Thanjai

Thanjai

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

நெருல் பாலாஜி மந்திர்


ஞானபூமி நவம்பர், 2003 இதழில் வெளியானது






நமாமி நாராயண பாத பங்கஜம்
கரோமி நாராயண பூஜனம்ஸதா
வதாமி நாராயண நாமநிர்மலம்
ஸ்மராமி நாராயண தத்வமவ்யயம்
-      முகுந்தமாலை
‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரமானது அதனை ஜபிப்பவருக்கு இகபர நன்மைகளைத் தந்து இறுதியில் வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்லும். எல்லா மந்திரங்களிலும் மிகச் சிறந்த பெருமாளின் மூன்று மந்திரங்கள் எட்டெழுத்துள்ள நாராயண மந்திரம். ஆறெழுத்துள்ள விஷ்ணு மந்திரம், பன்னிரண்டு எழுத்துடைய வாசுதேவ மந்திரம்.

இப்பூலோகத்திலுள்ள நாராயண தலங்களில் பெருமாள் தானே தோன்றிய ஸ்வயம் வ்யக்த தலங்கள் எட்டு. அவை ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், சாளக்கிராமம், நைமிசாரண்யம், தோத்தாத்ரி, புஷ்கரம், பத்ரி. தேவர்களால் ஏற்படுத்தப்பட்டவை ‘திவ்ய க்ஷேத்திரம்’ எனப் பெயர் பெறும். சித்தி பெற்ற மகரிஷிகளால் உருவாக்கப்பட்டவை ‘ஸைத்தம்’ எனப்படும். மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டவை ‘மானுஷ க்ஷேத்திரங்கள்’

 

நூற்றெட்டு திருப்பதிகளில் தலை சிறந்து விளங்குவது திருமலை என்பது நாம் அறிந்ததே. திருமலையின் பிரதிபலிப்பாக நம் இந்தியாவில் பல மாநிலங்களில் ஆலயங்கள் நிறுவப்பட்டிருப்பதும் நாம் அறிந்ததே. அந்த வகையில் மும்பையில் திருமலையில் வேங்கடவன் காட்சி தருவதப் போன்றே காணப்படும் ஆலயங்கள் மூன்று. ஃபனஸ்வாடியிலுள்ள சின்ன திருப்பதி ஆலயம், டோம்பிவிலியிலுள்ள பஸ்சிம் திருப்பதி, நவிமும்பை நெருலில் அமைந்துள்ள ஸ்ரீபாலாஜி மந்திர். நவிமும்பை நெருலில் பிரம்மகிரி என்ற அழகிய இயற்கையான சிறிய குன்றின் மீது கோயில் கொண்டு அடியவரை ஆட்கொண்டு, எளியவரை ஏற்றம் பெறச் செய்து, தன்னை அண்டியவர்க்கு வேண்டியன கொடுத்து, அருள் பாலிக்கும் பாலாஜி அப்படியே திருப்பதி பெருமாள் போலவே காட்சி தருகிறார்.

 

1991-ம் ஆண்டு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் பூமி பூஜை செய்து ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயம் 1999-ம் ஆண்டு ஜூன் மாதம் கட்டி முடிக்கப்பட்டு ஸ்ரீவெங்கடேசப் பெருமாள், பத்மாவதி ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதை அடுத்து 2000ம் ஆண்டு பிப்ரவரியில் வித்யா கணபதி சன்னதி, துவஜஸ்தம்பம், பலிபீடம், துவார பாலகர்கள் அமைக்கப்பட்ட்து. அதை அடுத்து நரசிம்ம சுவாமி, ஆஞ்சநேயர் சன்னதிகள் அமைக்கப்பட்டு இன்று அழகிய பெரிய ஆலயமாகக் காட்சி தருகிறது.

ஆலயத்தில் நுழைந்ததும் இடப்பக்கம் ஸ்ரீவித்யா கணபதி சன்னதி அமைந்துள்ளது. விக்னங்களை நீக்கி, வித்தையை அருளும் விநாயகப் பெருமான் அழகாகக் காட்சி தருகிறார். விநாயகர் சன்னதியின் மூன்று பக்கங்களில் அஷ்ட கணபதி சிற்பங்களும், பின்னால் பிள்ளையார்பட்டி பெருமானின் திருவுருவமும், சித்தி விநாயகரின் உருவமும் காட்சி தருவது பேரழகு. அடுத்து, த்வஜஸ்தம்பத்தைத் தாண்டி எம்பெருமான் சன்னதியில் நுழைகிறோம்.

காஞ்சி பீடாதிபதி சுவாமிகளால் அடிக்கல் நாட்டப் பெற்று, திருப்பதி சின்ன ஜீயர் சுவாமிகள் மேற்பார்வையில் நிர்மாணிக்கப்பட்ட ஆலயத்தின் அதிபதியான லக்ஷ்மிபதி ஸ்ரீவேங்கடரமணன் இதயத்தில் ஸ்ரீதேவியுடன், மேலிரண்டு கைகளில் சங்கு சக்ரதாரியாக ‘என்னிடம் வந்துவிட்டாயா?’ இனி நான் காப்பாற்றுகிறேன்’ என்றுரைக்கும் விதமாக ஆஜானுபாகுவான உருவத்துடன் அற்புதமாகக் காட்சி தருகிறார்.

ஒரு நிமிடம் நாம் நிற்பது திருமலை பாலாஜி முன்பா? என்ற எண்ணம் தோன்ற, நம்மை நகரச் சொல்பவர் யாருமில்லாததால் நின்று நிதானமாக அவர் அழகை கண்களால் கண்டு, அவரது பாதமலர்களிடம் நம் கவலைகளை விட்டு விட்டு தெளிந்த மனதுடன் நகர மனமின்றி நகர்கிறோம்.

வேங்கடவனின் தரிசனம் மெய்மறந்து நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஐயன் சன்னதியை விட்டு வெளியில் வந்தால் சுற்றுப் பிரகாரத்தில் பத்மாவதி தாயார் சன்னதி உள்ளது. மனம் குவித்து வணங்குவோரை வள்ளலாக்கும் தேவி அமர்ந்த திருக்கோலத்தில் அருளாட்சி செய்கிறார்.

ஸ்ரீலட்சுமியுடனான நரசிம்மசுவாமி சன்னதிக்கு எதிரில் ராம நாமத்தை ஜபிக்கும் யோக ஆஞ்சநேயர் உள்ளது. ஸ்ரீராமானுஜருக்கு சன்னதி உள்ளது. அமைதியான இயற்கை சூழ்நிலை தியானம் செய்யும் மனநிலையை ஏற்படுத்துகிறது.

நவிமும்பை வாசிகள் நினைத்தவுடன் திருப்பதி செல்வது இயலாதபோது ஓடிவருவது இந்த பாலாஜி மந்திருக்கே! வார இறுதி நாட்களில் இங்கு கூட்டம் இருக்கும். வைகுண்ட ஏகாதசி இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும். அன்று சுவாமி புறப்பாடு உண்டு. ஆங்கில, தமிழ் வருடப் பிறப்பு நாட்களில் இங்கு வரிசையிலேயே பெருமாளைத் தரிசிக்க முடியும்.

இவை தவிர கோகுலாஷ்டமி, ஸ்ரீராமநவமி, மார்கழி மாத உற்சவங்கள் நடைபெறும். புரட்டாசி சனிக் கிழமைகளில் விசேஷ வழிபாடு உண்டு.

ஆலயத்தில் தினமும் காலை 6-30 மணி முதல் 11-30 மணி வரை மற்றும் மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரை தரிசனம் செய்யலாம். வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 11-30 முதல் 4 மணி வரை தரிசனம் உண்டு. இங்கு திருப்பதி போன்றே கல்யாண உத்சவம், வஸந்தோத்சவம், பிரம்மோத்சவம் போன்றவை நடத்தப் பெறுகின்றன.

இந்த ஆலயத்தை மிகச் சிறப்பாக நிர்வகித்து வரும் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சபா இவ்வாலயத்தின் அருகில் மூன்று மாடிகளைக் கொண்ட கல்யாண மண்டபம், கலாசார மையம், நூலகம் இவற்றை உருவாக்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் நம் பாரம்பரியக் கலைகளான இசை, நடனம் இவற்றைப் பயிற்றுவிக்கவும், சமஸ்கிருதம், வேத பாடசாலைகள் நடத்தவும் திட்டங்கள் தீட்டியுள்ளனர். தற்சமயம் இவற்றுக்கான வேலைகள் ஆயத்த நிலையில் உள்ளது. விரைவாக நடக்கவும் ஆரம்பித்துள்ளது.

பாலாஜி மந்திர் அமைந்துள்ள பிரம்மகிரியில் மாதா அமிர்தானந்தமயி ஆசிரமம், ஸ்ரீசுவாமி நாராயண ஆலயம், ஒரு மாதா கோயில் ஆகியவையும் உள்ளது. பிரம்மகிரிக்கு ஏறிச் செல்ல படிகளும் உண்டு. ஆலயத்தின் எதிரில் சில படிகள் இறங்கிச் சென்றால் நவக்ரஹ சன்னதி உள்ளது.

மொத்தத்தில் திருப்பதி சென்று வேங்கடவனைத் தரிசித்த திருப்தியையும், மனமகிழ்ச்சியையும் எங்களுக்குத் தருகிறது நவிமும்பை நெருல் பாலாஜி மந்திர்! பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பதிலும் திருமலை பாலாஜியாகவே திகழ்கிறார் பிரம்மகிரி ஸ்ரீநிவாசப் பெருமாள்!


 




புதன், 8 ஏப்ரல், 2015

ஆலய விளக்கம்


ஞானபூமி டிசம்பர் 2003 இதழில் வெளியானது




இந்து தர்மம் ஒன்றுதான், தானே உருவான பெருமை படைத்ததாகும் என்கிறது உபநிஷத்துக்கள். அடுத்தவருக்குத் துன்பம் செய்ய அச்சப்படுபவனே உண்மையான இந்து என்பது உபநிஷத்தின் வாக்கியம். இறைவன் எல்லா இடத்திலும் நிறைந்திருக்கும்போது தனியாக ஆலயம் சென்று வணங்கக் காரணம் என்ன? கோபுரம், கொடிமரம், கர்ப்பக்கிரஹம் இவற்றின் பொருள் என்ன? தூப தீபங்களின் தாத்பர்யம் என்ன என்பது பற்றி பெரியோர் யாது கூறியிருக்கிறார்கள் எனப் பார்ப்போம்.

ஆலயம்: ஆன்மாக்கள் ஆண்டவனிடம் லயிக்குமிடம். ஆணவ மலம் அடங்குமிடம். கோயில் – கோ என்றால் இறைவன். இல் என்பது தங்குமிடம். கடவுளின் இருப்பிடம்.

இறைவனை ஆலயம் சென்று வணங்கக் காரணம், ஒரு லென்ஸை சூரிய ஒளியில் பிடித்தால் ஒளிக் கற்றைகள் குவிந்து வெப்பம் தருவது போல், இறைவனின் சக்தி விக்கிரகங்களில் சேகரிக்கப்பட்டு அமைந்தவையே ஆலயங்கள்.

கோபுரம்: ஸ்தூல லிங்கத்தை உணர்த்தும் கோபுரம் போல் ஆன்மீக உணர்வில் நாம் ஓங்கி உயர்வதைக் குறிக்கும்.

கொடிமரம்: யோகி பிராண வாயுவை நடு நாடியில் நிறுத்தி தியானம் செய்தால், மனம் முதலான அந்த கரணங்கள் நின்று உலகு மறந்து, தெய்வ தரிசனம் ஏற்படும் தன்மையை உணர்த்தும்.

பிரகாரங்கள்: அன்னம், பிராணன், மனம், விஞ்ஞான, ஆனந்த மயம் என்று ஐந்து கோசங்களையும் பஞ்ச இந்திரியங்களையும் குறிக்கும்.

மூன்று பிரதட்சணங்கள்: ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்களைக் குறிப்பது.

மண்டபங்கள: அர்த்த, மஹா, ஸ்நபன, அலங்கார, சபா எனப்படும் ஐந்து மண்டபங்கள் குறிப்பன – நிவ்ருத்தி, பிரதிஷ்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதம் என்ற ஐந்து கலைகளைக் குறிப்பவை.

அபிஷேகம்: ஆலயத்தில் அமைந்துள்ள ஆண்டவன் குளிர்ந்தால் அவனுள் அடங்கியுள்ள உயிர்களும் தழைத்து விளங்கும்.

தேங்காய் உடைத்தல்: ஆன்மாக்களிடம் ஆணவம், கன்மம், மாயை என்று மும்மலங்கள் உண்டு. தேங்காய் மீதுள்ள பச்சை மட்டை மாயா மலம். உரித்தெடுக்கும் நார் கன்ம மலம். ஓடு ஆணவ மலம். இம்மூன்று மலமும் அகன்றால் வெண்ணிற பருப்பு தோன்றும். இறைவனை நம் மும்மலங்களையும் அகற்றும்படி வேண்டி குறிப்பு தருவதே இதன் பொருள்.

தூபம்: ‘நான்’ என்ற அகந்தையைப் பொசுக்குவது தூபத்தின் தத்துவம்.

தீபம்: அஞ்ஞான இருளைப் போக்கி, ஞான ஒளி ஏற்படுவதைக் குறிப்பது, கற்பூரம் ஜோதியில் எரிந்து கரியோ, சாம்பலோ இல்லாமல் மறைவது போல், ஆன்மா ஜோதியில் கரைந்து ஒன்றுபடுவதைக் குறிப்பது.

நிவேதனம்: நம் குணங்களாகிய அகங்காரம், குரோதம் முதலானவற்றை ஆண்டவனுக்கு அமுதமாக சமர்ப்பித்து, நாம் தூய்மை பெறுவதை உணர்த்துவதாகும்.

அர்ச்சனை: வாழ்வு மலரவும், மணம் பெறவும், மலர்களால் இறைவனுக்கு அர்ச்சனை செய்கிறோம்.

அரோஹரா: ‘ஹர’ என்றால் பாவங்களைப் போக்குவது என்று பொருள். ‘அர’ என்பது சிவ நாமம். ‘அரஹர’ என்று சொல்வதால் நம் துன்பங்கள் தீயிலிட்ட பஞ்சாக எரியும்.

உபவாசம்: பாவங்கள் செய்யாது, சுகபோகங்களை விட்டு, மந்திர ஜபம், பூஜை, சத்சங்கம், ஆகாரம் உண்ணாதிருத்தல் இவையே உபவாசத்தின் குணங்களாகும்.

கோலம்: வாழ்க்கை சுக துக்கம் பின்னல்களால் உருவானது. எறும்பு முதலான ஜீவன்களிடமும் நாம் கருணை காட்டவே அரிசி மாவால் கோலம் போட வேண்டும்.

நமஸ்காரம்: பெண்கள் பஞ்சங்க நமஸ்காரமும், ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும்.

விபூதி: நாம் இறுதியில் சாம்பலாகப் போவதை உணர்வதே விபூதி தரிப்பதன் பொருள். நாம் மண்ணில் கலப்பதை அறிவிப்பதே வைணவர்களின் திருமண். விபூதியை மூன்று பட்டைகளாகத் தரிப்பதன் பொருள் – ஆணவம், கன்மம், மாயை என்று மும்மலங்களும் தகிக்கப் பட்டதை உணர்த்துவது.

இறைவன் வீதி உலா: நோய்வாய்ப் பட்டோர், முதியோர், ஆலயம் செல்ல முடியாத தீட்டு உடையோர் ஆகியவர்களுக்கு இறைவன் தரிசனம் அளிக்க ஏற்பட்டதே திருவீதி உலா.




செவ்வாய், 7 ஏப்ரல், 2015

ஆயிரத்தெண் விநாயகர்

ஏப்ரல் 20 தீபம் இதழில் பிரசுரமானது...



 


















விநாயகருக்கென தமிழகத்தில் தனியாக அமைந்துள்ள முக்கிய கோயில்களில் ஒன்று ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண்  விநாயகர் ஆலயம். தேர், கொடிமரத்தொடு விநாயகப் பெருமான் இங்கு திருவிழாவும் காண்கிறார்.


'முதாகராத்த மோதகம்'....இந்த தோத்திரம் நாம் அனைவரும் அறிந்த ஸ்ரீ கணேச  பஞ்சரத்னம். இதை இயற்றியவர் ஆதிசங்கர பகவத்பாதர் என்பதும் நாம் அறிந்த விஷயம். அந்த தோத்திரத்தை ஆதிசங்கரர் இயற்றியது எங்கு தெரியுமா? தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுக மங்கலம் என்ற ஊரில் அமைந்துள்ள 'ஆயிரத்து எண்  விநாயக'ரின் சந்நிதியில்தான்.


எல்லா விநாயகர் ஆலயங்களையும் போன்று அரசமரத்தின் அடியில் இருந்த இந்த விநாயகர் ஆதி சங்கரரால் பாடப்பெற்றது எப்படி? மஞ்சளிலும், களிமண்ணிலும் உருவாக்கினாலும், எளிதில் இலவசமாகக் கிடைக்கும் அருகும், தும்பையும்  சாற்றினாலும், அரசமரத்தடியிலும், ஆலமரத்தடியிலும் அமர்ந்து தன்னை நாடி வந்தோரின் குறைகளைக் களையும் நம் பிள்ளையாரப்பன் ஆறுமுகமங்கலத்தில் அருளாட்சி செய்து வருகிறார். சுமார்  2000 ஆண்டுகளுக்கும் முன்பு உருவானவர்  இவ்விநாயகர் என்கிறது வரலாறு. அந்நாளில் யஞ்ஞம்மாள்புரம் என்ற அந்தணர் தெருவில் வாழ்ந்த  வேதியர்களால் ஒரு சிறு ஆலயத்தில் வணங்கப்பெற்றவர்.

நான்காம் நூற்றாண்டில் சோமர வல்லபன் என்ற அரசன் நர்மதை நதி தீரத்திலிருந்து 1008 அந்தணர்களை வரவழைத்து ஒரு யாகம் நடத்தினான். அதில் 1008க்கு ஒருவர் குறைவாக இருக்க, விநாயகர் தானே ஒரு பிராம்மணராக இருந்து யாகத்தை நடத்திக் கொடுத்ததால் அவர் பெயர் 'ஆயிரத்துஎண்  விநாயகர்' ஆயிற்றாம். யாகத்தை முடித்துக் கொடுத்த விநாயகர் ஆறுமுக மங்கலத்திலேயே தங்கி  ஆலயம் கொண்டதாக தல வரலாறு கூறுகிறது.

                                                            ஆலய விமானம்


பலகாலம் முன்பு ஒரு சிறிய சந்நிதியில் கோயில் கொண்டிருந்த கஜமுகனின் பெருமையும், இடர்களை நீக்கி அருளும் அவரது திருவருளும்  எங்கும் பரவ, கிருஷ்ணதேவ ராயர் காலத்தில் ஆலய மண்டபங்களும்கொடிமரம்,பலிபீடம்தேர் போன்றவையும்  உருவாக்கப்  பட்டன. தமிழ் நாட்டின் புகழ் பெற்ற விநாயகர் ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். பிள்ளையாரின் ரதோற்சவம் இங்கு மிக விமரிசையாக நடைபெறும்.விநாயகருக்கான பிரத்யேக ஆலயமாக விளங்கிய இவ்வாலயத்தில் உக்ரம பாண்டியனால் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஸ்ரீ கல்யாணி அம்மன் சந்நிதிகள் உருவாக்கப்பட்டன. இவ்வூரின் எல்லைக் காவல் தெய்வங்களான சுடலைமாடன், தோப்பாச்சி அம்மன், இளையநாயனார் மூவரின் ஆலயங்கள் வடக்கு, தெற்கு, மேற்கில் முக்கோண வடிவமாக அமைந்திருக்க, பிந்து ஸ்தானமாகிய நடுவில் இந்த பெருமான் கோயில் கொண்டுள்ளது மிகச் சிறப்பான தோற்றமாகும்.

                                                                  

 1945ம் ஆண்டில் பஞ்சலோகத்தாலான பஞ்சமுக விநாயகர், நடராஜா, முருகப் பெருமான் திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஐந்து திருமுகங்களும், பத்து முத்திரைகள் கொண்ட திருக்கரங்களும் கொண்டு ஹேரம்ப வினாயகர் என்ற பெயரில் காட்சி தரும் இப்பெருமானின்  அழகு மனத்தைக் கொள்ளை கொள்கிறது. 




இங்குள்ள நடராஜரின் தலையில் விரிசடையோ, ஜடாமுடியோ இன்றி கிரீடம் இருப்பது வித்யாசமான தோற்றமாகும்.இங்குள்ள ஒன்பது அடி உயரமுள்ள நடராஜாவின் சப்பரம் இப்பகுதியிலுள்ள சப்பரங்களில் மிக உயரமானதும், வித்யாசமான வேலைப்பாடு அமைந்ததுமாகும்.




இப்பெருமான் வரப்பிரசாதியாவார். கேட்டவற்றையும், நினைத்தவற்றையும் உடன் நிறைவேற்றுவதில்  இவருக்கு இணை இவரே என்கின்றனர். திருமணம், பிள்ளைப் பேறு, கல்வி, வேலை, வியாபாரம்  இவற்றிற்கான வேண்டுதல்கள் இங்கு அதிகம். அடிக்கடி விபத்து ஏற்படுவதுதிருமணம், படிப்பில் தடை ஏற்படுவது, வழக்குகளில் இழுபறி, அடிக்கடி உடல்நலக் குறைவு இவற்றிற்கு இவ்வாலய இறைவனை வேண்டி 108, 1008 தேங்காய்கள் உடைப்பதும், 108, 1008 விளக்குகள் ஏற்றுவதும் இவ்வாலயத்தின் சிறப்பான, தனிப்பட்ட வழிபாடாகும்.  அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி நாட்களில் 1008 விளக்கு ஏற்றும் வேண்டுதல் மிகப் பிரபலமாக நடைபெறுகிறது. பரிகாரங்களாக கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், அபிஷேக ஆராதனைகள் அடிக்கடி நடைபெறுகின்றன.


பண்டைய நாட்களில் இங்கு அன்னதானங்களும், உற்சவங்களும் மிக சிறப்பாக நடந்தனவாம். தற்போது ஆகம முறைப்படி இங்கு நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றன.சித்திரையில் நடைபெறும் பத்து நாள் பிரம்மோத்சவம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் விதவிதமான வாகனங்களில் அம்மை, அப்பன் சகிதமாக விநாயகர் எழுந்தருள்வார். பத்தாம் நாள் அன்று தேரோட்டம் நடக்கும். அந்த நாட்களில் இங்கு நடக்கும் அன்னதானம் மிகச் சிறப்புடையதாம். விநாயகர் கேது கிரகத்தின்  அதிபதி என்பதாலும், காளஹஸ்தீஸ்வரர்  இங்கு அருள் புரிவதாலும், காளஹஸ்தியைப் போன்றே இவ்வாலயம் கேது கிரக தோஷம், மற்றும் நாகதோஷத்திற்கான பரிகார நிவர்த்தித்  தலமாக விளங்குகிறது.


ஆதி சங்கரர் விஜய யாத்திரையாக திருச்செந்தூர் சென்றபோது வழியில் இவ்வாலய கணபதியை வணங்கி கணேச பஞ்சரத்னத்தை பாடினார். பின் செந்தூர் சென்று 33 ஸ்லோகங்களால்  முருகப்பெருமானை வியந்து, புகழ்ந்து பாடினார். ஆதி சங்கரர் முருகப் பெருமானைக் குறித்துப் பாடிய ஒரே தோத்திரம் ஸ்ரீ சுப்ரமணிய புஜங்கம். இதனை சொல்பவருக்கு சகல நன்மையையும் ஏற்படும் என்பது சங்கர பகவத் பாதரின் வாக்கு. இன்றும் திருச்செந்தூரில் தினமும் கணேச பஞ்சரத்னம் பாடிய பின்பே சுப்ரமணிய புஜங்கம் ஓதப்படுகிறது. ஆதிசங்கரரின் திருப்பாதங்கள் பட்ட இவ்வாலயத்தை நாமும் தரிசித்து ஆயிரத்து எண் வினாயகரின் திருவருளைப் பெறுவோம். தமிழ் அறிஞர் திரு கி.வா.ஜ.அவர்கள் இவ்வாலய இறைவனை சிறப்பித்து பாடியுள்ளார்.


திருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ. தூரமுள்ள ஏரல் சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரமுள்ள ஆறுமுகமங்கலத்திற்கு பஸ் அல்லது  ஆட்டோ மூலம் செல்லலாம். 
ஆலய நேரம்...காலை 6-11...மாலை--5-8
தொலைபேசி...0461 232 1486





ஆதி சங்கரர் அருளிச் செய்த ஸ்ரீ கணேச பஞ்சரத்ன ஸ்லோகம்

முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் |
கலாதராவதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் |
அனாயகைக நாயகம் வினாஸிதேப தைத்யகம் |
நதாஸூபாஸூ நாஸகம் நமாமி தம் வினாயகம் || 1 ||

நதேதராதி பீகரம் நவோதிதார்க பாஸ்வரம் |
நமத்ஸுராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம் |
ஸுரேஸ்வரம் நிதீஸ்வரம் கஜேஸ்வரம் கணேஸ்வரம் |
மஹேஸ்வரம் தமாஸ்ரயே பராத்பரம் நிரந்தரம் || 2 ||

ஸமஸ்த லோக ஸங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம் |
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம் |
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யஸஸ்கரம் |
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் || 3 ||

அகிஞ்சனார்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம் |
புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம் |
ப்ரபஞ்சனாஸ பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம் |
கபோல தானவாரணம் பஜே புராண வாரணம் || 4 ||

நிதாந்த  காந்த  தந்த காந்தி மந்த காந்த  காத்மஜம் |
அசிந்த்ய ரூபமந்த  ஹீன மந்தராய க்ருந்தனம் |
ஹ்ருதன்ந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகினாம் |
தமேகதந்தமேவ தம் விசின்தயாமி ஸந்ததம் || 5 ||

மஹாகணேஸ பஞ்சரத்னமாதரேண யோ‌ன்வஹம் |
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன் கணேஸ்வரம் |
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம் |
ஸமாஹிதாயு ரஷ்டபூதி மப்யுபைதி ஸோ‌சிராத் ||




காதால் கேட்கவும்