Thanjai

Thanjai

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

நன்றுடையான் விநாயகர்

5.9.2019 இதழில் தீபம் இதழில் பிரசுரமானது

நம் நாட்டில் முதல் கடவுளான முக்கண்ணன் மகன் விநாயகருக்கு ஆற்றங்கரையிலும், மூலை  முடுக்குகளில் கூட ஆலயங்கள் உண்டு. அதில் பிரபலமான ஆலயங்கள் பலப் பல. திருச்சியின் உச்சிப் பிள்ளையார் ஆலயம் மிக பிரசித்தி பெற்றது. அனைவரும் அறிந்தது. அந்த ஆலயத்துக்கும் முற்பட்ட  பழமையான ஒரு விநாயகர் இவ்வூரில் அருள் செய்வது பலரும் அறியாத விஷயம். இவ்வாலயம் ஏழாம் நூற்றாண்டை சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

யானை முகம் அமைவதற்கு முன் பார்வதியால் படைக்கப்பட்ட மனித முகத்துடன் காணப்பட்ட ஆதி விநாயகர்  காட்சி தரும் நன்றுடையான் ஆலயம் உச்சிப்பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பே தோன்றியது. நன்றுடையான் என்றால் 'நல்ல காரியங்களை உடன் முடித்துக் கொடுப்பவர்' என்று பொருள்.ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே திராவிட கலாச்சார முறையில் உருவாக்கப் பட்டுள்ள இவ்வாலயம் எப்பொழுது கட்டப்பட்டது என்று அறிய முடியாத அளவு பழமையானது. திலதைப்பதியில் மட்டுமே நாம் தரிசிக்கக் கூடிய நரமுக விநாயகர் இங்கு காட்சி தருவது எந்த ஆலயத்திலும் இல்லாத அதிசயம் எனப்படுகிறது.

சிறிய கோபுரம் தாண்டி உள்நுழைந்ததும் ஆஞ்சனேயஸ்வாமி தரிசனம் தருகிறார். அவரை வணங்கி இடப்பக்கமாக உள்ளே சென்றால் அவரது பின் பக்கம் ஐந்து அடி  உயர நன்றுடையான் விநாயகர் அழகுறக் காட்சி தருகிறார். மூன்று கண்களுடன்,கரங்களில் அங்குசம், பாசம், மோதகம் இவற்றுடன் வரங்களை வாரி வழங்கும் வரத ஹஸ்தத்துடன் நாகாபரணம், சர்வாபரண பூஷிதராக இடுப்பில் நாகாபரணம் அணிந்த விநாயகரின் அழகில் நாம் மயங்கி நிற்கிறோம். அவரின் கம்பீரமும், கருணையும் வணங்கியவரின் துன்பங்களை காணாமல் போகச் செய்யும் என்ற நம்பிக்கையை பக்தர்களுக்கு அளிக்கிறது.

அவருக்கு முன்பாக வெளிபிரகாரத்தில்  கிழக்கு திசையில் காணப்படும் பிரம்மாண்ட நந்தீஸ்வரர் நாகநந்தி என அழைக்கப் படுகிறார். சிவனுக்கு முன்பாக இருக்கும் நந்தி இங்கு கணபதிக்கு முன்பாகக் காட்சியளிப்பது வித்யாசமாக உள்ளது. பிரதோஷம் இங்கு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அருகிலேயே சிவபார்வதிக்கு ஒரு சிறிய சன்னதி  உள்ளது.

ஆலயத்தினுள் நன்றுடையான் விநாயகரின் வலப்பக்கம் உள்ள ஒரு சன்னதியில்தான் நாம் நரமுக விநாயகரை தரிசிக்கலாம். நான்கடி உயரத்தில் வலக்கையில் அங்குசமும், இடக்கையில் மோதகமும் கொண்டு அமர்ந்த நிலையில் காட்சி தரும் ஆதி விநாயகரின் இருபுறமும் ஆதி சங்கரரும், சதாசிவ ப்ரம்மேந்திரரும் காட்சி தர, அருகில் பட்டினத்தார், வேத வியாசர், காயத்ரி தேவியும் காட்சி தருகின்றனர். ஆதி விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி மற்றும் வியாழக் கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்  படுகிறது. திருஞான சம்பந்தர் இவ்விநாயகரை தம் பதிகத்தில் பாடியுள்ளார்.

அறுபது வருடங்களுக்கு முன்பு இவ்வாலயத்தை தரிசித்த மகாபெரியவர் இவ்வாலய மஹிமையை எடுத்துச் சொல்லி தினமும் வேத பாராயணம் செய்யச் சொன்னதால் தினமும் இங்கு வேதம் ஓதப்படுகிறதாம்.அகஸ்திய மகரிஷி சங்கடஹர சதுர்த்தி நாட்களில் இங்கு வந்து ஆதி விநாயகரை வழிபடுவதாகக் கூறுகிறார்கள். மேலும் இங்கு முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள், துர்கைக்கும் சன்னதிகள் உண்டு. இங்குள்ள நவக்கிரக சன்னதியில் சூர்ய பகவானை நோக்கி எல்லா கிரகங்களும் அமைந்துள்ளது மிகச் சிறப்பானது. இங்கு நவக்கிரக வழிபாடு பக்தர்களின் பல சிக்கல்களையும் தீர்த்து வைக்கும் ஆற்றல் உடையது.

விநாயக சதுர்த்தி மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி இங்கு கடந்த 80 வருடங்களுக்கும் மேலாக நடைபெறும் சங்கீதக் கச்சேரிகள் வெகு பிரசித்தம். மதுரைமணி அய்யர் போன்ற மிகப் பெரிய பாடகர்கள் இங்கு இவ்விநாயகரின் அருள் பெறவேண்டி வந்து கச்சேரி செய்வார்களாம்! இரவு நேரங்களில் நன்றுடையான் விநாயகரும், நந்தி தேவரும் கச்சேரிகளை பற்றி விரிவாக்கப் பேசிக் கொள்வார்கள் என்று வேடிக்கையாக சொல்வதுண்டாம்!

இங்கு நவராத்திரி, கிருத்திகை, சிவராத்திரி, ஹனுமத் ஜெயந்தி என்று அத்தனை விசேஷங்களும் கொண்டாடப் படுகின்றன. இவ்விறைவனை வணங்கி வழிபடுவோர் குடும்பத்தில் ஒற்றுமை, குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம், வேலை வாய்ப்பு, திருமணம், மக்கட்பேறு  இவை கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

திருச்சியில் கிழக்கு புலிவார் தெருவில் நெருக்கமான கடைகளுக்கிடையே சிறிய கோபுரத்துடன் காணப்படும் இவ்வாலயம் திருச்சி மக்கள் பலரும் அறிவதில்லை. முருகன் தியேட்டர் அருகில் என்று சொன்னாலே ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களுக்கு புரிகிறது. திருச்சிக்கு வருவோர் அவசியம் தரிசிக்க வேண்டிய சிறப்பான ஆலயம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக