Thanjai

Thanjai

வியாழன், 9 மார்ச், 2017

மாங்கல்யம் காக்கும் குங்கும சுந்தரி

தீபம் மார்ச் 20, 2017 இதழில் ஆலயம் கண்டேன் பகுதியில் வெளியான கட்டுரை



ஓம் எனும் பிரணவ ரூபமாய் அ, , ம என்ற எழுத்துக்களின் சேர்க்கையால் உருவானது ‘உமா’ என்ற சொல். அதனாலேயே பார்வதி தேவியின் பல்வேறு நாமங்களில் தனித்துவமும், சிறப்பும், பெருமையும் பெற்று விளங்குகிறது. ‘உமா’ என்ற நாமம், ‘உமா, சிவன்’ என்ற இரு சொற்கள் இணைந்தே குழந்தைகள் கடவுளைக் குறித்துச் சொல்லும் ‘உம்மாச்சி’ ஆயிற்று என்பது மகா பெரியவரின் வாக்கு.

இந்த உமையவள் அருளாட்சி நடத்தும் தலமே ‘உமையாள்புரம்’. ஆயிரம் வருடங்கள் பழமையானது இவ்வாலயம். தஞ்சை மாவட்டத்தில் காவிரி வடகரையில், குடந்தையிலிருந்து பனிரெண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ள இத்தலத்தின் பெருமைகள் அனேகம். ப்ரம்மாண்ட புராணத்தில் உமாபுர மஹாத்மியம் என்கிற தலைப்பில் இவ்வாலயச் சிறப்புகள் மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இங்கு கோயில் கொண்டு அருள் பாலிக்கும் ஸ்ரீகுங்குமசுந்தரி சமேத ஸ்ரீகாசிவிசுவநாதரின் மகிமையும், காசியை விடச் சிறந்த இவ்வூர் மயானச் சிறப்பும் மிக அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது.
கோவில் முகப்பு

புர தரிசனம்

இவ்வாலயம் இங்கு உருவானது எப்படி? விஜயா என்ற கந்தர்வப் பெண் பார்வதிக்கு ஒரு கோயில் எழுப்ப எண்ணி கடும் தவம் புரிந்தாள். கோயில் அமைக்க தகுதியான இடத்தை வேண்டி தேவியை வழிபட்டபோது, அம்பாளே இத்தலத்தைக் காட்டிய சிறப்பான தலம் இது. அவளது தவத்தில் மகிழ்ந்த ஈசனும், தேவியும் இங்கேயே எழுந்தருளியதாக கூறுகிறது புராணம்.

கந்தர்வப் பெண்ணின் ஆணையின் பேரில் விசுவகர்மாவால் கட்டப்பட்ட இவ்வாலயத்தின் தென்புறம், அவள் கடுந்தவம் புரிந்த குளம் விஜயா தீர்த்தம், நாரிகுளம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இங்கு அருள் புரியும் அம்மன் பெண்களுக்கு தீர்க்க சௌமாங்கல்யம் அளிக்கும் ‘குங்கும சுந்தரி’ என்ற அழகிய திரு நாமத்துடன் காட்சியளிக்கிறாள். கமலா என்கிற ஒரு பெண் தன் கணவனின் தீர்க்க முடியாத நோயைத் தீர்க்க குங்குமத்தால் அர்ச்சனை செய்து தன் மாங்கல்யத்தைக் காப்பாற்றிக் கொண்டதால், இவ்வம்மனுக்கு ‘குங்கும சுந்தரி’ என்ற பெயர் வந்ததாக புராணத்தில் அம்பாளின் வாக்காகவே கூறப்படுகிறது. பெண்கள் தம் திருமாங்கல்ய பாக்கியத்திற்கென இந்த அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்வது மிக விசேஷமானது.கருவுற்ற பெண்களுக்கு குங்கும சுந்தரியின் சந்நிதியில் வளைகாப்பு நடத்தினால் சுகாப் பிரசவம் நடக்கும் என்பதும் ஐதீகம். 

பிரணவப் பொருளை அறியாத பிரம்மனை சிறை வைத்த குமரக் கடவுளிடம் அப்பிரணவ மந்திரத்தை தனக்கு உபதேசிக்க வேண்டினார் சிவபிரான். முருகப் பெருமான் ‘தத்துவ உபதேசத்தை’ முறைப்படி பெற வேண்டும் எனக் கூற, ஈசனும் தன் சக்தி சேனைகளுடன் திருவையாறு வந்து நந்தி தேவரை அனுப்பி, எப்பொழுது உபதேசம் பெற வரலாம்? என்று கேட்க, குமரனோ, எல்லா சேனைகளையும் விட்டு தனியாக, அடக்கமுடன் வருமாறு கூற, அதன்படி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்தில் விட்டு விட்டு, தான் மட்டும் சுவாமிமலை சென்றார் இறைவன். அவ்வாறு உமையவளை விட்டுச் சென்ற இடமே இவ்வூராகும்.

விநாயகர்

இனி தேவியை தரிசிப்போமா? கிழக்கு நோக்கிய ஆலயத்தில் தல விநாயகரை தரிசித்து, நந்தியை வணங்கி உள்ளே சென்றால் மகா, அர்த்த மண்டபங்களைத் தாண்டி, ஸ்ரீகாசி விஸ்வநாதர் அருள் காட்சி அளிக்கின்றார். காசிக்குச் செல்ல முடியாத ஒருவருக்கு கனவில் இப்பெருமான் தோன்றி தரிசனம் அளித்து, காசியில் வழிபட்ட பலனை அருளியதாக வரலாறு. அதனால் இவ்வாலயம் காசியிலும் உயர்வாகக் கூறப் படுகிறது.
காசி விஸ்வநாதர்


தட்சிணாமூர்த்தி

நாமும் அப்பலனை வேண்டி இறைவனை மனமுருக வேண்டி, பிரதட்சிணமாக வரும்போது, தட்சிணாமூர்த்தி, வள்ளி, தேவயானி சமேத முருகப் பெருமானை வணங்கி வடமேற்கில் தனி சந்நிதியில் காட்சி தரும் குங்குமசுந்தரியை தரிசிப்போம். அழகும், கருணையும் கொண்ட இரு நயனங்களுடன் அருள் தரும் அதரங்களில் குறு நகையுடன் நம்மைப் பார்த்து ‘எதுவும் கேள் தருகிறேன்’ என்று சொல்வது போல் காட்சி தரும் தேவியைக் காணக் கண்ணிரண்டு போதாது! மகளிரின் குங்குமத்தை காக்கும் தேவியின் தரிசனம் கண்களோடு மனதையும் சிலிர்க்க செய்கிறது.

குங்குமசுந்தரி

நாம் வேண்டியதைத் தருவதிலும், நினைத்ததை நிறைவேற்றுவதிலும் இவளுக்கு நிகர் இவளே! பெண்களுக்கு திருமணபாக்கியம், கணவரின் உடல்நலம் பெற  இத் தேவிக்கு குங்கும அர்ச்சனை செய்வது சிறப்பான வழிபாடாகும். குழந்தை வரம் வேண்டுவோர் அம்மனுக்கு ஆடிப்பூரத்தில் வளையல் வாங்கி சார்த்தினால் விரைவில் பலன் கிடைக்கும். அம்பாள் சன்னதி எதிரில் ராஜமகாவல்லபா கணபதி அழகுறக் காட்சி தருகிறார். மாத சதுர்த்திகளில் இவருக்கு சிறப்பு வழிபாடுகள் உண்டு. வடப்புறத்தில்  ஸ்ரீசண்டிகேசுவரர், துர்க்கை, பைரவர் சந்நிதிகள் அமைந்துள்ளன. கோயிலின் சாந்நித்தியத்தை ஒவ்வொரு சந்நிதியிலும் உணர முடிகிறது. வில்வம் தலமரமாகும்.

இவ்வூர் மயானத்தில் வெட்டியான்களே கிடையாது. எரிக்கப்பட்ட உடல்கள் கலையாமலும், மற்ற பிராணிகளால் சேதப்படுத்தப்படாமலும் இருக்க இங்கு கோயில் கொண்டுள்ள ‘காவற்காரப் பிள்ளையாரே’ காரணம் என்பது இவ்வூர் மக்களின் திடமான நம்பிக்கை.

இங்கு வைகாசி விசாகத்தன்று நடக்கும் திருக் கல்யாண உற்சவம் மிகச் சிறப்பானது. அன்று இவ்வூர் பெருமாள் கோயிலில் காட்சி தரும் லக்ஷ்மிநாராயணப் பெருமாள் இவ்வாலயம் வந்து அம்பிகையை ஈசனுக்கு மணமுடித்து தருவார். ஆடி மாதம் முழுவதும் இச்சந்நிதியில் சௌந்தர்யலஹரி பாராயணம் செய்வதால் சகல நன்மையும் பெறலாம். ஆடி வெள்ளி, தைவெள்ளிகள், நவராத்திரி பத்து நாட்களும் தேவி, விதவிதமான அலங்காரங்களில் ஜெகத்ஜோதியாகக் காட்சி தருவாள். மேலும் கந்த சஷ்டி, ஆடி கிருத்திகை, ஆடிப்பூரம், திருக்கார்த்திகை, மகர சங்கராந்தி, சிவராத்திரி, திருவாதிரை நாட்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இத்தலம் திருவையாறு-குடந்தை மார்க்கத்தில் திருவையாற்றிலிருந்து இருபது கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஆலய நேரம் காலை 5.30 - 10.30...மாலை - 5.30 - 8.30...தொலைபேசி...0435 2441095

செல்லும் வழி - கும்பகோணாத்திலிருந்து -17 கி.மீ



2 கருத்துகள்: