Thanjai

Thanjai

வியாழன், 23 மார்ச், 2017

ஆயுதம் ஏந்தா அழகன்


தீபம் ஏப்ரல் 5, 2017 இதழில் வெளியான கட்டுரை

காலாராம் ஆலயம்..
பஞ்சவடி...நாசிக்...மகாராஷ்டிரா





அம்பும், வில்லும் இல்லாத அழகிய ராமர்...


காலாராமர்

ஒக மாட, ஒக பாண, ஒக பத்னி’ என்று (ஒரு சொல், ஒரு வில், ஒரு இல்) போற்றப்பட்ட ஒரே கடவுள் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. ஏனைய கடவுளர் தத்தம் மனைவியருடன் மட்டுமே காட்சி தரும்போது, ஸ்ரீராமன் மட்டுமே, தன் தம்பி, தன் தொண்டன் ஹனுமான் என்று அனைவரையும் தன்னுடன் இணைத்து நிற்பவர்.

ஸ்ரீராமனை எண்ணும்போதே நமக்கு முதலில் நினைவு வருவது அவரது 14 ஆண்டு கால வனவாசம். அதில் பெரும்பகுதியை அவர்கள் நாசிக்கிலுள்ள பஞ்சவடியில்தான் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. கோதாவரியின் கரையில் அமைந்துள்ள நாசிக்கில் பல இடங்கள் ராமாயணத்தின் நிகழ்ச்சிகளை நம் கண் முன் கொண்டு வருகின்றன.

இங்குள்ள சீதா குகையில் சீதையின் சமையலறை உள்ளது. இங்கிருந்துதான் சீதையை ராவணன் அபகரித்துச் சென்றான். லக்ஷ்மணர் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்ததால் இவ்விடம் நாசிகா (மூக்கு) எனப்பட்டு 'நாசிக்'காக மாறியது.

கோதாவரி நதி மிகவும் புனிதமான நதியாகும். இங்கு பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கும்பமேளா  நடைபெறுகிறது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது இந்நதியில் சில துளிகள் அமிர்தம் விழுந்ததாம். இதில் ஒருமுறை நீராடினால் கங்கையில் 60000 முறை நீராடிய புண்ணியம் கிடைக்கும் எனப்படுகிறது. கோதாவரி நதிக்கரையிலுள்ள ஆலயங்கள் ஒவ்வொன்றும் ஒரு அழகு.

பஞ்சவடியில் முக்கியமான அழகும், கம்பீரமும் கலைத் திறனும் கொண்டு விளங்கும் 'காலாராம் ஆலயம்', 83 அடி உயர கோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. 1788ம் ஆண்டு ரங்கராவ் ஓடேகர் என்பவரால்  கட்டப்பட்டது. அவரது கனவில் தோன்றிய ராமர் தன்னை கோதாவரி நதியிலிருந்து கொண்டு வந்து ஆலயம் கட்டுமாறு கூற, மூன்று சிலைகளும் நதியிலிருந்து கொண்டு வரப்பட்டு ஆலயம் உருவாக்கப்பட்டது. அருகிலுள்ள 'ராம்ஷேஜ்' என்ற மலைச் சுரங்கங்களிலிருந்து வெட்டிக் கொண்டு வரப்பட்ட உயர் ரக கருநிறக் கல்லால், 2000 பேர்கள் 12 ஆண்டுகள் உருவாக்கிய இவ்வாலயத்திற்கு 23 லட்சம் ரூபாய் செலவானதாம். கோபுர உச்சியிலுள்ள கலசம் 32 டன் தங்கத்தால் உருவாக்கப்பட்டது. சிறந்த கலையழகுடன் உருவாக்கப்பட்ட இவ்வாலயத்தில் 96 தூண்கள் அமைக்கப் பட்டுள்ளன.

காலாராம் கோவில் கோபுரம்

ஆலயத் தோற்றம்


கர்ப்பக் கிரஹம் அழகிய அலங்காரங்களுடன் காட்சியளிக்கிறது. வெள்ளியாலான திருவாசியின் உச்சியில் ஆதிசேஷன் காட்சி தருகிறார். அழகிய வெள்ளிக் குடைகளின் கீழ் ராமன், லட்சுமணன், சீதை மூவரும் வித்தியாசமான நிலைகளில் காட்சி தருகின்றனர். ராமனின் வலக்கரம் அவரது இதயத்திலும், இடக்கரம் அவரது பாதத்தை நோக்கியும் உள்ளது. 'என் காலைப் பிடித்தவர்களை நான் கைவிட மாட்டேன்' என்று உணர்த்தும் இத்தோற்றம் மிக விசேஷமானது. சீதையாகிய மகாலட்சுமியின் இரு கைகளுமே கீழ் நோக்கி, 'என்னை சரணடைந்தால் எல்லாம் பெறலாம்' என்பது போலுள்ளது. ராம, லட்சுமணர்களிடம் அம்பும், வில்லும் இல்லாததுடன், ஹனுமனும் இல்லை! பஞ்சவடியிலிருந்து சென்றபின்தானே ஹனுமனின் நட்பு கிடைக்கிறது!  ராமருடன் இல்லையெனினும், நுழைவாயிலில்  கருநிறக் கல்லிலான ஹனுமான் சிலை மிக அழகாகக் காட்சி தருகிறது.

காலாராமர்


இம்மூன்று விக்ரகங்களும் பஞ்சவடியில் கிடைத்ததாகவும், காலத்தால் மதிப்பிட முடியாத அளவு பழமையான சுயம்பு என்றும் ஆலயத்தார் கூறினர். வேண்டியோர்க்கு வேண்டுவன தரும் வரப்பிரசாதியாம் இம்மூவரும்! சொக்க வைக்கும் அழகில் தம்பியுடனும், தாரத்துடனும் காட்சி தரும் சுந்தரராமனின் சன்னிதியை விட்டு நகரவே மனமில்லை. இவ்வாலயத்தில் ராமநவமி, தசரா, சித்திரை  வருடப் பிறப்பு இவை மிகப் பெரிய விழாக்களாகக்  கொண்டாடப்படுகின்றன.

நம் வாழ்வில் ஒருமுறை அவசியம் தரிசிக்க வேண்டிய அற்புதமான ஆலயம் காலாராமர் ஆலயம்.

மும்பையிலிருந்து நாசிக்கிற்கு விமானம்,பேருந்து மற்றும் புகைவண்டியில் செல்லலாம்.

ஆலய நேரம் ...காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை
தொலைபேசி....0253 2621730








வியாழன், 9 மார்ச், 2017

மாங்கல்யம் காக்கும் குங்கும சுந்தரி

தீபம் மார்ச் 20, 2017 இதழில் ஆலயம் கண்டேன் பகுதியில் வெளியான கட்டுரை



ஓம் எனும் பிரணவ ரூபமாய் அ, , ம என்ற எழுத்துக்களின் சேர்க்கையால் உருவானது ‘உமா’ என்ற சொல். அதனாலேயே பார்வதி தேவியின் பல்வேறு நாமங்களில் தனித்துவமும், சிறப்பும், பெருமையும் பெற்று விளங்குகிறது. ‘உமா’ என்ற நாமம், ‘உமா, சிவன்’ என்ற இரு சொற்கள் இணைந்தே குழந்தைகள் கடவுளைக் குறித்துச் சொல்லும் ‘உம்மாச்சி’ ஆயிற்று என்பது மகா பெரியவரின் வாக்கு.

இந்த உமையவள் அருளாட்சி நடத்தும் தலமே ‘உமையாள்புரம்’. ஆயிரம் வருடங்கள் பழமையானது இவ்வாலயம். தஞ்சை மாவட்டத்தில் காவிரி வடகரையில், குடந்தையிலிருந்து பனிரெண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ள இத்தலத்தின் பெருமைகள் அனேகம். ப்ரம்மாண்ட புராணத்தில் உமாபுர மஹாத்மியம் என்கிற தலைப்பில் இவ்வாலயச் சிறப்புகள் மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இங்கு கோயில் கொண்டு அருள் பாலிக்கும் ஸ்ரீகுங்குமசுந்தரி சமேத ஸ்ரீகாசிவிசுவநாதரின் மகிமையும், காசியை விடச் சிறந்த இவ்வூர் மயானச் சிறப்பும் மிக அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது.
கோவில் முகப்பு

புர தரிசனம்

இவ்வாலயம் இங்கு உருவானது எப்படி? விஜயா என்ற கந்தர்வப் பெண் பார்வதிக்கு ஒரு கோயில் எழுப்ப எண்ணி கடும் தவம் புரிந்தாள். கோயில் அமைக்க தகுதியான இடத்தை வேண்டி தேவியை வழிபட்டபோது, அம்பாளே இத்தலத்தைக் காட்டிய சிறப்பான தலம் இது. அவளது தவத்தில் மகிழ்ந்த ஈசனும், தேவியும் இங்கேயே எழுந்தருளியதாக கூறுகிறது புராணம்.

கந்தர்வப் பெண்ணின் ஆணையின் பேரில் விசுவகர்மாவால் கட்டப்பட்ட இவ்வாலயத்தின் தென்புறம், அவள் கடுந்தவம் புரிந்த குளம் விஜயா தீர்த்தம், நாரிகுளம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இங்கு அருள் புரியும் அம்மன் பெண்களுக்கு தீர்க்க சௌமாங்கல்யம் அளிக்கும் ‘குங்கும சுந்தரி’ என்ற அழகிய திரு நாமத்துடன் காட்சியளிக்கிறாள். கமலா என்கிற ஒரு பெண் தன் கணவனின் தீர்க்க முடியாத நோயைத் தீர்க்க குங்குமத்தால் அர்ச்சனை செய்து தன் மாங்கல்யத்தைக் காப்பாற்றிக் கொண்டதால், இவ்வம்மனுக்கு ‘குங்கும சுந்தரி’ என்ற பெயர் வந்ததாக புராணத்தில் அம்பாளின் வாக்காகவே கூறப்படுகிறது. பெண்கள் தம் திருமாங்கல்ய பாக்கியத்திற்கென இந்த அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்வது மிக விசேஷமானது.கருவுற்ற பெண்களுக்கு குங்கும சுந்தரியின் சந்நிதியில் வளைகாப்பு நடத்தினால் சுகாப் பிரசவம் நடக்கும் என்பதும் ஐதீகம். 

பிரணவப் பொருளை அறியாத பிரம்மனை சிறை வைத்த குமரக் கடவுளிடம் அப்பிரணவ மந்திரத்தை தனக்கு உபதேசிக்க வேண்டினார் சிவபிரான். முருகப் பெருமான் ‘தத்துவ உபதேசத்தை’ முறைப்படி பெற வேண்டும் எனக் கூற, ஈசனும் தன் சக்தி சேனைகளுடன் திருவையாறு வந்து நந்தி தேவரை அனுப்பி, எப்பொழுது உபதேசம் பெற வரலாம்? என்று கேட்க, குமரனோ, எல்லா சேனைகளையும் விட்டு தனியாக, அடக்கமுடன் வருமாறு கூற, அதன்படி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்தில் விட்டு விட்டு, தான் மட்டும் சுவாமிமலை சென்றார் இறைவன். அவ்வாறு உமையவளை விட்டுச் சென்ற இடமே இவ்வூராகும்.

விநாயகர்

இனி தேவியை தரிசிப்போமா? கிழக்கு நோக்கிய ஆலயத்தில் தல விநாயகரை தரிசித்து, நந்தியை வணங்கி உள்ளே சென்றால் மகா, அர்த்த மண்டபங்களைத் தாண்டி, ஸ்ரீகாசி விஸ்வநாதர் அருள் காட்சி அளிக்கின்றார். காசிக்குச் செல்ல முடியாத ஒருவருக்கு கனவில் இப்பெருமான் தோன்றி தரிசனம் அளித்து, காசியில் வழிபட்ட பலனை அருளியதாக வரலாறு. அதனால் இவ்வாலயம் காசியிலும் உயர்வாகக் கூறப் படுகிறது.
காசி விஸ்வநாதர்


தட்சிணாமூர்த்தி

நாமும் அப்பலனை வேண்டி இறைவனை மனமுருக வேண்டி, பிரதட்சிணமாக வரும்போது, தட்சிணாமூர்த்தி, வள்ளி, தேவயானி சமேத முருகப் பெருமானை வணங்கி வடமேற்கில் தனி சந்நிதியில் காட்சி தரும் குங்குமசுந்தரியை தரிசிப்போம். அழகும், கருணையும் கொண்ட இரு நயனங்களுடன் அருள் தரும் அதரங்களில் குறு நகையுடன் நம்மைப் பார்த்து ‘எதுவும் கேள் தருகிறேன்’ என்று சொல்வது போல் காட்சி தரும் தேவியைக் காணக் கண்ணிரண்டு போதாது! மகளிரின் குங்குமத்தை காக்கும் தேவியின் தரிசனம் கண்களோடு மனதையும் சிலிர்க்க செய்கிறது.

குங்குமசுந்தரி

நாம் வேண்டியதைத் தருவதிலும், நினைத்ததை நிறைவேற்றுவதிலும் இவளுக்கு நிகர் இவளே! பெண்களுக்கு திருமணபாக்கியம், கணவரின் உடல்நலம் பெற  இத் தேவிக்கு குங்கும அர்ச்சனை செய்வது சிறப்பான வழிபாடாகும். குழந்தை வரம் வேண்டுவோர் அம்மனுக்கு ஆடிப்பூரத்தில் வளையல் வாங்கி சார்த்தினால் விரைவில் பலன் கிடைக்கும். அம்பாள் சன்னதி எதிரில் ராஜமகாவல்லபா கணபதி அழகுறக் காட்சி தருகிறார். மாத சதுர்த்திகளில் இவருக்கு சிறப்பு வழிபாடுகள் உண்டு. வடப்புறத்தில்  ஸ்ரீசண்டிகேசுவரர், துர்க்கை, பைரவர் சந்நிதிகள் அமைந்துள்ளன. கோயிலின் சாந்நித்தியத்தை ஒவ்வொரு சந்நிதியிலும் உணர முடிகிறது. வில்வம் தலமரமாகும்.

இவ்வூர் மயானத்தில் வெட்டியான்களே கிடையாது. எரிக்கப்பட்ட உடல்கள் கலையாமலும், மற்ற பிராணிகளால் சேதப்படுத்தப்படாமலும் இருக்க இங்கு கோயில் கொண்டுள்ள ‘காவற்காரப் பிள்ளையாரே’ காரணம் என்பது இவ்வூர் மக்களின் திடமான நம்பிக்கை.

இங்கு வைகாசி விசாகத்தன்று நடக்கும் திருக் கல்யாண உற்சவம் மிகச் சிறப்பானது. அன்று இவ்வூர் பெருமாள் கோயிலில் காட்சி தரும் லக்ஷ்மிநாராயணப் பெருமாள் இவ்வாலயம் வந்து அம்பிகையை ஈசனுக்கு மணமுடித்து தருவார். ஆடி மாதம் முழுவதும் இச்சந்நிதியில் சௌந்தர்யலஹரி பாராயணம் செய்வதால் சகல நன்மையும் பெறலாம். ஆடி வெள்ளி, தைவெள்ளிகள், நவராத்திரி பத்து நாட்களும் தேவி, விதவிதமான அலங்காரங்களில் ஜெகத்ஜோதியாகக் காட்சி தருவாள். மேலும் கந்த சஷ்டி, ஆடி கிருத்திகை, ஆடிப்பூரம், திருக்கார்த்திகை, மகர சங்கராந்தி, சிவராத்திரி, திருவாதிரை நாட்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இத்தலம் திருவையாறு-குடந்தை மார்க்கத்தில் திருவையாற்றிலிருந்து இருபது கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஆலய நேரம் காலை 5.30 - 10.30...மாலை - 5.30 - 8.30...தொலைபேசி...0435 2441095

செல்லும் வழி - கும்பகோணாத்திலிருந்து -17 கி.மீ



ஞாயிறு, 5 மார்ச், 2017

என் கோபத்தின் காதலர்

தி இந்து, தமிழ் நாளிதழின் இணைப்பான “பெண் இன்று’, மார்ச் 5, 2017 இதழில் வெளியான என் எண்ணங்கள்

நேரடியாக இணைய தளத்தில் செய்தியைப் படிக்க இங்கே சொடுக்கவும்




நான் எழுதிய கட்டுரையின் முழு வடிவம்

திருமணத்தில் கூறப்படும் சப்தபதி மந்திரத்தில் ஏழாவது அடியில் வரும் மந்திரம் 'கணவனும், மனைவியும் வாழ்நாள் முழுதும் உற்ற தோழர்களாக இருப்போம்' என்று உரைக்கிறது.

கணவரும், மனைவியும் அடுத்தவர் குறைகளை பெரிது படுத்தாமல், அதிக எதிர்பார்ப்புகள் இன்றி, நிறைகளைப்  போன்றே குறைகளையும் ரசித்து குடும்பம் நடத்தினால் வாழ்க்கை என்றுமே இன்பமயம்தான்! 

எனக்கு 19 வயதில் திருமணமாகி, உடன் குழந்தைகள் பிறந்துவிட, வாழ்க்கையின் சிரமங்கள்  என்னை தடுமாறச் செய்தன. வங்கி அதிகாரியாகப் பணியாற்றிய என் கணவர், என்னிடம் அதிகாரம் காட்டியது கிடையாது. சற்றும் கோபப்படாது எனக்குத் தெரியாத விஷயங்களை எடுத்துக் கூறிய ஆசைக் கணவர்! 

திருமணமானதும் வடக்கே மாற்றலாகிவிட, 'ஹிந்தி' என்றால் சொல்ல மட்டுமே தெரிந்த எனக்கு பொறுமையாக சொல்லிக் கொடுத்த ஆசான்! 

குழந்தைகளின் பள்ளி, கணவருக்கு அலுவலகம் என்று அனைவரையும் காலை வேளைகளில் தயார் செய்ய நான் மிகவும் சிரமப்பட்டபோது, குழந்தைகளின்  வேலைகளைத் தன்வசம் எடுத்துக் கொண்டு எனக்கு ஆதரவு கொடுத்த அன்புத் தோழன்! 

கம்ப்யூட்டர் அறிமுகமான புதிதில் எனக்கு அருகில் அமர்ந்து, இயக்கும் முறையை புரியும்படி விளக்கமாக எடுத்துச் சொன்ன ஆசிரியர்! 

எனக்கு வயிற்றிலும்,காலிலும் அறுவை சிகிச்சைகள் நடந்தபோது எனக்கு வேண்டிய அத்தனை வேலைகளும் செய்து, ஒவ்வொரு வேளையும் கையில் மாத்திரையும்,  தண்ணீருமாக என்முன் நிற்கும்போது என்னைக் கண்கலங்க வைத்த தாயுமானவர்! 


நான் ஒரு எழுத்தாளர். ஆலயங்கள்  பற்றியும், பயணக் கட்டுரைகளும் நிறைய எழுதுவேன். எந்தக் கோயிலுக்கு சென்றாலும் 'என் மனைவி எழுத்தாளர்' என்று பெருமையோடு சொல்லி,அங்குள்ள ஸ்பெஷல் பற்றியெல்லாம் கேட்டு எனக்கு சொல்லி எழுத உதவும் என் காரியதரிசி! 

எங்களுக்கு எதிலும் ஒளிவு, மறைவு கிடையாது. எந்த விஷயமானாலும் இருவரும் கலந்து பேசி முடிவெடுப்போம்.பணி ஒய்வு பெற்றபின் இன்று நாங்கள் தனிக்குடித்தனம் நடத்தும் இந்த நேரத்திலும், நான் செய்யும் அத்தனை வேலைகளிலும் எனக்கு உறுதுணையாக இருக்கும் நல்ல துணைவர்! 

எனக்கு சில சமயங்களில் கோபம் வந்து ஏதாவது சொன்னாலும் அதை இலகுவாக எடுத்துக் கொள்வார். 'உங்களுக்கு என்மேல் கோபம் வரவில்லையா' என்றால், 'உன்னை என்று மணந்து கொண்டேனோ, அன்றிலிருந்து உன் கோபத்தையும் சேர்த்து காதலிக்க ஆரம்பித்து விட்டேன்.உன் கோபத்துக்கும் நான் அடிமை' என்று வசனம் பேசி என்னை சிரிக்க வைக்கும் அழகிய காதலர்! 

அன்றும், இன்றும், என்றும் என் கணவர்....என் ஆருயிர்த் தோழர்! 


13-03-2017 பெண் இன்று விமரிசன பகுதியில் வெளியான விமர்சனம்