்தில் எண்கோண வடிவமாக அமைந்துள்ளது. உட்புறம் தங்கத் தகடுகளில் அற்புதமான வேலைப்பாட்டுடன் அழகு செய்யப்பட்டுள்ளது. மேலே அமைந்துள்ள அலங்கார தொங்கு விளக்கின் அழகு நம் கண்ணையும், மனதையும் கவர்வதுடன், இறைவனின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது.

உயர் ரக கரு நிறக் கல்லாலான சித்தி விநாயகரின் திரு உருவம் 2½ அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டு விசேஷமான அமைப்பில் வலம்புரி கணபதியாக அமைந்துள்ளது. சதுர்ப்புஜதாரியாக, மேல் வலக்கையில் தாமரையும், இடக்கையில் அங்குசமும், கீழ் வலக்கையில் ஜபமாலையும், இடக்கையில் மோதகங்கள் நிறைந்த கிண்ணமும் கொண்டு காட்சி அளிக்கும் கண நாதரைக்காண கண் கோடி வேண்டும். விநாயகரின் நெற்றியில் மூன்றாவது கண் அமைந்துள்ளது. சிவ பெருமானின் அம்சத்தைக் குறிக்கிறது. மனைவியரான சித்தி தேவி, புத்தி தேவி இருவரும் செல்வம், வளமை இவற்றின் அம்சமாக இருபுறமும் இருந்து அருள் பாலிக்கிறார்கள்.

ஐந்து மாடிகளைக் கொண்டு ஒரு கோட்டை போல் இவ்வாலயம் அமைந்துள்ளது. முதல் மாடியிலிருந்து விசேஷ நாட்களில் பக்தர்கள் இறைவனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். இரண்டாவது மாடியில் அர்ச்சகர்களுக்கான அறை, இறைவனுக்கு மகா நைவேத்யம் தயாரிக்கும் அறை ஆகியவை உள்ளன. அங்கிருந்து நைவேத்யம் நேரடியாக கர்ப்பக் கிரஹத்துக்கு எடுத்துச் செல்ல லிப்ட் வசதி உள்ளது. மூன்றாவது மாடியில் நிர்வாக அறையும், நான்காம் மாடியில் 8500க்கு மேற்பட்ட புத்தகங்கள் உள்ள நூலகமும் உள்ளது. ஐந்தாம் மாடி விசேஷ நாட்களுக்கு செய்யும் ஏற்பாடுகளுக்கு உபயோகப் படுத்தப்படுகிறது. சோலார் எனர்ஜி மூலம் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.


இவ்வாலயத்தினுள் ஹனுமான் சன்னதி ஒன்றும் அமைந்துள்ளது. இத்தனை சிறப்பாகக் கோட்டை போல் அமைந்துள்ள ஆலயத்தில், அரசனைப் போல் எந்த நேரமும் அலங்காரத்தோடு காட்சி தந்து வேண்டுவோர்க்கு வேண்டிய வரம் தரும் விநாயகரின் முன் நின்றால் நகர்வதற்கு நமக்கு மனமே வராது. சித்தத்தைப் பித்தம் கொள்ள வைக்கும் சித்தி விநாயகரை தரிசிக்க ஒவ்வொரு செவ்வாய்க் கிழமை, சங்கடஹர சதுர்த்தி மற்றும் அங்காரக சங்கஷ்டி எனும் செவ்வாயன்று வரும் சதுர்த்தி தின்ங்களில் இங்கு மக்கள் விடிகாலை மூன்று மணி முதலே வரிசையில் காத்திருப்பர். 1½ முதல் 2 லட்சம் மக்கள் தரிசிப்பதாகக் கூறப்படுகிறது. மும்பையில் முதல் முக்கியக் கடவுளாகக் கருதப்படும் முக்கண்ணன் மகன் சித்தி விநாயகரின் அழகைச் சொல்லி முடியாது. நேரில் தரிசித்தாலே உணர முடியும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக