Thanjai

Thanjai

புதன், 11 நவம்பர், 2015

சத்ரு சம்ஹாரர்

தீபம் நவம்பர் 20 இதழில் தஞ்சை மாவட்ட கோயில்கள் பகுதியில் பிரசுரமானது




பக்தருக்கருளும் பட்டுக்குடி முருகன்

பட்டுக்குடி முருகன்

அழகுத் தமிழ்க் குமரன் ஆறுமுகனுக்கு குன்றுகள் தோறும் கோயில் உண்டு.அந்தக் குமரன் குன்றில்லாமல் கோயில் கொண்ட தலங்களில் ஒன்று பட்டுக்குடி ஆலயம். எட்டுக்குடி முருகனை அறிந்த நமக்கு பட்டுக்குடி ஆறுமுகனைப் பற்றி தெரிவதில்லை.  பல சிறப்புகளையும் பெற்று விளங்கும் இவ்வாலயத்தில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் வித்யாசமான கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்து அவர்களின் குறைகளை கண நேரத்தில் காணாமல் போகச்  செய்து, இகபர சுகங்களை அள்ளித் தரும் வள்ளலாகக் காட்சி தருகிறார்.. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட இவ்வாலய இறைவனின் அழகு நம் கண்ணையும், மனதையும் கொள்ளை கொள்கிறது.

சோழ மன்னர்கள் காலத்தில் கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தைக் கட்டியபோது மீதமிருந்த கற்களைக் கொண்டு கட்டப்பட்டதாம் இவ்வாலயம். பின் கால மாற்றங்களால் சிதைவடைந்தது. கடவுள் சிலைகள் சிதிலமடைந்தன. ராணி மங்கம்மாவின் ஆட்சிக் காலத்தில் புதிய சிலைகள் உருவாக்கப்பட்டு ஆலயம் புனரமைக்கப்பட்டது. கிழக்கு பார்த்த ராஜகோபுரம். இவ்வாலயம் இங்கு அமைந்த விதம் பார்ப்போம். அறுபடை வீடுகளில்  சுவாமிமலையில் தகப்பன் சுவாமியாக சிவபெருமானுக்கு உபதேசம் செய்து, உயர்ந்த கோலத்தில் கையில் வேல்கொண்டு காட்சி தருகிறார் அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பிரமணிய சுவாமி!  ஆண்டிக்கோல இறைவனை மணக் கோலத்தில் காண ஆசைப்பட்டனராம் தேவர்கள். உடன் மனம் மகிழ்ந்த குமரப் பெருமான் வள்ளி, தேவானையுடன் ஆறுமுகங்களுடன், மயிலுடன் அற்புதக் காட்சி தந்த தலமே இந்த பட்டுக்குடி. தனயனின் அழகுத் திருக்கோலம் கண்டு வாழ்த்திய பெற்றோர்கள் பசுபதீஸ்வரர், மங்களாம்பிகை என்ற பெயரில் அங்கேயே கோயில் கொண்டனர்.
 
வாதாபி கணபதி


இனி ஆலயத்துள் செல்வோம். ராஜகோபுரத்தின் அருகில் அமர்ந்திருக்கும் கணபதியை வணங்கி உள்ளே சென்றால், இறைவன் பசுபதீஸ்வரர் சம்ன்னதி. கருவறைக்கு வெளியில் காட்சி தரும் கணபதி, முருகனை வணங்கி இறைவனை தரிசிப்போம். சிறிய லிங்கத் திருமேனி. அங்குள்ள அமைதி நம்மை இறைவனுடன் ஐக்கியப் படுத்துவதை உணர முடிகிறது.ஈசனின் இடப்பக்கத்தில் தென்திசை நோக்கி காட்சி தரும் அம்மன் மங்களாம்பிகை நான்கு கரங்களுடன் அழகுறக் காட்சி தருகிறாள். அன்னை வேண்டுதல்களை நிறைவேற்றுவதில் வரப்பிரசாதியாம்.

வெளியில் வந்து பிரதட்சணமாகச் சென்றால் ஈசனுக்கு பின்னால் பவ்யமாகக் காட்சி தருகிறார் ஷண்முக சுப்பிரமணியர்.இரு புறமும் வள்ளி, தேவசேனையுடன் அசுர மயிலை வாகனமாகக் கொண்டு நின்ற நிலையில் ஆறு சிரங்களும்,பன்னிரு கரங்களும் கொண்டு அருள் பொங்கும் வதனத்தோடு காட்சி தரும் அவரின் அழகில் சொக்கிப் போகிறோம். சிரித்த முகத்துடன், அபாய, வர ஹஸ்தங்களுடன், வேலும், சேவல் கொடியும் கொண்டு கம்பீரமாக நிற்கிறார் கார்த்திகேயப் பெருமான். உன் கவலைகளை  என்னிடம் விடு. நான் அவற்றை நீக்கி உன்னைக் காப்பாற்றுகிறேன்' என்று ஆறுதல் தருவது போலக் காணப்படுகிறார் ஆறுமுகசுவாமி. ஆண்டிக்கோல  முருகப் பெருமான் முக்தி மட்டுமே தருபவராம். ஆனால் மணக்கோலப் பெருமானோ புத்தியும், முக்தியும் தருபவர் என்று விளக்கம் சொன்னார் ஆலய அர்ச்சகர் திரு ராஜு குருக்கள். இங்குள்ள முருகப் பெருமானின் சிலை, எட்டுக்குடி, என்கண் க்ஷேத்திரங்களில் சிலை வடித்த  ஸ்தபதியால் வடிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.

பசுபதீஸ்வரர்

மங்களாம்பிகா

முருகன்

தந்தையும், மகனும் ஒரே நேர்க் கோட்டில் அமைந்த தலச் சிறப்பு பெற்றது இவ்வாலயம். இவ்வாலயத்தில் ஈசனுக்கும்முருகப் பெருமானுக்கும் அமைந்துள்ள கருவறைக் கோபுரங்கள் ஒரே உயரத்தில் அமைந்து இருவரும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.. ஆலய பிரகாரத்தில் பல்லவர் கால சிற்பக்கலையுடன் காணப்படும் வாதாபி கணபதி அழகு. இங்கு குருவான பைரவரும், சீடன் சனீஸ்வரரும் இணைந்து காணப்படுவதும் சிறப்பான தோற்றமாகும். இது மங்குசனி என்கிறார் அர்ச்சகர். பைரவரின் இடப்பக்கம் தேவியின் அம்சம் என்பதால் அவரது காதில் ஒரு ஓட்டை உள்ளது. இங்கு மற்ற முருகன் ஆலயங்கள் போல் இல்லாது இடும்பன் சந்நிதி கோபுரத்திற்கு பின்னால்  சில படிகள் ஏறிச் சென்று தரிசிக்க வேண்டும்.காவிரியில் வெள்ளம் வரும் சமயங்களில் இந்த ஊரை அதிலிருந்து காப்பாற்றவே இடும்பன் உயரமாக சந்நிதி கொண்டுள்ளாராம்.  பலமுறை வெள்ளப் பெருக்கு வந்தபோதும் இவ்வூர் அதிகம் பாதிக்கப் படாததற்கு இவரே காரணமாம். இடும்பனே  பட்டுக்குடியின் காவல் தெய்வமாக வணங்கப் படுகிறார்.

ஆலய விமானம்

பைரவர்

இடும்பன்

ராஜூ குருக்கள்


இங்குள்ள ஷண்முகஸ்வாமிக்கு செய்யப்படும் சத்ரு சம்கார பூஜை எல்லா நலன்களையும் அள்ளித் தருமாம். திருமணம், புத்திரப் பிராப்தி, கணவன் மனைவி ஒற்றுமை, தொழில் அபிவிருத்தி, நல்ல வேலை, சொத்து வழக்குகள் என்று எந்த பிரச்னையும் தீர இங்கு கந்தப்பெருமானை வேண்டி 8 செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் சத்ரு சம்கார பூஜை செய்தால் விரைவில் அவர்கள் எண்ணம் ஈடேறும். இந்த பூஜைக்கு ஆறு மலர்கள், ஆறு பழங்கள், ஆறுவித அன்னங்கள், ஆறு நிவேதனங்கள்  வைத்து ஆறு முகங்களுக்கும் அபிஷேக, அர்ச்சனை செய்வதால் ஒன்றுக்கு ஆறாகப் பலன் தருபவராம் இவ்வாலய இறைவன்.

தன்னை நம்புபவரைக் கைவிட மாட்டான் இந்த ஆறுமுகப் பெருமான் என்பதற்கு நிறைய சம்பவங்களைச் சொல்கிறார்கள் அவ்வூர் மக்கள். இவ்வாலயத்தில் வேண்டிக் கொண்டு கர்ப்பிணியாக இருந்த ஒரு பெண்ணுக்கு பிரசவத்திற்கு முன்பு ஏதோ பிரச்னை ஏற்பட்டதாம். அவள் இந்த ஆறுமுகனையே சதா ஜபித்துக் கொண்டு  நம்பிக்கையுடன் இருந்தாளாம். மருத்துவமனையில் சிகிச்சை நடந்தபோது யாரோ ஒருவர் இந்தப் பெண்ணைப் பார்த்து விபூதி கொடுத்து இட்டுக் கொள்ள சொன்னாராம். அந்தப் பெண்ணும் அப்படியே செய்து மருத்துவர்களே ஆச்சரியப் படும் விதத்தில் குணமாகிவிட்டாளாம். வந்தவர் அவரது பையை மறந்து வைத்துவிட்டுப் போயிருக்கிறார். அதில் 'யாமிருக்க பயமேன்' என்ற வாசகம் இருந்ததாம். உடன் இருந்தோர் அந்தப் பையுடன் அவரைத் தேடியபோது காணவில்லையாம். முருகனே அந்தப் பெரியவர் உருவில் வந்து அப்பெண்ணைக் காப்பாற்றியிருக்கிறார். இது சமீபத்தில் நடந்தது என்று மெய்சிலிர்க்க கூறினார்கள் அவ்வாலய ஊழியர்கள்.

கடந்த 205ம் ஆண்டில் நடந்த கும்பாபிஷேகத்தின்போது மாரியப்பன் என்பவர் கர்ப்பக்கிரகத்தில் இறைவன் பீடத்திற்குக் கீழே மருந்து கலந்து வைத்தபோது திடீரென்று 'முருகன் என் மோதிரத்தைக் கேட்கிறான்'என்று சொல்லியபடி தன்  மோதிரத்தை மருந்துடன் உள்ளே திணித்து விட்டாராம். அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்துவிட அர்ச்சகர் அவருக்காக மோட்ச தீபம் ஏற்றி தீபாராதனை செய்து அவர் நற்கதி அடைய வேண்டிக் கொண்டபோது முருகனின் இடக்கையிலிருந்து ஒரு பூ கீழே விழுந்ததாம். இதனை அந்த முருகனின் கருணையாக மனம் நெகிழ்ந்து, மெய்சிலிர்க்க கூறினார் ராஜு குருக்கள். தன்னை நம்புபவரை என்றும் கைவிட மாட்டான் எங்கள் ஆறுமுகன் என்கிறார். இவ்வாலயம்  மேன்மை அடைய மிகவும் ஈடுபாட்டுடன்  உழைக்கிறார்கள் இவரும், ஆலய நிர்வாகிகளும்.

இக்கோயிலில் பங்குனிமாதம் ரோகிணியில் நடைபெறும் லட்சார்ச்சனை மிகச் சிறப்பானதாகும். கார்த்திகை, திருவாதிரை, கந்த சஷ்டி, ஆடி, தை கிருத்திகைகள், நவராத்திரி உற்சவங்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. ஆலயம் சிறப்பாகப் பராமரிக்கப் படுகிறது. வரும் 2017ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பல சிறப்புகளைக் கொண்ட வரப்பிரசாதியான இந்த முருகப் பெருமானை தரிசித்து, கும்பாபிஷேகத் திருப்பணியில் பங்கு கொண்டு வாழ்வில் நலமும், வளமும் பெறலாம்.

இவ்வாலயம் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம்-  திருவையாறு பாதையில் கணபதி அக்ரஹாரம்  அருகில் அமைந்துள்ளது.

தொலைபேசி...9688726690 




5 கருத்துகள்:

  1. அழகான படங்களுடன் விளக்கங்கள் மிகவும் அருமை... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. சத்ரு சம்ஹாரர் + பக்தருக்கருளும் பட்டுக்குடி முருகன் ஆகிய இரண்டுமே தெய்வீக மனம் கமழும் பதிவுகள்.

    //தீபம் நவம்பர் 20 இதழில் தஞ்சை மாவட்ட கோயில்கள் பகுதியில் பிரசுரமானது//

    மிகவும் சந்தோஷம். மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

    பதிலளிநீக்கு