Thanjai

Thanjai

புதன், 10 டிசம்பர், 2014

தத்தாத்ரேயர் ஜயந்தி....தத்தகிரி


டிசம்பர் 20, 2014  தீபம் இதழில் வெளியான என் ஆலய தரிசனக் கட்டுரை.




மும்மூர்த்தி ஸ்வரூபமாக, அத்திரி, னுசூயா தம்பதியரின் மைந்தனானவர் ஸ்ரீ தத்தாத்ரேயர். அவதூத சந்நியாசிகளின் ஆதி குரு இவர்தான். வட  இந்தியப் பகுதிகளில் ஸ்ரீதத்தரின் வழிபாடு மிகப் பிரசித்தம். தமிழகத்திலும் தத்தாத்ரேயருக்கென்று முதன் முதலில் கோயில் உருவான தலம் சேந்தமங்கலம்.ஒரு சிறிய குன்றின் மீது  சில படிகள் ஏறிச் சென்றால் மெல்லிய தென்றல் வீசும் அழகான, அமைதியான  சூழ்நிலையில் ஆலயம் அமைந்துள்ளது.

மேலே ஆலயத்துள் இரண்டு சந்நிதிகள் மட்டுமே உண்டு. முத்தேவர்களான சிவன், விஷ்ணு, பிரம்மா இணைந்த தத்தப் பெருமான் உயர்ந்து நின்று அருள்காட்சி தருகின்றார். தரிசிப்பவர் மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு. முருகப் பெருமானோ பெயருக்கேற்றார்போல அற்புத அழகில் கையில் வேலும், அபய ஹஸ்தமுமாக முறுவல் கொஞ்சும் இதழுடன் நம்மை நோக்கி 'என்னிடம் வந்தபின் உனக்கு கவலை ஏன்?' என ஆறுதல் அளிப்பதுபோல் காட்சி தருகிறார்.  

இந்த சிலைகள் பிரம்மாண்டமான உயரத்துடன், அழகிய தோற்றத்துடன் காட்சி தருகின்றன.இவ்வாலயம் அமையக் காரணமானவர் ஸ்ரீ ஸ்வயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத ஸ்வாமிகள். புதுகையில் அதிஷ்டானம் கொண்டுள்ள ஸ்ரீஸ்ரீ ஜட்ஜ் ஸ்வாமிகளின் சீடர் அவர்.இவர் தனிமையை விரும்பி சேந்தமங்கலத்துக்கு அருகில் சந்யாசிகரடு என்ற குன்றில் தவம் புரிந்தார்.

இவர் இமயமலை சென்றபோது தத்த பெருமான் இவர் முன் தோன்றி தனக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு கூற, அதன்படி உருவானதே இவ்வாலயம். தன்னுடைய ஜீவ சமாதி அமைவதற்கு ஏற்ற இடம் இது என்று உணர்ந்த ஸ்வாமிகள் இவ்விடத்தில் தத்த ஆலயம் அமைக்க எண்ணம் கொண்டார். எல்லா இடங்களையும் போல இந்த இறைவனின் மையத்தில் உள்ள முகம் விஷ்ணுவுடையது இல்லாமல், சிவ பெருமானுடையதாக அமைந்துள்ளது இத்தல சிறப்பாகும். 1931ம் ஆண்டு மே மாதம் 29ம் நாள் இவ்வாலயம் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.1948ம் ஆண்டு டிசம்பர் 29 அன்று ஸ்ரீ ஸ்வயம்பிரகாச ஸ்வாமிகள் ஜீவ  சமாதி அடைந்தார்.அவரது விருப்பத்தின்படி ஸ்ரீ தத்தருக்கு முன்பாக அவரது புனித சமாதி அமைந்துள்ளது. இவரது அதிஷ்டானமும் மலையடிவாரத்திலேயே மிக அமைதியான சூழலில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் நடக்கும் அவரது ஆராதனையில் விபூதி வாசனை ரூபத்தில் அவர் இன்றும் பலருக்கும் பிரத்யக்ஷமாவதாகக் கூறப்படுகிறது. 

1983ம் ஆண்டு ஜனவரி 20ம் நாள் ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகளால் இன்னொரு சந்நிதியில் முருகப் பெருமானின் உருவம் அமைக்கப் பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

மலை ஏறிச் செல்லும் வழியில் அழகுற அமைந்துள்ள மண்டபத்தில் பிரம்மாண்டமான சிலா ரூபங்களைக் காண்கிறோம்.பஞ்சமுக கணபதி, வனதுர்க்கை, ஐயப்பன், சனீஸ்வரர், தட்சிணாமூர்த்தி....என எல்லா வடிவங்களுமே பிரம்மாண்டம். தற்காலத்தில் அமைக்கப்படும் பிரம்மாண்ட சிலை வடிப்பின் துவக்கம் இங்கிருந்தே தொடங்கியது என்று கூடச் சொல்லலாம்.இவற்றைத் தொடங்கி வைத்தவர் ஸ்ரீ ஸ்வயம்பிரகாசரின் சீடரான ஸ்ரீ சாந்தானந்தர்.சேலம் மாவட்டம் ஸ்கந்தகிரியில் உள்ள கந்தாஸ்ரமம், புதுக் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜட்ஜ் ஸ்வாமிகளின் அதிஷ்டானம், சென்னையில் ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமம் ஆகியவை இவர் திருப்பணிதான்.

அமைதியான ஆலய சூழல் தியானம் செய்ய ஏற்றதாக அமைந்துள்ளது. திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்  இந்த கோவிலில் அமைதி மற்றும் சாந்தம் பெறுவதற்காக அடிக்கடி வந்து சென்றதாக சொல்லப்படுகிறது.

குருவருள் திருவருளைச் சேர வைக்கும்.அவ்வகையில் ஸ்வயம்பிரகாசரின் அதிஷ்டானமும், ஆதிகுரு தத்தரின் சந்நிதியும் அமைந்துள்ள சேந்தமங்கலத்தை தரிசித்தால் வாழ்வில் மங்கலம் சேரும்.

ஆலயம் நாமக்கல்லில் இருந்து 10 கி.மீ.
தரிசன நேரம்...காலை 6 1/2-12;   மாலை....5-7 1/2

தொடர்புக்கு...9944848962




2 கருத்துகள்: