Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

புத்தாண்டு பிறந்தது எப்போது

சிநேகிதி ஜனவரி 2003 இதழில் வெளியானது





ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி முதல் நாள் உலகிலுள்ள அத்தனை மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு பொதுவான நாள். ஜனவரி முதல் நாள், உலகின் மிகப் பழமையான விடுமுறை நாளாகும்.

புத்தாண்டு என்றதும் நம் நினைவுக்கு வருவது ‘புத்தாண்டு உறுதி மொழி.’ புத்தாண்டு அன்று நாம் மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் உறுதி மொழி, அடுத்த சில நாடகளிலேயே ‘புஸ்வாண’மாகிப் போவது சகஜம்தானே!

இந்த உறுதி மொழி வழக்கத்தை ஏற்படுத்தியவர்கள் யார் தெரியுமா? பாபிலோனியர்கள்!

ஈராக்கில் அமைந்துள்ள பாபிலோனிய மக்கள் 4000 ஆண்டுகட்கு முன் புத்தாண்டு அன்று, கடனிலுள்ள தம் நிலங்களை கடனிலிருந்து மீட்பதையே ‘புத்தாண்டு தீர்மானமாக’ எடுத்துக் கொள்ள ஆரம்பித்து, அவ்வழக்கம் இன்று உலகம் முழுவதும் பரவி விட்டது!

இன்றைய பெரும்பாலான மக்கள் எடுத்துக் கொள்ளும் உறுதி மொழிகள் என்ன தெரியுமா?

புகை பிடித்தல், மது அருந்துதலை நிறுத்துவது, தினமும் உடற் பயிற்சிகள், தியானங்கள் செய்து உடலைக் கட்டுக் கோப்பாக, இளமையாக வைத்துக் கொள்வது, செலவுகளைக் கட்டுப்படுத்துவது இவையே!

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது எப்போது தெரியுமா? கி.மு. 46ல் ஜூலியஸ் சீஸரால். தற்போது நடைமுறையிலிருக்கும் நமது காலண்டர் உருவாக்கப்பட்டது அப்போதுதான்! முதல் மாதமான ‘ஜனவரி’ ரோமானியர்களின் முதல் கடவுளூம், (நம் பிள்ளையார் போல்!) வீட்டைக் காக்கும் கடவுளுமான ‘ஜோன்ஸ்” என்ற கடவுளின் பெயரைக் குறிப்பது!

இக்கடவுள் இரு தலைகளைக் கொண்டவர். பின் பக்க தலையால் முடிந்து போன வருடத்தையும், முன் பக்க முகத்தினால் வரப்போகும் ஆண்டையும் ஒரே நேரத்தில் பார்ப்பதால், ஆண்டின் முதல் மாதம் அவர் பெயரால் உருவாக்கப்பட்டதாம்!

அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட ரோமானியர்கள் ஒருவருக்கொருவர் இனிப்பு கொடுத்தும். ‘ஜோன்ஸ்’ கடவுளின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களையும், புனித மரக் கிளைகளையும் ஒருவருக்கொருவர் பரிசாகக் கொடுத்துக் கொண்டும் மகிழ்ச்சியாகக் கொண்டாடிய நாள் டிசம்பர் 31 நடுநிசி! அதுவே இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது! ரோமானியர்களின் புத்தாண்டு ‘கேலண்ட்ஸ்” எனப்படும். இதுவே ‘கேலண்டர்’ என்ற பெயர் வரக் காரணமாயிற்று.

‘ஔல்ட் லேங் சினே’ என்ற பாடலே புத்தாண்டன்று உலகம் முழுவதும் பாடப்படுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ‘ராபர்ட் பர்ன்ஸ்’ என்பவரால் உருவாக்கப்பட்டது!

தமிழர்களான நம் புத்தாண்டு, ‘தமிழ் வருடப் பிறப்பு’ அன்று ஆரம்பித்தாலும், நம் பிறந்த நாள், மண நாள், அலுவலகக் கோப்புகள் அனைத்திலும் நாம் பின்பற்றுவது ஆங்கிலத் தேதி மற்றும் வருடங்களையே! ஆங்கில நாகரிகம் வேரூன்றியதன் காரணமாக நாமும் தற்காலத்தில் ஆங்கிலப் புத்தாண்டை கேக் வெட்டி, உறுதி மொழி எடுத்து, நடனம், பாட்டு என்று கொண்டாட ஆரம்பித்து விட்டோம்.


இனி வரும் ஆண்டு நல்ல ஆண்டாக, நன்மைகளை அள்ளித் தரும் ஆண்டாக, வளமையான வருடமாக, சண்டை சச்சரவில்லாத ஆண்டாக இருக்க ஆலயம் சென்றூ, இறைவனை வேண்டி, பிரார்த்தனை செய்வோம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக