Thanjai

Thanjai

புதன், 10 மே, 2017

கருணை புரிவாள் கனக மகாலக்ஷ்மி


தீபம் மே 05, 2017 இதழில் வெளியான கட்டுரை





ஆலயங்கள் நிறைந்த நகரம் ஆந்திரா. நரசிம்மர், சிவன், தேவி ஆலயங்கள் என்று எத்தனை ஆலயங்கள்! அவற்றினுள் நுழையும்போதே நமக்கு பக்தி உணர்வும், மெய்சிலிர்ப்பும் உருவாவதை உணரலாம்.

விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ கனகமகாலக்ஷ்மி ஆலயம் மிகச் சிறப்பும், சாந்நித்தியமும் வாய்ந்த வித்யாசமான ஆலயம். ஆலயத்துக்கு செல்லும் அனைத்து பெண்களும் அர்ச்சகர் துணையின்றி தாமே அன்னைக்கு அபிஷேகம் செய்து வேண்டியதை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

விசாகப்பட்டினத்தில் புருஜுபேட்டா என்ற இடத்தில் அமைந்துள்ளது இவ்வாலயம். சாலையின் நடுவில் அமைந்துள்ள இவ்வாலயம் உருவான விதம் நம்மை வியக்க வைக்கிறது.

கோபுரம்

கோபுர முகப்பு


1912ம் ஆண்டில் விசாகப்பட்டினத்தை ஆண்ட ராஜாக்களின் குலதெய்வமாக விளங்கிய கனகமஹாலக்ஷ்மி தேவி சிலை மன்னர்களின் கோட்டை பகுதிக்கு அருகில். ஒரு கிணற்றுக்குள்ளிருந்து எடுக்கப்பட்டது. தேவியின் அழகில் மயங்கிய மக்கள், அதனை அந்த முனிசிபல் சாலையின் நடுவிலேயே ஸ்தாபித்து வணங்கி வந்தனர்.

1917ம் ஆண்டு சாலையை அகலப் படுத்தியபோது, அச் சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்தில் வைத்தனர். அந்நிகழ்வுக்குப் பின் வைசாக்கில் மிக்க கொடுமையான தொற்று நோயான பிளேக் நோய் படு வேகமாகப் பரவி, பலரை பலி வாங்கியது. இவ்வம்மனை அகற்றியதால் இந்த நோய் வருகிறது  என அஞ்சிய மக்கள், மீண்டும் தேவியை சாலை நடுவில் ஸ்தாபித்து பூஜைகளைத் தொடர்ந்தனர். என்ன அதிசயம்... சில நாட்களிலேயே நோய் மறைந்தது! ஊரும் செழித்தது! மக்களின் நம்பிக்கை அதிகமாக, அது முதல் 'கனகமஹாலக்ஷ்மி அம்மவாரு' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட தேவியின் பெருமை திக்கெட்டும் பரவியது. இன்றும் வைசாகின் செல்வ வளத்திற்கு காரணம் இந்த அன்னையே என்று கூறப் படுகிறது. தன்னை வணங்கியவர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் தேவியின் பெருமை அளவற்றது. பெண்கள் தம் மாங்கல்யம் நிலைக்கவும், பிறந்த குழந்தைகளின் நோயற்ற வாழ்விற்கு அவள் காலடியில் விடுவதும் மிக முக்கிய வழிபாடாகும்.

தேவிக் கிணறு

அம்மவாரு


ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட தேவியின் ஆலயம் கடந்த நூறாண்டுகளில் மிக வேகமான வளர்ச்சி அடைந்துள்ளதாம்.இன்றைய வைசாக்கின் காவல் தெய்வமாகவும், தாயாகவும் விளங்கும் இத்தேவி சிலையின் காலம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட விசாக வர்மன் என்ற அரசன் காலத்ததாக இருக்கும் எனப்படுகிறது.ஒரு சிறிய சன்னதியுடன் இருந்த இவ்வாலயம் இன்று பலகோடி வருமானம் ஈட்டும் ஆந்திராவின் பணக்கார ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

இனி தேவியை தரிசிப்போம். சாதாரணமாக அங்கம் பின்னமான தெய்வ ரூபங்களை நாம் பிரதானமாக வணங்குவதில்லை. ஆனால் இங்கு எந்த ஆலயத்திலும் இல்லாதவிதமாக, வடமேற்கு திசை நோக்கி வலது கையில் தாமரைமொட்டும், இடக்கை பின்னமாயும்  மார்புவரை உள்ள  அன்னையே அழகுருவாய் காட்சி அளிக்கின்றாள்.கண்களின் காருண்யம் நம்மை 'நீயே கதி அம்மா' என்று சரணடையவைக்கிறது.தேவி தனக்கு மேல் கூரை தேவையில்லையென்று ஆணையிட்டதால், சுற்றிலும் கோபுரங்கள் இருந்தாலும் அன்னையின் சிரம் வானம் பார்த்தே உள்ளது. ஜாதி, மத  பேதமின்றி எவரும் அம்பிகையைத் தன் கைகளால் அபிஷேகம், அர்ச்சனை செய்து வணங்கலாம். தன்னை வழிபட எந்த தடையும், யார் உதவியும் இருக்கக் கூடாது என்பது அன்னையின் ஆணையாம். அதனால் இங்கு நமக்காக பூஜிக்க அர்ச்சகர்கள் கிடையாது.  

பெண்கள் வரிசையில் சென்று தாமே பால், இளநீர், மஞ்சள், குங்குமம் இவற்றால் நிதானமாக அம்மனை அபிஷேகம் செய்து பூஜிக்கின்றனர். ஆலய அலுவலர்கள் உடனுக்குடன்  தேவியை சுத்தம் செய்கின்றனர். என் முறை வந்தபோது சற்று தயக்கமாக இருந்தாலும், அப்படிச் செய்யும்போது மெய்சிலிர்ப்பும், மனதிருப்தியும், தேவியை நெருங்கிவிட்டோம் என்ற மகிழ்ச்சியும் மனதில் ஏற்பட்டதை உணர முடிந்தது. அம்மனை நெருங்கி நம் மனக்குறைகளை சொல்லும்போதே, தேவி நம்மைக் கைவிட மாட்டாள் என்று உணர முடிகிறது. அடைக்கலம் என்று அவளை அண்டிச் செல்லும்போதே நம் மனம் நிச்சலனமடைகிறது. அன்னையை விட்டு அகலவே மனமில்லை. இந்த தனித்துவமான தானே வணங்கும் முறையில் ஈர்க்கப்பட்ட மக்கள் இங்கு பல வெளி மாநிலம் மற்றும் நாடுகளிலிருந்து வந்து தரிசிக்கின்றனராம்.மற்றும் பின்னால் உருவாக்கப்பட்ட ஸ்ரீராஜராஜேஸ்வரி, சிவன், விஷ்ணுவிற்கும் சன்னதிகள் உள்ளன. அம்மன் கிடைத்த கிணற்றைச் சுற்றிலும் அஷ்டலக்ஷ்மிகள்  அமைக்கப் பட்டுள்ளது.

அபிஷேகம்





தினசரி காலை 5 மற்றும் 11.30,மாலை 6 மணிக்கு ஒரு மணி நேரத்திற்கு திரிகால அர்ச்சனை நடைபெறும்.வியாழக்கிழமைகளில் இத்தேவியை வழிபட வரிசையில் நிற்க வேண்டுமாம்.மார்கழி மாதம் முழுதும் நடைபெறு 'மார்கஸீரா மஹோத்சவம்' மிக பிரசித்தமான, பெரியதிருவிழா. தினமும் லலிதா, லக்ஷ்மி ஸஹஸ்ரநாமம், தேவி சப்தசதி பாராயணம், அஷ்டலக்ஷ்மி பூஜை,சிறப்பு அபிஷேகங்கள், கதாகாலட்சேபம், அன்னதானம் என்று ஆலயம் வண்ண விளக்கு அலங்காரத்தில் அற்புதக் காட்சி அளிக்குமாம்.நவராத்திரி 9 நாட்களும் தேவியின் விதவிதமான அலங்காரங்கள் கண்களைக் கவரும்.திரிகால அர்ச்சனை நேரம் தவிர, தினமும் 24 மணி நேரமும் ஆலயம் திறந்திருக்கும். பக்தர்களின் குறைகளைத் தீர்க்க அல்லும், பகலும் தேவி விழித்திருப்பதாக ஐதீகம்.

விசாகப்பட்டினம் செல்லும் அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயம் அன்னை கனகமஹாலக்ஷ்மி அம்மவாரு ஆலயம். வைசாக் ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையத்திலிருந்து ஆட்டோ, டேக்சிகளில் எளிதாகச் செல்லலாம்.
தொடர்புக்கு...

0891-2566515, 2568645, 2711725, 2566514 Mob:9491000651.


2 கருத்துகள்:

  1. விசாகப்பட்டினத்தில் உள்ள கனகமகாலக்ஷ்மி ஆலயம் பற்றி இப்போதுதான் தெரிந்துகொள்கிறேன். ஆந்திராவில் மூன்றாண்டுகள் பணிசெய்தபோதும், கோவில்களுக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் கிட்டவில்லை. உங்கள் பதிவுக்கு நன்றி.

    -இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

    http://chellappatamildiary.blogspot.com

    பதிலளிநீக்கு