Thanjai

Thanjai

செவ்வாய், 5 நவம்பர், 2019

குமுதம் சிநேகிதியில் எங்க வீட்டு கொலு..2019













வியாழன், 29 ஆகஸ்ட், 2019

நன்றுடையான் விநாயகர்

5.9.2019 இதழில் தீபம் இதழில் பிரசுரமானது

நம் நாட்டில் முதல் கடவுளான முக்கண்ணன் மகன் விநாயகருக்கு ஆற்றங்கரையிலும், மூலை  முடுக்குகளில் கூட ஆலயங்கள் உண்டு. அதில் பிரபலமான ஆலயங்கள் பலப் பல. திருச்சியின் உச்சிப் பிள்ளையார் ஆலயம் மிக பிரசித்தி பெற்றது. அனைவரும் அறிந்தது. அந்த ஆலயத்துக்கும் முற்பட்ட  பழமையான ஒரு விநாயகர் இவ்வூரில் அருள் செய்வது பலரும் அறியாத விஷயம். இவ்வாலயம் ஏழாம் நூற்றாண்டை சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

யானை முகம் அமைவதற்கு முன் பார்வதியால் படைக்கப்பட்ட மனித முகத்துடன் காணப்பட்ட ஆதி விநாயகர்  காட்சி தரும் நன்றுடையான் ஆலயம் உச்சிப்பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பே தோன்றியது. நன்றுடையான் என்றால் 'நல்ல காரியங்களை உடன் முடித்துக் கொடுப்பவர்' என்று பொருள்.ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே திராவிட கலாச்சார முறையில் உருவாக்கப் பட்டுள்ள இவ்வாலயம் எப்பொழுது கட்டப்பட்டது என்று அறிய முடியாத அளவு பழமையானது. திலதைப்பதியில் மட்டுமே நாம் தரிசிக்கக் கூடிய நரமுக விநாயகர் இங்கு காட்சி தருவது எந்த ஆலயத்திலும் இல்லாத அதிசயம் எனப்படுகிறது.

சிறிய கோபுரம் தாண்டி உள்நுழைந்ததும் ஆஞ்சனேயஸ்வாமி தரிசனம் தருகிறார். அவரை வணங்கி இடப்பக்கமாக உள்ளே சென்றால் அவரது பின் பக்கம் ஐந்து அடி  உயர நன்றுடையான் விநாயகர் அழகுறக் காட்சி தருகிறார். மூன்று கண்களுடன்,கரங்களில் அங்குசம், பாசம், மோதகம் இவற்றுடன் வரங்களை வாரி வழங்கும் வரத ஹஸ்தத்துடன் நாகாபரணம், சர்வாபரண பூஷிதராக இடுப்பில் நாகாபரணம் அணிந்த விநாயகரின் அழகில் நாம் மயங்கி நிற்கிறோம். அவரின் கம்பீரமும், கருணையும் வணங்கியவரின் துன்பங்களை காணாமல் போகச் செய்யும் என்ற நம்பிக்கையை பக்தர்களுக்கு அளிக்கிறது.

அவருக்கு முன்பாக வெளிபிரகாரத்தில்  கிழக்கு திசையில் காணப்படும் பிரம்மாண்ட நந்தீஸ்வரர் நாகநந்தி என அழைக்கப் படுகிறார். சிவனுக்கு முன்பாக இருக்கும் நந்தி இங்கு கணபதிக்கு முன்பாகக் காட்சியளிப்பது வித்யாசமாக உள்ளது. பிரதோஷம் இங்கு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அருகிலேயே சிவபார்வதிக்கு ஒரு சிறிய சன்னதி  உள்ளது.

ஆலயத்தினுள் நன்றுடையான் விநாயகரின் வலப்பக்கம் உள்ள ஒரு சன்னதியில்தான் நாம் நரமுக விநாயகரை தரிசிக்கலாம். நான்கடி உயரத்தில் வலக்கையில் அங்குசமும், இடக்கையில் மோதகமும் கொண்டு அமர்ந்த நிலையில் காட்சி தரும் ஆதி விநாயகரின் இருபுறமும் ஆதி சங்கரரும், சதாசிவ ப்ரம்மேந்திரரும் காட்சி தர, அருகில் பட்டினத்தார், வேத வியாசர், காயத்ரி தேவியும் காட்சி தருகின்றனர். ஆதி விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி மற்றும் வியாழக் கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்  படுகிறது. திருஞான சம்பந்தர் இவ்விநாயகரை தம் பதிகத்தில் பாடியுள்ளார்.

அறுபது வருடங்களுக்கு முன்பு இவ்வாலயத்தை தரிசித்த மகாபெரியவர் இவ்வாலய மஹிமையை எடுத்துச் சொல்லி தினமும் வேத பாராயணம் செய்யச் சொன்னதால் தினமும் இங்கு வேதம் ஓதப்படுகிறதாம்.அகஸ்திய மகரிஷி சங்கடஹர சதுர்த்தி நாட்களில் இங்கு வந்து ஆதி விநாயகரை வழிபடுவதாகக் கூறுகிறார்கள். மேலும் இங்கு முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள், துர்கைக்கும் சன்னதிகள் உண்டு. இங்குள்ள நவக்கிரக சன்னதியில் சூர்ய பகவானை நோக்கி எல்லா கிரகங்களும் அமைந்துள்ளது மிகச் சிறப்பானது. இங்கு நவக்கிரக வழிபாடு பக்தர்களின் பல சிக்கல்களையும் தீர்த்து வைக்கும் ஆற்றல் உடையது.

விநாயக சதுர்த்தி மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி இங்கு கடந்த 80 வருடங்களுக்கும் மேலாக நடைபெறும் சங்கீதக் கச்சேரிகள் வெகு பிரசித்தம். மதுரைமணி அய்யர் போன்ற மிகப் பெரிய பாடகர்கள் இங்கு இவ்விநாயகரின் அருள் பெறவேண்டி வந்து கச்சேரி செய்வார்களாம்! இரவு நேரங்களில் நன்றுடையான் விநாயகரும், நந்தி தேவரும் கச்சேரிகளை பற்றி விரிவாக்கப் பேசிக் கொள்வார்கள் என்று வேடிக்கையாக சொல்வதுண்டாம்!

இங்கு நவராத்திரி, கிருத்திகை, சிவராத்திரி, ஹனுமத் ஜெயந்தி என்று அத்தனை விசேஷங்களும் கொண்டாடப் படுகின்றன. இவ்விறைவனை வணங்கி வழிபடுவோர் குடும்பத்தில் ஒற்றுமை, குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம், வேலை வாய்ப்பு, திருமணம், மக்கட்பேறு  இவை கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

திருச்சியில் கிழக்கு புலிவார் தெருவில் நெருக்கமான கடைகளுக்கிடையே சிறிய கோபுரத்துடன் காணப்படும் இவ்வாலயம் திருச்சி மக்கள் பலரும் அறிவதில்லை. முருகன் தியேட்டர் அருகில் என்று சொன்னாலே ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களுக்கு புரிகிறது. திருச்சிக்கு வருவோர் அவசியம் தரிசிக்க வேண்டிய சிறப்பான ஆலயம்.



செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

என் மனைவியைப் பற்றி




மங்கையர் மலர் ஏப்ரல், 1999 ஆண்டு வெளியானது



ஒரு ஆண் வாழ்வின் முதல் 25 வருடங்களை தாய், தமக்கை, தங்கை என்ற பெண்களுடன்தான் கடத்துகிறான். நாட்கள் ஆக ஆக அந்தப் பெண்கள் சிறிது சிறிதாக அவன் வாழ்விலிருந்து ஒதுங்கிப் போகும் நேரம். அவன் மனம் தனக்காகவே வாழ்ந்து, தன்னை மட்டுமே காதலித்து, தனக்காகவே வாழ்வின் ஒவ்வொரு நாளையும் வாழப்போகும் மனைவியைப் பற்றி அநேக கற்பனைகளை வளர்த்துக் கொள்கிறது.



அந்த மனைவி அவனது எண்ணங்களைப் புரிந்து கொண்டு, எதிலும் விட்டுக் கொடுத்து, அழகான வாரிசுகளைப் பெற்றுக் கொடுத்து, அன்பு, பாசம், காதல், தாய்மை நிறைந்தவளாக இருந்து விட்டால் அந்த மனைவி இறைவன் கொடுத்த வரம் மட்டுமா! அவள் வாழ்வே சொர்க்கம்தானே? நானும் அப்படிப் புண்னியம் செய்ததன் பலன் தானோ, அப்படி ஒரு மனைவியைப் பெற்றிருக்கிறேன் என்று பலமுறை இறைவனுக்கு நன்றி சொன்னதுண்டு.



கணவன், மனைவி என்றால் சண்டையும் பிணக்கும் வராதா என்ன? ஊடல் இல்லாத வாழ்வில் உவகை ஏது? எங்களுக்குள்ளும் சண்டை வந்ததுண்டு. ஆனால் என் மனைவியோ என்ன சண்டையானாலும் பேசாமல் இருந்ததோ, சமைக்காமல் இருந்ததோ... ஊஹூம். என் 23 வருட மண வாழ்வில் அப்படி ஒரு சந்தர்ப்பம் நேர்ந்ததேயில்லை. இதற்கு முக்கிய காரணம் அவளது விட்டுக் கொடுத்தல் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். என்னுடன் மிகச் சில மணி நேரம் கூட சண்டையினாலோ வேறு காரணங்களாலோ என் மனைவி பேசாமல் இருந்ததில்லை. எனக்கு என்ன மனக் கவலை ஏற்பட்டாலும் அவளின் புன்சிரிப்பும், ஆறுதல் தரும் வார்த்தைகளும் அவற்றை நொடியில் நீக்கிவிடும் டானிக்!



எத்தனையோ வருடமாக என்னிடமிருந்த வெற்றிலை, சீவல் பழக்கத்தை மிகப் பொறுமையாக எடுத்துச் சொல்லி என்னை விட வைத்த பெருமை என் மனைவியையே சாரும். எங்களுக்குள் ஈகோ இல்லை; இரண்டு எண்ணங்கள் இருந்ததில்லை. இருவரும் எல்லா விஷயங்களையும் இணைந்து பேசியே முடிவெடுப்போம். இத்தனை வருடங்களுக்குப் பின்னும் என் மனைவியைப் பார்க்கும்போது எனக்கு ஏற்படும் சந்தோஷம் புதிதாகவே இருப்பது எனக்கு வியப்பளிக்கும் விஷயம்! என்னுடைய இந்த அன்பு, உறவினர்களால் ‘பெண்டாட்டிதாசன்’ என்று சொல்லப்பட்டாலும் நான் கவலைப்படுவதில்லை! அன்பிற்கு அரவம் கூட கட்டுப்படும்போது என் மனைவியில் தன்னலமற்ற அன்பில் நான் கட்டிப்போடப்படுவதில் என்ன தவறு?



பெண்களுக்கு சந்தேகம் உடன் பிறந்த ஒன்று. தாங்கள் பாராட்டப்பட வேண்டும், மற்றவர்கள் புகழ வேண்டும் என்ற எண்ணமும் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம். ஆண்களுக்கு வீடு, மனைவி, குழந்தைகள் மட்டுமே முக்கியமல்ல. அவர்களின் பணி, அதில் ஆற்ற வேண்டிய கடமைகள் குடும்பத்தைவிட முக்கியம் என்பதை பெண்கள், அது தாயோ, தாரமோ, மகளோ யாரும் புரிந்து கொள்வதில்லை என்பது என் வருத்தம்.



வெளியில் ஒரு ஆண் பலருடன் பழக வேண்டியிருக்கிறது. இன்றைய வேகமான உலகில் பல பேருடன் தொடர்பு கொண்டு, பல விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் அவன் குடும்பத்தின் சில கடமைகளை மறந்து விடுவது சாத்தியமே. மேலும் மனைவி என்ற ஒருத்தி தன்னையும் குடும்பத்தையும் மிகச் சரியாக நிர்வகிப்பாள் என்ற நம்பிக்கைதான் அந்த ஆணை வெளி உலகில் பல விஷயங்களைச் சாதிக்க வைக்கிறது. ஆனால் மனைவியின் ஆசைகளும், ஏக்கங்களும் உதாசீனப் படுத்தப்படும்போது அந்த ஆணுக்கு, வெளியில் பலராலும், பலவிதமாக புகழ்ந்து பாராட்டுப் பெறும் மனிதனுக்கு பூஞ்சோலையாகவும், சொர்க்கமாயும் இருக்க வேண்டிய வீடு சண்டைக் களமாகிறது. இது அவனது உடல், மனம் இரண்டையும் பாதிக்க, வாழ்க்கை திசை மாறி, வழித்துணையுடன் ஏற்படும் சண்டையால் வாரிசுகளும் பாதிக்கப்பட்டு, அழகாக வாழ வேண்டிய வாழ்க்கை அவலமாகிறது.



வாழ்க்கை இறுதிவரை இனிக்க வேண்டுமானால் தன் கடமை, வேலை என்று வாழும் கணவர்கள் மனைவி பக்கமும் கொங்சம் கண்ணையும், மனதையும் திருப்ப வேண்டியது அவசியம். ஒரு சின்ன பாராட்டு, பிறந்த நாள், மண நாளிற்கு பரிசு, அவ்வப்பொழுது தனிமையில் தம்பதியராகச் செல்லும் ஒரு சிறிய பயணம், இவை போதுமே அந்தப் பெண்களை மகிழ்ச்சிப் படுத்த. கணவன், குழந்தைகள் என்று ‘அவர்களையே உலகமாக எண்ணி, தன் சுக துக்கங்களை மறந்து வாழும்’ மனைவிக்கு கணவன் செய்யும் மிகச் சிறிய கடமைதானே இது?



பொதுவாகப் பெண்களிடம் இருக்கும் மிகப் பெரிய குறை, தங்கள் உடல் நிலையில் ஏற்படும் குறைகளை, சுகவீனங்களை பெரும்பாலும் வெளியில் சொல்வதில்லை. உடல் நிலை மோசமாகும் வரை விட்டு கடைசியில் தானும் கஷ்டப்பட்டு, அடுத்தவர்களையும் துன்பப்பட வைப்பதில் அவர்களுக்கு என்ன ஒரு சந்தோஷமோ? பல பிரச்சனைகளோடு போராடும் ஒரு கணவன், மனைவியின் குறையை சொன்னால்தானே தீர்த்து வைக்க முடியும்? கணவனாகவே அறிந்து தன்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டும், சரி செய்ய வேண்டும் என்று பெண்கள் நினைப்பதை மாற்றிக் கொள்வார்களோ?



ஆண்களுக்கும் மனம் உண்டு; ஆசைகள் உண்டு. ஆயிரம் ஊர்கள் சுற்றி வந்தாலும், மனதில் ஆயிரத்தெட்டு கவலைகள் இருந்தாலும், ‘அப்பாடா’ என்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள அவன் தேடுவது அன்பு நிறைந்த மனைவியின் ஆதரவான வார்த்தைகளைத்தான். அதைப் புரிந்து கொண்டு அரவணைக்க வேண்டியது ஒரு நல்ல மனைவியின் கடமை. அந்த அன்பில் கட்டுப்பட்ட எந்த ஆணும் மகுடிக்கு ஆடும்  நாகம்தான்.


ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

புதிய உறவு


"வ்ருஷாலி! அவளை வெளியே போகச் சொல்லு. நான் ராக்கியெல்லாம் கட்டிக்கொள்ள தயாராக இல்லை. எனக்கும், அவளுக்கும் எந்த உறவும் இல்லை" ராகேஷ் கோபத்துடன் வெளியே சென்று விட்டான்.
ஷீலாவுக்கு அழுகை வந்து விட்டது. வ்ருஷாலியின் தோள் மேல் சாய்ந்து அழ ஆரம்பித்து விட்டாள்.
"அண்ணி! நான் என்ன பெரிய தப்பு செய்து விட்டேன்? என் மனதுக்குப் பிடித்தவரைக் கல்யாணம் செய்து கொண்டது தப்பா? சுந்தர் என்னை எப்படி வைத்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா?"
"அழாதே ஷீலா! நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டேன். உன் அண்ணன் மனதை மாற்றவே முடியவில்லை. நீ ஏதோ மிகப்பெரிய தப்பு செய்து விட்டதாகச் சொல்கிறார். நான் என்னம்மா செய்வது?"
வ்ருஷாலியின் இயலாமை அவள் பேச்சில் தெரிந்தது.
"அண்ணா எப்பவுமே அப்படித்தானே அண்ணி! தான் எடுத்த முடிவிலிருந்து மாறவே மாட்டார். நான் இதுவரை ஒரு வருஷம் கூட ரக்ஷா பந்தனுக்கு அண்ணனுக்கு ராக்கி கட்டி, திலகம் வைக்காமல் இருந்ததில்லை. அண்ணன் இந்த ஒன்பது மாதத்தில் கொஞ்சமாவது மனம் மாறியிருப்பார் என்று நினைத்து தான் வந்தேன்.
"சுந்தரிடம் கேட்டபோது 'தாரளமாப் போயிட்டு வா. நீ உன் பிறந்த வீட்டுக்குப் போவதை நான் எப்பவும் தடுக்க மாட்டேன்னு சொன்னார். நான் இப்போ அவரிடம் போய் என்ன சொல்வது"
மனசு தாங்காமல் விசும்பினாள் ஷீலா.
"நல்ல நாளும் அதுவுமா அழாதே ஷீலா. உள்ளே வா சாப்பிடு.... பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டு வெறும் கையோடு போகக் கூடாது. இன்னும் ஒரு வருஷம் போனால் எல்லாம் சரியாகிவிடும்"
"வேண்டாம் பாபி! அண்ணன் கையில் ராக்கி கட்டி, அவரிடம் ஆசி வாங்கலாம்னு வந்தேன். அது நடக்கவில்லை. நான் வரேன் பாபி"
ஏமாற்றத்துடன் திரும்பியவளை பழைய நினைவுகள் ஆக்கிரமித்தன.
நினைவு தெரிந்த வயது முதலே ஷீலாவுக்கு மிகவும் பிடித்த பண்டிகை ரக்ஷா பந்தன். சிறு வயதில் 'அண்ணா எவ்வளவு பணம் தருவான், என்ன வாங்கலாம்' என்று யோசித்தவள், பெரியவளானதும் தனக்கு வேண்டியதை பரிசாக வாங்கித் தரச் சொல்லி அண்ணனிடம் கேட்பாள்.
ராகேஷுக்கும் ஷீலாவிடம் கொள்ளை பிரியம். அவன் முதன்முதலாக சம்பாதித்து ஷீலாவுக்கு வாங்கிக் கொடுத்த செயினை இதுவரை அவள் கழுத்திலிருந்து கழற்றியதேயில்லை.
ஷீலாவுக்கு அப்பொழுது வயது பதினெட்டு... வெளியூர் சென்று காரில் திரும்பிய அவர்களின் பெற்றோர் இருவரும் விபத்தில் இறந்துவிட, அன்று முதல் ஷீலாவுக்கு அம்மா, அப்பா எல்லாமே ராகேஷ்தான்! அப்பாவின் பிசினஸ் வேண்டாமென்று வேறு வேலையில் இருந்த ராகேஷ், இனி தங்கையின் பொறுப்பு தன்னிடம் என்பதைப் புரிந்து கொண்டு, தன் அப்பாவின் பிசினஸை தான் ஏற்று நடத்த ஆரம்பித்தான்.
விரைவில் அவனது புத்திசாலித் தனத்தால் உயர்ந்த நிலைக்கு வந்தான். ஷீலாவை சிறிதும் கஷ்டப்படாமல் பார்த்துக் கொண்டவன் அவள் பட்டப்படிப்பை முடித்ததும் திருமணம் செய்யப் போவதாகச் சொன்னான்.
தனக்கு எம்.பி.ஏ படிக்க ஆசை என்ற ஷீலாவை, அவள் மனம் கோணாமல் படிக்க வைத்தான். ஷீலாவின் வற்புறுத்தலால் வ்ருஷாலியை மணந்தான். வ்ருஷாலி அண்ணியாக மட்டுமில்லாமல், ஷீலாவுக்கு அம்மாவாகவும் இருந்து அவளை அன்போடும், பாசத்தோடும் கவனித்துக் கொண்டாள்.
எம்.பி.ஏ படிக்கும்போது சுந்தருடன் ஏற்பட்ட நட்பு, காதலாக மாற, இருவரும் இணைந்தால் வாழ்க்கை இனிமையாகும் என்ற எண்ணம் உறுதிப்பட, ஷீலா தன் காதலைப் பற்றி அண்ணியிடம் சொன்னாள்... ராகேஷோ எதையும் காதில் வாங்காமல், காதலைப் பற்றி புரிந்து கொள்ளாமல் தான் பார்க்கும் பையனைத்தான் ஷீலா மணக்க வேண்டும் என வற்புறுத்தினான். ஷீலாவின் அழுகை அவன் மனதைக் கரைக்கவில்லை.
"அண்ணி.... என்னால் சுந்தர் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை... அவர் நமக்கு எதிலும் குறைவில்லை. நல்ல வேலை.... கை நிறைய சம்பளம்... அவர் பெற்றோர் எங்கள் திருமணத்திற்கு சம்மதித்து விட்டனர். நீங்களாவது பையாவிடம் எடுத்து சொல்லுங்கள் பாபி"
வ்ருஷாலி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை ராகேஷ்... சுந்தரை நேரில் சந்தித்த போது அவனுடைய நல்ல குணத்தையும், மனதையும் புரிந்து கொண்ட வ்ருஷாலி ஷீலாவை அவன் பெற்றோர் சம்மதத்துடன் மணம் செய்து கொள்ளச் சொன்னாள். அடுத்த சில நாட்களில் திருமணம் முடித்து, ராகேஷிடம் ஆசி வாங்க வந்தபோது அதிர்ச்சியடைந்த ராகேஷ், அவளுடனான தன் உறவு முடிந்து விட்டது என்று சொல்லி விட்டான். அன்று அண்ணனைப் பார்த்த பிறகு இன்றுதான் ஷீலா அவன் வீட்டுக்கு வந்தாள்....
சுந்தரும், அவன் பெற்றோரும் அவளை வேற்று மாநிலத்தவள் என்று எண்ணாமல் மிகவும் அன்போடு நடத்த, வாழ்க்கை பூஞ்சோலையாக இருந்தது... அவள் பண்டிகைகளைக் கொண்டாட வீட்டில் யாரும் தடை சொல்லாததால்தான், ரக்ஷா பந்தனுக்கு ராக்கி கட்டிவிட்டு வருவதாகச் சொல்லி அண்ணன் வீட்டுக்கு வந்தாள் ஷீலா, அண்ணன் மனம் மாறியிருக்கும் என்ற எண்ணத்தில்.... பழைய நினைவுகளை அசை போட்டபடி வந்தவளை, யாரோ பலமாகத் தள்ளுவது போல் தடுமாறி கீழே விழுந்தவள், தன்னைச் சுற்றி கூட்டம் கூடுவதையும், ஒரு காருக்கு முன்னால் ஒருவர் விழுந்து அடிபட்டுக் கிடப்பதையும் பார்த்தவள் அப்படியே நினைவிழந்தாள்.
கண் விழித்தவள் தான் ஆஸ்பத்திரியில் இருப்பதை அறிந்து, அங்கிருந்த நர்ஸிடம் விபரம் கேட்டாள்.
"நர்ஸ்....எனக்கு என்ன ஆச்சு?"
"ஒண்ணுமில்லை மேடம்... உங்களுக்கு லேசான அடிதான்.. வேரு ஒன்றும் இல்லை... ஆனால் அந்த ட்ராஃபிக் போலீஸ்காரருக்குதான் தலையில் நல்ல அடி."
"என்ன சொல்றீங்க?"
"ஆமாம் மேடம்... நீங்கள் தெருவைக் க்ராஸ் பண்ணும்போது, எதிரில் வந்த காரை கவனிக்காததைப் பார்த்து, அவர்தான் உங்களைத் தள்ளிவிட்டார்... தான் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். நல்ல வேளை உயிர் தப்பியது."
"இப்போ எப்படி இருக்கிறார்?"
"இப்பதான் அவருக்கு நினைவு வந்தது... கண் விழித்ததும் உங்களைப் பற்றிதான் கேட்டார்."
"நர்ஸ்! என்னுடைய ஹேண்ட் பேக் எங்கே?"
"இதோ இருக்கு மேடம்... அதில் இருந்த விலாசம் பார்த்து இப்போதான் உங்கள் கணவருக்கு போன் செய்தோம்."
"நான் அந்த போலீஸ் காரரைப் பார்க்கணுமே?"
"தாராளமா பார்க்கலாம்... பக்கத்து ரூமில்தான் இருக்கார்.."
அடுத்த அறையில் நுழைந்தவள் அந்த ட்ராஃபிக் போலீஸைப் பார்த்து நன்றிப் பெருக்கில் கைகளைக் கூப்பினாள்; வார்த்தைகள் வரவில்லை; கண்ணீர் கண்களை மறைத்தது.
"அண்ணா! உங்கள் வலது கையை நீட்டுங்கள்"
எதுவும் புரியாமல் வியப்புடன் பார்த்த அவரது நீட்டிய கையில் தான் வைத்திருந்த ராக்கியைக் கட்டினாள். நெற்றியில் திலகம் இட்டு, தான் கொண்டு வந்த இனிப்பை அவரது வாயில் போட்டாள்.
"என்னம்மா இதெல்லாம்?" ஒன்றும் புரியாமல் வினவினார் அவர்.
தான் தன் அண்ணன் வீடு சென்று ஏமாற்றத்துடன் திரும்பியதைச் சொன்னாள்..
"என் உயிரைக் காப்பாற்றிய நீங்கள்தான் என் அண்ணா. என்னை ஆசீர்வதியுங்கள்."
பாதங்களைத் தொட்டு வணங்கியவளுக்கு ஆசி கூறியவர், தன்னிடம் இருந்த ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார்.
"எனக்கு அக்கா, தங்கச்சி இல்லையேன்னு ரொம்ப வருத்தப் பட்டிருக்கேன்மா... இந்த ரக்ஷா பந்தன் நாள்ல எனக்கு ஒரு தங்கச்சி கிடைச்சது சந்தோஷமா இருக்கும்மா. நீ வாழ்க்கையில எல்லா நலனும் பெற்று அமோகமா இருக்க ஆண்டவரை வேண்டிக்கறேன்மா... இப்ப என்கிட்ட ஐம்பது ரூபாதான்மா இருக்கு.. இதை என் அன்புப் பரிசா வெச்சுக்கம்மா".
அதே சமயம் சுந்தர் பதட்டத்துடன் உள்ளே வந்தான்.
"என்னாச்சு ஷீலா... தெருவில பார்த்து நடக்க வேண்டாமா? எங்க அடி பட்டது?" நடந்த விஷயங்களைச் சொன்னாள் ஷீலா.
"என் மனைவியைக் காப்பாத்தின உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதுனே தெரியல சார். . நர்ஸ்... இவரோட சிகிச்சைக்கு ஆன பில்லையும் கொடுங்க... நான் பே பண்ணிடறேன்."
"அதெல்லாம் வேணாம்.. நான் பார்த்துக்கறேன்... நீங்க தங்கச்சியை அழைச்சுகிட்டு வீட்டுக்கு போங்க. போய் நல்லா ரெஸ்ட் எடும்மா".
"இது எங்க கடமை. உடம்பு சரியானதும் ஒரு நாள் கண்டிப்பா வீட்டுக்கு வாங்க அண்ணா."
"ஒரு நாள் என்ன இனி அடிக்கடி என் தங்கச்சி வீட்டுக்கு வருவேன்ம்மா! இந்த விபத்துனால எனக்கு ஒரு சகோதரி கிடைச்சதை நினைச்சு எனக்கு மகிழ்ச்சியா இருக்குமா!"
"சரி சார்...உடம்பை பார்த்துக்கோங்க... நாங்க வரோம்... உங்க பேர்?"
"இஸ்மாயில்"
மதங்களுக்கப்பால் இணைந்த மனதுகளை எண்ணி நிறைவான சந்தோஷத்துடன் சென்றனர், ஷீலாவும், சுந்தரும்!


ஞாயிறு, 4 ஜூன், 2017

அற்புதம் புரியும் அவதாரம்


தீபம் ஜூன் 20, 2017 இதழில் வெளியான கட்டுரை

மஹாபெரியவா ஜெயந்தி...8.6.2017

பெரியவா சரணம்

ஸதா சிவ ஸமாரம்பாம் சங்கராச்சார்ய மத்யமாம்!
அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்!!
அபார கருணாசிந்தும் ஞானதம் சாந்தரூபிணம்!
ஸ்ரீசந்த்ரசேகரகுரும் ப்ரணமாமி முதான்வஹம்!!

மகாபெரியவர், ஆசாரியாள், ஜகத்குரு என்றெல்லாம் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜயந்தி தினம் ஜூன் 8ம் தேதி வருகிறது, அவரது 124வது ஜயந்தி விழா கொண்டாடும் இந்நாளில் அவரது வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

சுப்ரமணிய சாஸ்திரி, மகாலட்சுமி தம்பதியரின் இரண்டாவது மகனாக விழுப்புரத்தில் 1894ம் ஆண்டு, வைகாசி 2ம் நாள், அதாவது மே 20ம் தேதி, அனுஷா நட்சத்திரத்தில் சுவாமிநாதன் என்ற பெயரில் ஆசாரியார் அவதரித்தார்.

வீட்டில் அவர் தந்தையிடமே ஆரம்பப் பாடங்களைப் படித்தவர், எட்டு வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். 1905ம் ஆண்டு உபநயனம் எனும் பூணூல் போடும் வைபவம் நடைபெற்றது.

1906ம் ஆண்டு நான்காவது ஃபாரமில் படித்தபோது ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் பிரின்ஸ் ஆர்தராக அற்புதமாக ஆங்கிலம் பேசி நடித்த தன் மகன், பின்னாளில் பெரிய அதிகாரியாக வருவாரென அவர் தந்தை எண்ணினார். ஆனால் ஆண்டவனின் எண்ணம் வேறாயிற்றே!


காஞ்சியின் 66வது ஆசார்யர் தென் ஆற்காடு மாவட்டம் சென்றிருந்த சமயம் தந்தையுடன் தரிசனத்திற்கு வந்திருந்த சுவாமிநாதனே தனக்குப் பின் பீடத்தை ஆரோகணிக்கப் போவதை அறிந்து, தக்க முறைகளுடன் அவரை காஞ்சிக்கு வரச் செய்து, 68வது பீடாதிபதியாக அறிவித்தார். 1907, பிப்ரவரி 13, சுவாமிநாதன் காஞ்சி பீடத்தின் 68வது குருவானார். காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் எனும் திருநாமம் பெற்றார்.

பின் வேத சாஸ்திரங்களை அதற்கான பண்டிதர்களிடம் முறையாகப் பயில, கும்பகோணம் மடத்துக்கு அனுப்பப் பட்டார். பீடமேறிய அவரால் நடத்தப் பெற்ற முதல் கும்பாபிஷேகம், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் ஆலயத்தில் 1908 பிப்ரவரி 6ம் நாள் நடைபெற்றது. குடந்தை மடத்தில் சுவாமியைத் தரிசிக்கவும், சந்திக்கவும் அடிக்கடி மக்கள் வந்தது அவரது படிப்புக்கு இடையூறாக இருந்ததால் திருச்சிக்கு அருகே உள்ள மகேந்திர மங்கலத்தில் தங்கி படித்தார். வேத சாஸ்திரம் மட்டுமின்றி, ஜோதிடம், இசை, இலக்கியம், தத்துவம் என்று பலவும் படித்தார்.

மார்ச் 1919ல் முதன்முறை காசி யாத்திரை சென்றவர் தொடர்ந்து பல இடங்களுக்கு சுற்றுப் பயணம் செய்தார். தேச பந்து சித்தரஞ்சன் தாஸ், சத்யமூர்த்தி, சேட் ஜம்னாலால் பஜாஜ், ராஜாஜி ஆகியோரை சந்தித்த மகா பெரியவர் 1920 முதல் கதர் ஆடை மட்டுமே அணிவதை வழக்கமாகக் கொண்டார்.

ஜனவரி 1931ல் பால் பிரண்டன் என்ற ஆங்கில எழுத்தாளர் பெரியவருடன் சந்தித்துப் பேசி, அதனைப் பற்றி அவரது ‘ஸர்ச் இன் சீக்ரெட் இண்டியா’ (Search in Secret India) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். தேசமெங்கும் யாத்திரை மேற் கொண்டார்; அனைவருக்கும் ஆசி வழங்கி, அருளினார். அவரை பக்தர்கள் அனைவரும் காஞ்சி பெரியவா எனப் பெருமையுடன் சொல்லிப் பூரித்தனர்.

ஒருமுறை (14.6.1932), ஆந்திர மாநிலத்தின் நகரியில் முகாமிட்டிருந்தார், காஞ்சி மகான். அப்போது, கும்பகோணத்தில் உள்ள அவருடைய தாயார் மகாலக்ஷ்மி அம்மாள் சிவபதம் அடைந்துவிட்டார் எனும் தகவல் சுவாமிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.தாயின் மரணத்தை எந்த உணர்வும் இன்றி அமைதியாக ஏற்றுக் கொண்டது அவரது சன்னியாசத்தின் உயர்வைக் காட்டுகிறது.

ஆச்சார்யக் கடமையை நிறைவேற்றும் வகையில், நீராடிய சுவாமிகள், அந்தணர்களுக்குத் தானம் அளித்து, தன் கடமையைச் செவ்வனே நிறைவேற்றினார். பெரியவாளின் மனதுள் ‘ஈச்சங்குடியில் உள்ள, அவருடைய தாயார் பிறந்த இல்லத்தை வேத பாடசாலையாக்க வேண்டும்; அந்த இடத்தில், எப்போதும் வேத கோஷம் முழங்கிக்கொண்டே இருக்கவேண்டும்’  என்ற எண்ணம் ஏற்பட்டது.

1932 செப்டம்பர் 28 சென்னைக்கு முதன் முறையாக விஜயம் செய்தார். ஒவ்வொரு இடத்திலும் இளம் ஆசாரியாரைக் காண வரும் கூட்டம் கட்டுக் கடங்காது. 1933, மே 18ம் நாள் முதன் முறையாக சிதம்பரம் நடராஜப் பெருமானை தரிசித்தார். இந்தியாவின் பல இடங்களுக்கு சுவாமிகள் கால் நடையாகவே சென்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

1954ம் ஆண்டு மார்ச் 22, தனக்கு அடுத்த பீடாதிபதியாக மன்னார்குடியைச் சேர்ந்த சுப்ரமணியம் என்பவரைத் தேர்ந்தெடுத்தார். 1957 செப்டம்பர் 6ம் நாள் ஸ்ரீ ஜெயேந்திரர் அவர்கள் முன்னிலையில் மகா பெரியவருக்கு காஞ்சியில் கனகாபிஷேகம் நடைபெற்றது.

இரண்டு ஆச்சாரியர்களுமாக இணைந்து பல தலங்களுக்கும், ஊர்களுக்கும் தொடர் விஜயம் செய்தனர். 1966ம் ஆண்டு அக்டோபர் 2 முதல் 1969 மே 23 வரை இருவரும் நான்கு ஆண்டுகள் காஞ்சிபுரத்திலேயே இல்லாமல் ஆந்திரா முழுவதும் தொடர் விஜயம் செய்தது குறிப்பிடத் தக்கது. அதன் பின் 9 வருடங்கள் காஞ்சியிலேயே தங்கியிருந்த பெரியவர் திடீரென கிளம்பி பாத யாத்திரையாக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா முழுதும் 6 ஆண்டுகள் பயணம் செய்தார். 80 வயதில் அவர் செய்த பாத யாத்திரை அவர் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகும்.

1983, மே 28ம் நாள் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால், ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அடுத்த பீடாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டார். அச்சமயம் ஆந்திராவிலிருந்த மகா பெரியவரை இருவருமாகச் சென்று தரிசித்து, அவ்வருட வியாச பூஜையை மூன்று ஆசார்யருமாக இணைந்து செய்தனர். 1984 தமிழ் வருடப் பிறப்பன்று மூவருமாக காஞ்சி திரும்பினர்.

காலங்கள் ஓடின. 93-ஆம் வருடம், பெங்களூருவில் இருந்து, அவரைத் தரிசிப்பதற்காக வந்த ஹரி என்ற பக்தரிடம் ”ஈச்சங்குடி கச்சபுரீஸ்வரர் கோயிலுக்குப் புனருத்தாரணம் பண்ணணும்னு விரும்பறே! நல்லது, பண்ணு!” எனச் சொல்லி,அந்தக் கோயில் குறித்தும், ஸ்ரீகச்சபுரீஸ்வரர் குறித்தும், ஸ்ரீகாருண்யவல்லியின் அளப்பரிய கருணை குறித்தும் கூறிய  பெரியவா, சிறு வயதில் தான் அந்தக் கோயிலுக்குச் சென்றதையும், அங்கே அமர்ந்து வேதங்கள் கற்றதையும் விவரித்தார். சட்டென்று அவரிடம்  ஈச்சங்குடியில் உள்ள தன் தாயாரின் இல்லம் குறித்தும், அந்த இடத்தை வேத பாடசாலையாக அமைக்க வேண்டும் என்கிற தன் விருப்பம் குறித்தும் சொல்லி, ”இது எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்” என்றார்  உடனே ஹரி, ”இது என் பாக்கியம்!’ என்று சொல்லி, ஆனந்தத்தில் அழுதேவிட்டார்.

பிறகென்ன…அந்தவீடு, விலைக்கு வாங்கப்பட்டு, அன்பர்களின் கூட்டு முயற்சியில், வேத பாடசாலைப் பணிகள் துவங்கின. புதிதாகத் துவங்கும் வேத பாடசாலையில், குரு பூஜை நடத்துவதற்காக பெரியவாளின் ஆசியைப் பெற வந்தார் அன்பர் ஹரி. அன்றைய தினம், 8.1.94. அதாவது, தனது கருணைப் பார்வையாலும் தீர்க்க தரிசனத்தாலும் உலக மக்களை உய்வித்த அந்த நடமாடும் தெய்வம், அன்றைய தினம் ஸித்தி அடையப் போகிறார் என்று யார்   அறிவார்?

விழுப்புரம் சங்கர மடம்


பெரியவா அன்றைய தினம் யாருக்குமே தரிசனம் தரவில்லை. ஆழ்ந்த தியானத்திலேயே இருந்தாராம். பிரபலங்களின் வருகையும் பெரியவாளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதே போல், ‘ஈச்சங்குடியிலேருந்து ஹரி வந்திருக்கார்’ என்றும் சொல்லப் பட்டது. சட்டென்று கண் திறந்த பெரியவா, மெள்ள நிமிர்ந்தார். அருகில் வரச்சொன்னார். பாதுகைகளை அணிந்துகொண்டு,அவரை ஆசீர்வதித்தார். வேத பாடசாலை துவங்குவதற்கான பத்திரிகையை வாங்கிப் படித்தவர், அதிலிருந்த தன்னுடைய பெற்றோரின் புகைப்படத்தை கண்களில் ஒற்றிக்கொண்டார். பிறகு தன்னுடைய பாதுகைகளை அன்பரிடம் தந்தார். ”இந்தப் பாதுகைகளை எடுத்துண்டு போ! ஈச்சங்குடி வேத பாடசாலையில வை. நன்னா நடக்கும்!’ என சொல்லாமல் சொல்லி, ஆசி வழங்கினார். ஈச்சங்குடி வேத பாடசாலை, அவரின் பேரருளால் இன்றைக்கும் இயங்கி வருகிறது. அவரது பாதுகை இப்பாடசாலையில் அழகுறக் காட்சி தருகிறது.

விழுப்புரத்தில்  பெரியவரின் அவதார ஸ்தலமாகிய அவரது இல்லமே 'பாதுகா மண்டபம்' என்னும் சங்கர மடமாக உள்ளது. அவர் பிறந்த அறையில் அவரது  திருவுருவ சிலையும், பாத தரிசனமும் மெய்சிலிர்க்க வைக்கிறது. மடத்து நிர்வாகி, பெரியவர் அங்கு பலமுறை வந்து தியானத்தில் அமர்ந்து பூஜை செய்திருக்கிறார் என்றும், இப்பொழுதும் ஸ்ரீ ஜெயேந்திரரும், பால பெரியவரும் அடிக்கடி வந்து பூஜை செய்வார்கள் என்றும் கூறினார். ஒவ்வொரு மாத அனுஷமும் அங்கு சிறப்பாகக் கொண்டாடப் படுவதாகக் கூறினார்.

அந்த வீட்டில்தான் பெரியவர் பிறந்து, தவழ்ந்து, விளையாடி, வளர்ந்த இடம் என்பதைக் கேட்டபோது மனமும், மெய்யும் சிலிர்த்து விட்டது. சுவாமிகள் நடந்த அந்தப் புனிதமான இடத்தில் இன்று நாமும் அமர்ந்திருப்பதை நினைக்க 'என்ன தவம் செய்தோமோ நாம்' என்று ஆனந்தம் ஏற்பட்டது.

பாதுகா மண்டபம்

அங்குள்ள பெரிய அறையில் மகாபெரியவரின் அழகான சிலை ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. நேரிலேயே அவர் அமர்ந்திருப்பது போல் காணப்படுகிறது. ஒரு பல்லக்கில் பெரியவரின் புகைப்படம் வைக்கப் பட்டுள்ளது.இவ்வருட ஜெயந்தி மஹோத்சவம் ஜூன் 5 முதல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மஹாபெரியவா


விழுப்புரம் பெரியவரின் அவதார ஸ்தலமும், ஈச்சங்குடி வேத பாடசாலையும் அவசியம் மகாபெரியவரின் பக்தர்கள் தரிசிக்க வேண்டிய இடங்களாகும். நூற்றாண்டுகள் வாழ்ந்து, நடமாடும் தெய்வமாய் விளங்கி, பலரின் வாழ்விலும் அதிசயங்களையும், அற்புதங்களையும் இன்றும் நிகழ்த்தி தம் இறையருளை உலகம் முழுதும் பரவச் செய்த ஜகத் குருவின் காலத்தில் வாழும் பாக்கியம் பெற்ற நாம், அவரது தெய்வத் திருவடிகளை இந்நாளில் தியானித்து, ஹரஹர சங்கர...ஜெயஜெய சங்கர என்று ஜபித்து அவரருள் பெறுவோம்.

ஈச்சங்குடி பாடசாலா



ஞாயிறு, 28 மே, 2017

மாசில்லாத மலைவாசஸ்தலம்...பச்மரி

தி இந்து தமிழ் நாளிதழ் இணைப்பான ‘பெண் இன்று’ 28-05-2017 அன்று வெளியான சுற்றுலா பற்றிய செய்தி


கடல் மட்டத்திலிருந்து 3555 அடி உயரத்தில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ள பச்மரி(Pachmari), மத்திய பிரதேசத்திலுள்ள ஒரே குளிர்வாச ஸ்தலம். விந்திய சாத்புரா மலைகளுக்கிடையே அமைந்துள்ள இந்த இடம் சாத்புராவின் ராணி என அழைக்கப்படுகிறது. 1875ல் ஜேம்ஸ் ஃ போர்ஸித் என்ற ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்ட இவ்விடம் அழகின் இருப்பிடம்! ஒரு உல்லாசப்பொழுதுபோக்கு இடத்திற்கான அத்தனை விஷயங்களும்அளவின்றிக் கொட்டிக் கிடக்கும் அற்புதசுற்றுலாத்தலம்!

பளிங்கு போல் விழும் அருவிகள்,நெளிந்து ஓடும் நீரோடைகள்,அடர்ந்த காடுகள், 1000 வருடத்துக்கு முந்தைய கலாச்சாரம் பற்றி அறியவைக்கும் குகை ஓவியங்கள், சிவாலயங்கள், அழகிய வேலைப்பாடமைந்த கண்ணாடி சன்னல்களுடனான சர்ச்சுகள், கோண்ட் என்ற பழங்குடி மக்களின் நடனம், மிதமான குளிர் என்று அத்தனையும் கண்ணுக்கும், மனதுக்கும்  பெருவிருந்து!

பஞ்சபாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின்போது இங்கு வாழ்ந்ததன் அடையாளமான ஐந்து பாண்டவர் குகைகள் உள்ளன.அதன் பெயராலேயே இவ்விடம் பச்மரி...அதாவது பாஞ்ச்  என்றால் ஐந்து, மரி என்றால் குகை என்பதைக் கொண்டே பச்மரி எனப்படுகிறது.

சாத்புரா நேஷனல் பார்க் என்ற வனவிலங்கு சரணாலயம், அன்னை இந்திராகாந்தி 1964ல் வந்ததன் அடையாளமாக பெயரிடப்பட்ட பிரியதர்ஷினி பாயிண்ட், கண்ணைப் பறிக்கும் 150 அடி உயர பீஃபால்ஸ்(Bee Falls), டட்ச் ஃ பால்ஸ், 350 அடி உயர ரஜத் ஃ பால்ஸ், இரு உயர்ந்த மலைகளுக்கிடையே பயங்கரமான வீ வடிவ ஹண்டிகோ என்ற பள்ளத்தாக்கு, சூர்ய உதயமும், அஸ்தமனமும் அழகுறக் காட்டும் 4400 அடி உயர தூப்கார், மூன்று  பக்கமும் மலைகளால் சூழப்பட்டு, மூன்று வாசல்களுடைய ஒரு கோட்டை போல உயர்ந்து நிற்கும் ரீச்கரின் மிரட்டும் அழகு... இவற்றில் நாம் நம்மையே மறந்துவிடுவோம்..

சிவபெருமானின் வாசஸ்தலங்களான மஹாதேவ், ஜடாசங்கர், சவுராகர் இவை ஆன்மீக பக்தர்கள் தரிசிக்க வேண்டிய சிவாலயங்கள். பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்த சிவபெருமான், அவன் அவரையே தலையில் கைவைத்து சாபத்தை பரீட்சிக்க வந்தபோது அவரது ஜடை, நாகம், திரிசூலம் இவற்றை மேற்கூறிய இடங்களில் வைத்துவிட்டு, தான் அங்கிருந்த குகைக்குள் ஒளிந்து கொண்டாராம். அக்குகையில் இன்றும் இறைவனை தரிசிக்கலாம்.


காஷ்மீர், சிம்லா போன்று அனைவரும் அறியாத இடமாக இது இருப்பதன் காரணம் இங்கு ரயில், பஸ் வசதி இல்லாததே. போபால் மற்றும் ஜபல்பூரிலிருந்து இவ்விடம் செல்லலாம். ஹௌரா- மும்பை ரயில்பாதையிலுள்ள பிப்பாரியா என்ற ரயில் நிலையத்தில் இறங்கி, வேன், ஜீப்புகள் மூலமாக செல்லலாம்.நிறைய ஹோட்டல்கள் உள்ளன.அதிகம் யாரும் அறியாத மறைந்திருக்கும் புதையலாக,அதிக மக்கள் கூட்டமில்லாத, மாசில்லாத அழகிய பச்மரி அனைவரும் சென்று கண்டு களித்து அனுபவிக்க ஏற்ற சுற்றுலாத்தலம்!






புதன், 10 மே, 2017

கருணை புரிவாள் கனக மகாலக்ஷ்மி


தீபம் மே 05, 2017 இதழில் வெளியான கட்டுரை





ஆலயங்கள் நிறைந்த நகரம் ஆந்திரா. நரசிம்மர், சிவன், தேவி ஆலயங்கள் என்று எத்தனை ஆலயங்கள்! அவற்றினுள் நுழையும்போதே நமக்கு பக்தி உணர்வும், மெய்சிலிர்ப்பும் உருவாவதை உணரலாம்.

விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ கனகமகாலக்ஷ்மி ஆலயம் மிகச் சிறப்பும், சாந்நித்தியமும் வாய்ந்த வித்யாசமான ஆலயம். ஆலயத்துக்கு செல்லும் அனைத்து பெண்களும் அர்ச்சகர் துணையின்றி தாமே அன்னைக்கு அபிஷேகம் செய்து வேண்டியதை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

விசாகப்பட்டினத்தில் புருஜுபேட்டா என்ற இடத்தில் அமைந்துள்ளது இவ்வாலயம். சாலையின் நடுவில் அமைந்துள்ள இவ்வாலயம் உருவான விதம் நம்மை வியக்க வைக்கிறது.

கோபுரம்

கோபுர முகப்பு


1912ம் ஆண்டில் விசாகப்பட்டினத்தை ஆண்ட ராஜாக்களின் குலதெய்வமாக விளங்கிய கனகமஹாலக்ஷ்மி தேவி சிலை மன்னர்களின் கோட்டை பகுதிக்கு அருகில். ஒரு கிணற்றுக்குள்ளிருந்து எடுக்கப்பட்டது. தேவியின் அழகில் மயங்கிய மக்கள், அதனை அந்த முனிசிபல் சாலையின் நடுவிலேயே ஸ்தாபித்து வணங்கி வந்தனர்.

1917ம் ஆண்டு சாலையை அகலப் படுத்தியபோது, அச் சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்தில் வைத்தனர். அந்நிகழ்வுக்குப் பின் வைசாக்கில் மிக்க கொடுமையான தொற்று நோயான பிளேக் நோய் படு வேகமாகப் பரவி, பலரை பலி வாங்கியது. இவ்வம்மனை அகற்றியதால் இந்த நோய் வருகிறது  என அஞ்சிய மக்கள், மீண்டும் தேவியை சாலை நடுவில் ஸ்தாபித்து பூஜைகளைத் தொடர்ந்தனர். என்ன அதிசயம்... சில நாட்களிலேயே நோய் மறைந்தது! ஊரும் செழித்தது! மக்களின் நம்பிக்கை அதிகமாக, அது முதல் 'கனகமஹாலக்ஷ்மி அம்மவாரு' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட தேவியின் பெருமை திக்கெட்டும் பரவியது. இன்றும் வைசாகின் செல்வ வளத்திற்கு காரணம் இந்த அன்னையே என்று கூறப் படுகிறது. தன்னை வணங்கியவர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் தேவியின் பெருமை அளவற்றது. பெண்கள் தம் மாங்கல்யம் நிலைக்கவும், பிறந்த குழந்தைகளின் நோயற்ற வாழ்விற்கு அவள் காலடியில் விடுவதும் மிக முக்கிய வழிபாடாகும்.

தேவிக் கிணறு

அம்மவாரு


ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட தேவியின் ஆலயம் கடந்த நூறாண்டுகளில் மிக வேகமான வளர்ச்சி அடைந்துள்ளதாம்.இன்றைய வைசாக்கின் காவல் தெய்வமாகவும், தாயாகவும் விளங்கும் இத்தேவி சிலையின் காலம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட விசாக வர்மன் என்ற அரசன் காலத்ததாக இருக்கும் எனப்படுகிறது.ஒரு சிறிய சன்னதியுடன் இருந்த இவ்வாலயம் இன்று பலகோடி வருமானம் ஈட்டும் ஆந்திராவின் பணக்கார ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

இனி தேவியை தரிசிப்போம். சாதாரணமாக அங்கம் பின்னமான தெய்வ ரூபங்களை நாம் பிரதானமாக வணங்குவதில்லை. ஆனால் இங்கு எந்த ஆலயத்திலும் இல்லாதவிதமாக, வடமேற்கு திசை நோக்கி வலது கையில் தாமரைமொட்டும், இடக்கை பின்னமாயும்  மார்புவரை உள்ள  அன்னையே அழகுருவாய் காட்சி அளிக்கின்றாள்.கண்களின் காருண்யம் நம்மை 'நீயே கதி அம்மா' என்று சரணடையவைக்கிறது.தேவி தனக்கு மேல் கூரை தேவையில்லையென்று ஆணையிட்டதால், சுற்றிலும் கோபுரங்கள் இருந்தாலும் அன்னையின் சிரம் வானம் பார்த்தே உள்ளது. ஜாதி, மத  பேதமின்றி எவரும் அம்பிகையைத் தன் கைகளால் அபிஷேகம், அர்ச்சனை செய்து வணங்கலாம். தன்னை வழிபட எந்த தடையும், யார் உதவியும் இருக்கக் கூடாது என்பது அன்னையின் ஆணையாம். அதனால் இங்கு நமக்காக பூஜிக்க அர்ச்சகர்கள் கிடையாது.  

பெண்கள் வரிசையில் சென்று தாமே பால், இளநீர், மஞ்சள், குங்குமம் இவற்றால் நிதானமாக அம்மனை அபிஷேகம் செய்து பூஜிக்கின்றனர். ஆலய அலுவலர்கள் உடனுக்குடன்  தேவியை சுத்தம் செய்கின்றனர். என் முறை வந்தபோது சற்று தயக்கமாக இருந்தாலும், அப்படிச் செய்யும்போது மெய்சிலிர்ப்பும், மனதிருப்தியும், தேவியை நெருங்கிவிட்டோம் என்ற மகிழ்ச்சியும் மனதில் ஏற்பட்டதை உணர முடிந்தது. அம்மனை நெருங்கி நம் மனக்குறைகளை சொல்லும்போதே, தேவி நம்மைக் கைவிட மாட்டாள் என்று உணர முடிகிறது. அடைக்கலம் என்று அவளை அண்டிச் செல்லும்போதே நம் மனம் நிச்சலனமடைகிறது. அன்னையை விட்டு அகலவே மனமில்லை. இந்த தனித்துவமான தானே வணங்கும் முறையில் ஈர்க்கப்பட்ட மக்கள் இங்கு பல வெளி மாநிலம் மற்றும் நாடுகளிலிருந்து வந்து தரிசிக்கின்றனராம்.மற்றும் பின்னால் உருவாக்கப்பட்ட ஸ்ரீராஜராஜேஸ்வரி, சிவன், விஷ்ணுவிற்கும் சன்னதிகள் உள்ளன. அம்மன் கிடைத்த கிணற்றைச் சுற்றிலும் அஷ்டலக்ஷ்மிகள்  அமைக்கப் பட்டுள்ளது.

அபிஷேகம்





தினசரி காலை 5 மற்றும் 11.30,மாலை 6 மணிக்கு ஒரு மணி நேரத்திற்கு திரிகால அர்ச்சனை நடைபெறும்.வியாழக்கிழமைகளில் இத்தேவியை வழிபட வரிசையில் நிற்க வேண்டுமாம்.மார்கழி மாதம் முழுதும் நடைபெறு 'மார்கஸீரா மஹோத்சவம்' மிக பிரசித்தமான, பெரியதிருவிழா. தினமும் லலிதா, லக்ஷ்மி ஸஹஸ்ரநாமம், தேவி சப்தசதி பாராயணம், அஷ்டலக்ஷ்மி பூஜை,சிறப்பு அபிஷேகங்கள், கதாகாலட்சேபம், அன்னதானம் என்று ஆலயம் வண்ண விளக்கு அலங்காரத்தில் அற்புதக் காட்சி அளிக்குமாம்.நவராத்திரி 9 நாட்களும் தேவியின் விதவிதமான அலங்காரங்கள் கண்களைக் கவரும்.திரிகால அர்ச்சனை நேரம் தவிர, தினமும் 24 மணி நேரமும் ஆலயம் திறந்திருக்கும். பக்தர்களின் குறைகளைத் தீர்க்க அல்லும், பகலும் தேவி விழித்திருப்பதாக ஐதீகம்.

விசாகப்பட்டினம் செல்லும் அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயம் அன்னை கனகமஹாலக்ஷ்மி அம்மவாரு ஆலயம். வைசாக் ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையத்திலிருந்து ஆட்டோ, டேக்சிகளில் எளிதாகச் செல்லலாம்.
தொடர்புக்கு...

0891-2566515, 2568645, 2711725, 2566514 Mob:9491000651.


வியாழன், 23 மார்ச், 2017

ஆயுதம் ஏந்தா அழகன்


தீபம் ஏப்ரல் 5, 2017 இதழில் வெளியான கட்டுரை

காலாராம் ஆலயம்..
பஞ்சவடி...நாசிக்...மகாராஷ்டிரா





அம்பும், வில்லும் இல்லாத அழகிய ராமர்...


காலாராமர்

ஒக மாட, ஒக பாண, ஒக பத்னி’ என்று (ஒரு சொல், ஒரு வில், ஒரு இல்) போற்றப்பட்ட ஒரே கடவுள் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. ஏனைய கடவுளர் தத்தம் மனைவியருடன் மட்டுமே காட்சி தரும்போது, ஸ்ரீராமன் மட்டுமே, தன் தம்பி, தன் தொண்டன் ஹனுமான் என்று அனைவரையும் தன்னுடன் இணைத்து நிற்பவர்.

ஸ்ரீராமனை எண்ணும்போதே நமக்கு முதலில் நினைவு வருவது அவரது 14 ஆண்டு கால வனவாசம். அதில் பெரும்பகுதியை அவர்கள் நாசிக்கிலுள்ள பஞ்சவடியில்தான் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. கோதாவரியின் கரையில் அமைந்துள்ள நாசிக்கில் பல இடங்கள் ராமாயணத்தின் நிகழ்ச்சிகளை நம் கண் முன் கொண்டு வருகின்றன.

இங்குள்ள சீதா குகையில் சீதையின் சமையலறை உள்ளது. இங்கிருந்துதான் சீதையை ராவணன் அபகரித்துச் சென்றான். லக்ஷ்மணர் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்ததால் இவ்விடம் நாசிகா (மூக்கு) எனப்பட்டு 'நாசிக்'காக மாறியது.

கோதாவரி நதி மிகவும் புனிதமான நதியாகும். இங்கு பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கும்பமேளா  நடைபெறுகிறது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது இந்நதியில் சில துளிகள் அமிர்தம் விழுந்ததாம். இதில் ஒருமுறை நீராடினால் கங்கையில் 60000 முறை நீராடிய புண்ணியம் கிடைக்கும் எனப்படுகிறது. கோதாவரி நதிக்கரையிலுள்ள ஆலயங்கள் ஒவ்வொன்றும் ஒரு அழகு.

பஞ்சவடியில் முக்கியமான அழகும், கம்பீரமும் கலைத் திறனும் கொண்டு விளங்கும் 'காலாராம் ஆலயம்', 83 அடி உயர கோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. 1788ம் ஆண்டு ரங்கராவ் ஓடேகர் என்பவரால்  கட்டப்பட்டது. அவரது கனவில் தோன்றிய ராமர் தன்னை கோதாவரி நதியிலிருந்து கொண்டு வந்து ஆலயம் கட்டுமாறு கூற, மூன்று சிலைகளும் நதியிலிருந்து கொண்டு வரப்பட்டு ஆலயம் உருவாக்கப்பட்டது. அருகிலுள்ள 'ராம்ஷேஜ்' என்ற மலைச் சுரங்கங்களிலிருந்து வெட்டிக் கொண்டு வரப்பட்ட உயர் ரக கருநிறக் கல்லால், 2000 பேர்கள் 12 ஆண்டுகள் உருவாக்கிய இவ்வாலயத்திற்கு 23 லட்சம் ரூபாய் செலவானதாம். கோபுர உச்சியிலுள்ள கலசம் 32 டன் தங்கத்தால் உருவாக்கப்பட்டது. சிறந்த கலையழகுடன் உருவாக்கப்பட்ட இவ்வாலயத்தில் 96 தூண்கள் அமைக்கப் பட்டுள்ளன.

காலாராம் கோவில் கோபுரம்

ஆலயத் தோற்றம்


கர்ப்பக் கிரஹம் அழகிய அலங்காரங்களுடன் காட்சியளிக்கிறது. வெள்ளியாலான திருவாசியின் உச்சியில் ஆதிசேஷன் காட்சி தருகிறார். அழகிய வெள்ளிக் குடைகளின் கீழ் ராமன், லட்சுமணன், சீதை மூவரும் வித்தியாசமான நிலைகளில் காட்சி தருகின்றனர். ராமனின் வலக்கரம் அவரது இதயத்திலும், இடக்கரம் அவரது பாதத்தை நோக்கியும் உள்ளது. 'என் காலைப் பிடித்தவர்களை நான் கைவிட மாட்டேன்' என்று உணர்த்தும் இத்தோற்றம் மிக விசேஷமானது. சீதையாகிய மகாலட்சுமியின் இரு கைகளுமே கீழ் நோக்கி, 'என்னை சரணடைந்தால் எல்லாம் பெறலாம்' என்பது போலுள்ளது. ராம, லட்சுமணர்களிடம் அம்பும், வில்லும் இல்லாததுடன், ஹனுமனும் இல்லை! பஞ்சவடியிலிருந்து சென்றபின்தானே ஹனுமனின் நட்பு கிடைக்கிறது!  ராமருடன் இல்லையெனினும், நுழைவாயிலில்  கருநிறக் கல்லிலான ஹனுமான் சிலை மிக அழகாகக் காட்சி தருகிறது.

காலாராமர்


இம்மூன்று விக்ரகங்களும் பஞ்சவடியில் கிடைத்ததாகவும், காலத்தால் மதிப்பிட முடியாத அளவு பழமையான சுயம்பு என்றும் ஆலயத்தார் கூறினர். வேண்டியோர்க்கு வேண்டுவன தரும் வரப்பிரசாதியாம் இம்மூவரும்! சொக்க வைக்கும் அழகில் தம்பியுடனும், தாரத்துடனும் காட்சி தரும் சுந்தரராமனின் சன்னிதியை விட்டு நகரவே மனமில்லை. இவ்வாலயத்தில் ராமநவமி, தசரா, சித்திரை  வருடப் பிறப்பு இவை மிகப் பெரிய விழாக்களாகக்  கொண்டாடப்படுகின்றன.

நம் வாழ்வில் ஒருமுறை அவசியம் தரிசிக்க வேண்டிய அற்புதமான ஆலயம் காலாராமர் ஆலயம்.

மும்பையிலிருந்து நாசிக்கிற்கு விமானம்,பேருந்து மற்றும் புகைவண்டியில் செல்லலாம்.

ஆலய நேரம் ...காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை
தொலைபேசி....0253 2621730