Thanjai

Thanjai

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

கண்ணனைக் கண்டு கண் திறந்த ராதை


தி இந்து செப்டம்பர் 24, 2015 நாளிதழ் இணைப்பான ஆனந்த  ஜோதியில் வெளியான கட்டுரை

  





ராதாஷ்டமி...

கிருஷ்ணன் என்றாலே நமக்கு நினைவில் முதலில் தோன்றுவது ராதையின் நினைவுதான்!

இறைவனை வழிபடும் பக்தனின் பல பாவங்களில் ஒன்றான காதல்பாவத்தில் கிருஷ்ணனை நேசித்து அவனுடன் ஓருயிராக இணைந்து, ராஸ லீலைகளில் மகிழ்ந்து, அணுவளவும் அவனை விட்டுப் பிரிய மனமின்றி வாழ்ந்த ராதையின் பக்திக்கு அளவேது?

பரமாத்மாவான இறைவனுடன் இரண்டறக் கலந்த ஜீவாத்மா ரூபிணி ராதை! அதனாலேயே அவள் பெயரைத் தன்னோடு இணைத்து ராதாகிருஷ்ணன் ஆனார் அந்த பரமன்! அந்த ராதையின் பிறந்த நாளான ராதாஷ்டமி, உத்தரபிரதேசத்திலுள்ள ராதை பிறந்த பர்ஸானாஎன்ற ஊரில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

கோகுலத்தில் யாதவ குல அரசன்  வ்ருஷபானு ஒருநாள் யமுனை நதிக்கரையில் அழகிய தாமரை மலரில் ஒரு பெண் குழந்தையைக் கண்டார். ஆர்வத்துடன் அதனை அள்ளி எடுத்தவர் உடன் இல்லம் சென்று தன மனைவி கீர்த்திதாவிடம் கொடுத்தார். ஆனால் அக்குழந்தையின் கண்கள் பார்க்கும் தன்மையற்று இருந்ததை அறிந்த தம்பதியர் மன வருத்தத்தில் ஆழ்ந்தனர்.

தன்  தோழியின் குழந்தையைக் காண நந்தகோபனுடனும், கண்ணனுடனும் வந்த யசோதை குழந்தைக்கு கண் பார்வை இல்லாததை அறிந்தாள் . அச்சமயம் அன்னையின் கையிலிருந்து துள்ளி எட்டிப் பார்த்த கண்ணனைக் கண்டதும் ராதையின் கண்கள் பளிச்சென்று திறந்து கொண்டதாம்.

ராதையின் கண்கள் திறந்தன
கண்ணன் பிறப்பதற்கு முன்பே பிறந்த ராதை, கண்களைத் திறந்தது கண்ணனைப் பார்த்த பின்புதானாம்! கோபியர் அனைவருக்குமே கண்ணன் இனியவன் என்றாலும் ராதையின் அன்பு மட்டுமே அவனைக் கட்டிப் போட்டதாம்!

கண்ணனின் மேல் ராதையின் அன்பு ஒரு பெருங்கடல் என்றால் மற்ற கோபியரின் அன்பு ஒரு சின்ன குளத்தளவே! அயனா என்ற யாதவனின் மனைவியான ராதை, கண்ணனின் குழலோசை கேட்டவுடன் போட்டது போட்டபடி ஓடி வந்து விடுவாளாம்! திருமணமான பெண்தான் என்றாலும் கிருஷ்ணன் மேல் கொண்ட காதலை அவளால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

கண்ணனும் பெரும்பாலான நேரம் ராதையுடன் இருப்பதிலேயே மகிழ்ந்தார்! கண்ணன் கடவுள்; அவரது ஆத்மா ராதா! உலகுக்கு ஆற்றலை அளிப்பவன் கண்ணன். அவனது சக்தி ராதா! உடல் கண்ணன் என்றால் அவனது உயிர் ராதா! பரமாத்மா கண்ணன்...ஜீவாத்மா ராதை! பரமாத்மாவும், ஜீவாத்மாவும் இணைவதைக் குறிப்பதே ராதா கிருஷன பிரேமை.

உத்தரப்பிரதேசத்தில் மதுராவுக்கு அருகில் பிரம்மஸரண்என்ற மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பர்ஸானா என்ற சிறிய ஊர்தான் ராதை பிறந்த இடம். 5000 ஆண்டுகளுக்கு முன் பிறந்த காதலுக்கு இலக்கணமாகத் திகழும் ராதை இங்கு ராதாராணிஎன்றே குறிப்பிடப்படுகிறாள். இங்கு அமைந்துள்ள ராதாராணி ஆலயம், ராஜா பீர்சிங் என்பவரால் 1675-ம் ஆண்டு, செந்நிறக் கற்களால் மிக அழகாக உருவாக்கப்பட்ட்து. அருகிலேயே இக்கால இணைப்பாக பளிங்கினால் கட்டப்பட்ட ஆலயமும் உள்ளது.

ராதை வழிபாடு நடக்கும் ஆலயம்
இவ்வூர் மக்கள் ஒருவரை ஒருவர் ராதே ராதேஎன்று சொல்லி பேசிக் கொள்வது, இவர்கள் ராதாபக்தியை உணர்த்துகிறது. ராதை செல்லமாக இங்கு லாட்லிஜிஎன்று அழைக்கப்படுகிறாள். ராதை வழிபாடு நடைபெறும் ஒரே ஆலயம் இது மட்டுமே! ராதாஷ்டமி அன்று மட்டுமே இங்குள்ள ராதாரானியின் பாத தரிசனம் பெறலாம். மற்ற நாட்களில் பாதங்கள் மூடப்பட்டிருக்கும்.

இங்குள்ள ப்ரேம ஸரோவர்என்ற நதிக் கரையில்தான் ராதையும் கண்ணனும் முதலில் சந்தித்துக் கொண்டார்களாம்! ராதாஷ்டமி கோகுலாஷ்டமிக்குப் பிறகு அமாவாசைக்குப் பின்பு வரும் அஷ்டமியில்  கொண்டாடப்படுகிறது. கௌடிய வைஷ்ணவர்களின் முதல் தெய்வமாகப் போற்றப் படுகிறாள் ராதை. ராதாஷ்டமி அன்று ஏகாதசி போன்றே விரதம் இருப்பார்கள். ரதக்ரிஷ்னரை பல வண்ண மலர்களால் அலங்கரித்து, அன்று முழுதும் பஜனைகளைப் பாடி திளைப்பர். அன்று ராதைக்கு சிவப்பு வண்ண உடைகளையே அணிவிப்பர். அவர்களின் பிரதான தெய்வமாயும், தம்மைக் காக்கும் தாயாகவும்  ராதையை அவ்வூர் மக்கள் வணங்குகின்றனர்.

ராதையின் கிருஷ்ண பக்தியைப் பற்றிக் கூறும் வேடிக்கையான ஒரு கதை இது! ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு ராஸலீலா வைபவத்திற்காக ராதை, பார்வதியை அழைத்திருந்தாளாம். அது பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி. பார்வதியும் மகாதேவரிடம் அனுமதி வேண்ட, சிவனோ தானும் பெண் வேடத்தில் வந்து கலந்து கொள்வேன் என்று பிடிவாதம் செய்து உடன் வந்தார். அழகிய பெண்ணாக வந்த பரமசிவனை அடையாளம் கண்டு கொண்ட கண்ணன், ராதையுடன் செய்து கொண்டிருந்த ராஸலீலையிலிருந்து விலகி வந்து ஈசனை வரவேற்க, தன்னைத் தவிர்த்து வேறொரு பெண்ணுடன் கண்ணன் நடனமாடுவதைக் கண்ட ராதா கோபம் கொண்டு ஆழ்ந்த தவத்தில் அமர்ந்து விட்டாள்.

பரமசிவன் அவளை சமாதானம் செய்து தரிசனம் கொடுத்தாராம். இதன் காரணமாக கோபி வடிவத்தில் வந்த ஈசன் கோபிநாத் கோபேஸ்வர்எனப்பட்டார். காலையில் சிவலிங்கத்திற்கு பூஜையும், மாலை தினமும் சிவபெருமான் கோபி ரூபத்திலும் வழிபடப்படுகிறார்.
கண்ணனின் ஆசைக் காதலியாக கண்ணனை விட்டுப் பிரியாமல் கோகுலத்திலும், பிருந்தாவனத்திலும் ஆடிப்பாடி கூடி மகிழ்ந்த ராதை, கண்ணன் மதுராவுக்குச் சென்ற பின்பு அவனையே நினைத்து அழுதாளாம்; தன் கரங்களில் முகத்தைப் புதைத்து கண்ணீர் சிந்திக் கொண்டே இருந்து, சற்றும் உறங்காமல் இருந்தாள் என்று உத்தவர் பிரஹ்லாத சமிதையில் கூறுகிறார். இவ்வருடம் செப்டம்பர் 21ம் தேதி ராதாஷ்டமி.

கண்ணா, உன்னை விட்டு நான் வாழ்வதெப்படி?” என ராதை கேட்க, “நான் என்றும் யுகயுகமாய் உன்னுடன்தான் இருப்பேன்என்று ஆறுதல் சொன்ன கண்ணனை இன்றும் நாம் நினைவுறும்போது, முதலில் ராதைதானே வந்து நிற்கிறாள். அன்று கிருஷ்ணர் ராதையை திருமணம் செய்து கொள்ளவில்லை; ஆனால் இன்று ராதா கல்யாணம் எல்லா இடங்களிலும் விமரிசையாக நடைபெறுகிறது. ராதா இல்லாமல் கிருஷ்ணன் இல்லையே? நாமும் இந்த ராதாஷ்டமி நாளில் ராதையை வணங்கி அருள் பெறுவோம்!




1 கருத்து:

  1. கண்ணன் மேல் தீராத காதலும் பக்தியும் கொண்ட ராதையைப்பற்றிய பதிவு படிக்கவே குதூகுலமாக உள்ளது.

    //கண்ணனைக் கண்டு கண் திறந்த ராதை - தி இந்து செப்டம்பர் 24, 2015 நாளிதழ் இணைப்பான ஆனந்த ஜோதியில் வெளியான கட்டுரை//

    மிக்க மகிழ்ச்சி. மிகவும் சந்தோஷம். மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

    { நிறைய பதிவுகள் நான் பார்க்காமல் படிக்காமல் விட்டுப்போய் உள்ளன. மற்றவைகளுக்கான என் பின்னூட்டங்கள் நாளையும் தொடர்ந்து வரும். }

    பதிலளிநீக்கு