Thanjai

Thanjai

செவ்வாய், 20 டிசம்பர், 2016

வரம் தரும் வீர மங்கள ஆஞ்சநேயர்

தீபம் 05-01-2017 இதழில் வெளியான கட்டுரை

எடுத்துக் கொண்ட தலைப்புவரம் தரும் வீர மங்கள ஆஞ்சநேயர்எழுதிய தலைப்புவிரும்பும் வரம் தரும் வீர மங்கள ஆஞ்சநேயர் (ஹனுமத் ஜெயந்தி 29 டிசம்பர்)



முழுக் கட்டுரையும் இதோ!

மார்கழியில் வரும் அமாவாசையும், மூல நட்சத்திரமும் சேர்ந்த தினம் ஹனுமத் ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. ராமபக்தியில் திளைத்து ராமரின் நினைவிலேயே இன்றும் ஹனுமான் சூக்ஷ்ம ரூபமாக இருப்பதாக ஐதீகம். இன்றும் ராமரின் கதை சொல்லப்படும்  இடத்தில் எல்லாம் ஹனுமான் சென்று பயபக்தியுடன் கேட்பதாக கூறப்படுகிறது. அந்த ஹனுமானின் ஆலயங்கள் நாடு முழுதும் உள்ளது. பால  ஹனுமான், பஞ்சமுக ஹனுமான், வீர ஹனுமான் என்று பல பெயர்களில் அழைக்கப்படும். ஹனுமத் ஜெயந்தி நாட்டில் மார்கழி மாத அமாவாசையிலும், வட  நாடுகளில் சித்திரை பௌர்ணமி அன்றும், ஆந்திராவில் 41 நாட்கள் விமரிசையாகவும் கொண்டாடப்படுகிறது. 

நல்லாத்தூரில் ஆலயம் கொண்டு அருள் தரும் வீரமங்கள ஆஞ்சநேயர் ஸ்ரீவியாசராயரால் உருவாக்கப்பட்டவர். 15ம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்களின் குருவாக விளங்கிய வியாசராயர் ஒருமுறை துன்புற்ற போது,ஆஞ்சநேயரைத் துதித்து தன் துன்பம் நீங்கப் பெற்றால், தம் வாழ்நாள் முழுதும் ஹனுமனுக்கு பல ஆலயங்கள் எழுப்புவதாக வேண்டிக் கொண்டார். அவ்வாறே  732 ஹனுமான் ஆலயங்களை ஏற்படுத்தினார். அவற்றுள் பிரசித்தமான ஒன்றே குசஸ்தலை ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டுள்ள வீரமங்கள ஆஞ்சநேயர் ஆலயம். 

வியாசராயர் தன்  சீடர்களுடன் ஆஞ்சநேயரின் சிலையை திருப்பதியில் பிரதிஷ்டை செய்ய எடுத்துச் சென்றபோது, நதியில் வெள்ளம் வந்துவிட்டதால் நல்லாத்தூரிலேயே ஆலயம் எழுப்பி, அனுமனை ஸ்தாபித்தார். அதனாலேயே திருப்பதியை நோக்கி செல்வது போன்றும், ஹனுமானின் முகம் திருப்பதி இருக்கும் திசை நோக்கியும்  உள்ளதாம்.

பல நாட்கள்  மண்ணில் பாம்புப் புற்றில் புதைந்து கிடந்த ஆஞ்சநேயரை அக்கோயிலில் குடிகொண்டிருக்கும் நாகங்கள் பூஜித்து வந்ததாம். சென்னையைச் சேர்ந்த திரு சக்கரவர்த்தி என்ற தொழிலதிபரின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர் தனக்கு ஆலயம் எழுப்பும்படி கூறி, அவரால் சீர்திருத்தப்பட்டு அழகிய ஆலயம் உருவாகியது. 1998ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இன்றும் நாகங்கள் இந்த ஹனுமனை தினமும் வந்து வழிபட்டு செல்வதாகக் கூறப்படுகிறது.



ஐந்தரை அடி உயர ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பால ஆஞ்சநேயராகக் காட்சிதரும் இவரின் அங்கத்தில் அணிந்திருக்கும் ஆபரணங்களின் அழகே அழகு. கிழக்கு பார்த்த சந்நிதியில் வடக்கு நோக்கியவாறு காட்சிதரும் ஆஞ்சநேயரின் கண்கள் கிழக்கு பார்த்து அமைந்திருப்பது சிறப்பு. 


வலக்கை அபய ஹஸ்தமாகவும், இடக்கையில் தாமரை மொட்டும் தாங்கியபடி காட்சி தரும் அவரது கைகள்  கேயூரம், அங்கதம், கங்கணம் என்ற ஆபரணங்களோடு விளங்குகிறது. தாமரை ஞானம், ஐஸ்வர்யம், வெற்றி மூன்றையும் உணர்த்துவதால் முத்தேவியரான லட்சுமி, சரஸ்வதி, துர்கையை எடுத்துக் காட்டுகிறது. கால்களில் தண்டை, நூபுரம் இவற்றுடன் பிரம்மச்சாரி என்பதன் அடையாளமாக கௌபீனம், தலையில் முடியப்பட்ட சிகை, பூணூல் இவற்றோடு வைணவர்களின் அடையாளமாக நெற்றியில் திருமண்   உள்ளது. பிங்காக்ஷம் என்னும் பொன்வண்ண கண்மணிகளுடன் , பாதி மூடிய விழிகளால் பக்தர்களுக்கு தன்  அருளை வாரி வழங்குகிறார்.


பஞ்சமுக குண்டலங்களைக் கொண்ட அவரது அகன்ற காதுகள் சதாநேரமும் ராமகதையில் லயித்துள்ளது.இரண்டு கைகளிலும் கேயூரம், கங்கணம், பரிஹரியாஜா என்ற அழகிய ஆபரணங்களும், காலில் தண்டை, நூபுரம் அணிந்து சர்வாலங்கார பூஷிதனாகக் காட்சி தருகிறார். கோரைப்பல், இடுப்புப் பட்டை,கழுத்தில் நவரத்னம் பதித்த சாலிக்ராம மாலை, தலைக்கு மேல் உயர்ந்த வாலில் கட்டிய மணி என்று அத்தனை அழகாய் இருக்கிறார் பால  ஆஞ்சநேயர். 

அவரது பின்பக்கம்மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களும் வடிக்கப் பட்டுள்ளன. அவர்முன் நின்று நம் வேண்டுதல்களை முறையிடும்போது 'யாம் இருக்க கவலையில்லை' என்று பாதி திறந்த அருள் விழிகளால் நம்மைப்  பார்த்து கையசைத்து ஆறுதல் சொல்வது போல தோன்றுகிறது. மிக்க வரபிரசாதியானவராம்   இவர்! மலை போன்ற துன்பங்களையும் பனிபோல நீக்குவதில் இந்த ஹனுமனுக்கு இணை இவரே என்று கூறுகின்றனர். திருமண பாக்கியம், குழந்தைப்பேறு, நல்ல வேலை, நோயற்ற வாழ்விற்கு இந்த ஹனுமனை வழிபட்டால் உடன் பலன் நிச்சயம்.

ஆஞ்சநேயரின் கருவறை விமானத்தில் தெற்கில் சங்கு, சக்ரதாரியான யோக   ஆஞ்சநேயரும்,வடக்கில் இடுப்பில் கைகளுடன் காட்சி தரும் வீர ஆஞ்சநேயரும், கிழக்கில் பக்த ஆஞ்சநேயரும், மேற்கில் பத்து கரங்களும், ஐந்து முகங்களும் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயரும் அழகுறக் காட்சி தருகின்றனர்.

ஆஞ்சநேயர் சன்னிதியை சுற்றிலும் சீதா, லக்ஷ்மண ஸ்ரீராமர், லக்ஷ்மி வராகர், லக்ஷ்மி நரசிம்மர், லக்ஷ்மி ஹயக்ரீவர், மங்கள கணபதி, தக்ஷிணாமூர்த்தி,நாகதேவதை, வாகனங்களுடன் நவகிரக சன்னிதிகள் அமைந்துள்ளன. சனீஸ்வரர் ஆஞ்சநேயரை நேருக்கு நேர் பார்த்தவாறு அமைந்துள்ளார். அதனால் இத்தலம் ராகு, கேது தோஷப் பரிகாரத் தலமாகப் போற்றப்படுகிறது. 


வெளியில் 42 அடியில் சுதைரூபமாகக் காட்சி தரும் அமர்ந்த ஆஞ்சநேயரின் வால்
  அவரது இடது கைக்குள்ளாக வெளியில் வந்திருப்பது போல் அமைத்திருப்பது அற்புதமான கலையம்சமாகும்.



வைகானச ஆகமப்படி பூஜைகள் நடைபெறும் இவ்வாலயத்தில் ராமநவமி, ஹனுமத் ஜெயந்தி மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றன. மற்றும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகள் மிக விசேஷமானவை.

ஆலயம் நல்லாத்தூரில் குசஸ்தலை ஆற்றின் கரையில் திருத்தணியிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

ஆலய நேரம்---காலை 6 -12---மாலை 4 -8    தொலைபேசி...04118-270666