Thanjai

Thanjai

வெள்ளி, 22 மே, 2015

கூந்தல் கறுப்பு...ஆஹா!


பெண்மணி ஜூலை 2002 இதழில் வெளியானது




அழகாக பளபளப்பாக, தொட்டால் நழுவும் பட்டுத் தலைமுடிப் பெண்களை நாம் டி.வி.யிலோ, தெருவிலோ பார்க்கும்போது, ‘ஆஹா’ என்று மயங்குகிறோமில்லையா? தலை முடிக்கு மெருகேற்றவும், வண்ணம் மாற்றவும் எவ்வளவு ஷாம்பூக்கள், ஹேர் டைகள், ப்யூட்டி பார்லர்கள்? தலைமுடியைப் பராமரிக்க விரும்பாத பெண்களும் உண்டோ?

‘எண்சாண் உடம்பில் சிரசே பிரதானம்’ என்பதற்கேற்ப தலைக்கு அழகு தரும் முடிதான் நம் உடலில் மிக வேகமாக வளரக்கூடியது. தலையின் மேற்பகுதியின் அளவு சராசரியாக 120 சதுர அங்குலம் இருக்கும். ஒரு சதுர அங்குலத்திற்கு 1000 முடிகள் என்ற கணக்கில் குறைந்த பட்சம் 1,00,000 முடிகளுக்கு மேல் இருக்கும். ஒரு மாதத்திற்கு ஒன்றரை அங்குல அளவு முடி வளரும். அதிக பட்சமாக 36 அங்குலமே வளரும். நம் ஆயுள் முடியும் வரை முடி கொட்டுவதும், வளர்வதும் மட்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

தலைக்கு பாதுகாப்பாக இருக்கும் தலைமுடியின் வேர்கள் தலையின் (மண்டை ஓட்டின்) உட்புரத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. ஒவ்வொரு தலைமுடியும் க்யூடிகிள், கோர்டெக்ஸ், மெடுல்லா என்ற மூன்று அடுக்குகளைக் கொண்டது.

க்யூடிகிள் என்பது தலைமுடியின் மேல்பகுதியில் முடியின் பாதுகாப்புக்கு முக்கிய காரணமாக விளங்குவது. இந்தப் பகுதி சரியாகப் பாதுகாக்கப் பட்டால்தான் முடி பளபளப்பாகவும் அழகாகவும் இருக்கும்.

கோர்டெக்ஸ், க்யூடிகிளுக்கு அடியில் அமைந்துள்ள நார் போன்ற செல்தான் முடியின் வலிமைக்கு உதவுகிறது. இதிலுள்ள மெலனின் என்ற சத்து முடிக்கு இயற்கையான வண்ணம் தருகிறது.

மெடுல்லா என்பது முடியின் நடுவில் மென்மையான கேரடின் செல்லை உள்ளடக்கிய பாகம். இதுதான் க்யூடிகிள் மற்றும் கோர்டெக்ஸிற்கு சத்துக்களை எடுத்துச் செல்லும் பாகம். இதனாலேயே நோய்வாய்ப்படும்போது முடி அதிகமாகக் கொட்டுகிறது.

தலைமுடி கேரடின் என்னும் ஒரு வகை புரோட்டீனால் ஆனது. மேலும் இதில் கார்பன் (50.65%), ஹைட்ரஜன் (06.36%),நைட்ரஜன் (17.1%), கந்தகம் (05.00%), ஆக்ஸிஜன் (20.85%) ஆகிய ரசாயனப் பொருட்களும் அடங்கி உள்ளன.

தலைமுடி நேராகவும், சுருள் சுருளாகவும், மெல்லியதாகவும் அவரவர் உடலின் தன்மைக்கேற்ப வளரும். முடிக்கு வண்ணம் தரும் மெலனின் அளவு 40 வயதிற்கு மேல் குறைவதால், முடி நரைக்க ஆரம்பிக்கிறது. ஆன், பெண் உடலில் உள்ள ஹார்மோன்களின் அளவைப் பொருத்தும் முடி வளர்ச்சி வேறுபடும். கர்ப்பமாக இருக்கும் பெண்களின் உடலில் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும்போது தலைமுடியும் வேகமாக வளரும். குழந்தை பிறந்தபின் உடலின் ஹார்மோன்கள் குறைவதால் அதிக அளவில் முடி கொட்டுகிறது. நம் உடல் ஆரோக்கியம், முடியின் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் பாதிக்கும்.

மற்ற உறுப்புகளைப் போன்று தலைமுடியையும் பாதுகாக்க வேண்டியது அவசியம் ஆகும். தலையை மென்மையான சீப்பினால் வாரவேண்டும். கடின பற்களை உடைய சீப்பினால் அழுந்த வாரினால் முடி கொட்டும். தலைமுடியை முடியின் வாகிற்கேற்றபடியே வாரவேண்டும். தலையின் பின்பக்கமிருந்தோ, பக்கங்களிலிருந்தோ வாரினால் க்யூடிகிள் பாதிக்கப்பட்டு முடி சிக்காகி, வறண்டு அழகு இழந்துவிடும்.

ஈரத்தலையை கண்டிப்பாக வாரக்கூடாது. முடியின் வலிமைக்கு காரணமான ஹைட்ரஜன் பகுதி பாதிக்கப்பட்டு முடி வலுவிழந்து கொட்டி விடும். நைலான் பிரஷ் சீப்புகளை வார பயன்படுத்துதல் கூடாது. வட்டமான முனையுள்ள பற்களைக் கொண்ட சீப்பினால் வார வேண்டும். அடிக்கடி சீப்புகளை கழுவ வேண்டும். மற்றவர் உபயோகித்த சீப்புகளை பயன்படுத்தக் கூடாது.

கண்டவரை மயங்கிடச் செய்யும் கண்கவர் அழகான முடியை பெற சில டிப்ஸ்!

வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெயை சற்று சுடவைத்து, முடியில் அடிவரை விரல்களால் தடவி மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் கழித்து மிருதுவான துண்டை இளஞ்சூடான நீரில் பிழிந்து தலையில் கட்டிக் கொண்டால் எண்ணெய் தலையில் உறிஞ்சிக் கொள்ளும். பிறகு  20 நிமிடம் கழித்து ஷாம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து நன்கு அலசவும். தலைமுடி உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் விளங்கும்.

இரண்டு டேபிள் ஸ்பூன் காஸ்மெடிக் வினிகருடன் 6 டேபிள் ஸ்பூன் வெந்நீர் கலந்து, தலை முடியின் அடிவரை படும்படி நன்கு தடவவும். தலையை ஒரு துண்டினால் கட்டி, மறு நாள் காலை ஷாம்பூ தேய்த்து அலசவும். கடைசியாக 3 டேபிள் ஸ்பூன் வினிகரும், 1 கப் வெந்நீரும் சேர்த்து தலையை நன்கு அலசி காய வைக்கவும். இது போல் வாரம் இரு முறை செய்தால் பொடுகு வராது.

ஒரு சிறிய கற்பூரத் துண்டை (சூடம்) 4 டேபிள் ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெயில் கரைத்து தலையில் நன்கு தடவி, துண்டினால் சுற்றிக் கொள்ளவும். மறு நாள் காலை ஷாம்பூவால் நன்கு அலசவும். மாதம் ஒரு முறை இவ்வாறு குளித்தால் பேன்கள் அண்டாது.

ஒரு எலுமிச்சம்பழச் சாறுடன் 4 டேபிள் ஸ்பூன் தேங்காய்ப்பால் சேர்த்து தலையில் நன்கு தடவி, அரை மணி நேரம் கழிந்ததும் ஷாம்பூ தேய்த்துக் குளிக்கவும். இதை வாரம் ஒரு முறை செய்தால் முடி நன்கு வளரும்.

நாம் உண்ணும் உணவில் புரோட்டீன் அடங்கிய தானியங்கள், பருப்பு வகைகள், பால், தயிர், வைட்டமின்கள் நிறைந்த கீரை, பச்சை காய்கறிகள் நிறைய சேர்த்துக் கொள்வது முடி வளர உதவும். எளிய ஆரோக்கியமான முறைகளைக் கடைபிடித்தால் நீங்களும் முடியரசி, கூந்தலழகிதான்!




2 கருத்துகள்:

  1. வீட்டில் குறிப்பு எடுத்துக் கொண்டார்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி திரு தனபாலன். முடியில் இத்தனை விஷயங்கள் இருப்பதைப் படித்து அறிந்தபோது, அதை பலரும் அறியும் ஆவலில் எழுதியது இந்தக் கட்டுரை.

      அழகான முடிக்கான டிப்ஸ்களில் சிலவற்றை நானும் கடைப் பிடிக்கிறேன்.

      நீக்கு