Thanjai

Thanjai

திங்கள், 28 மார்ச், 2011

பாராட்டு எனும் டானிக்


மஞ்சுளா ரமேஷ் - சினேகிதி ஆகஸ்டு 2002 இதழில் வெளியானது





'எல்லா பேச்சுகளிலும் நமக்கு மிகவும் இனிமையானதும், மகிழ்ச்சி தருவதும் பிறர் நம்மைப் பாராட்டிப் பேசும் வார்த்தைகளே' என்பது ஒரு அறிஞரின் கூற்று.

இது மிக உண்மை என்பது யாராலும் மறுக்க முடியாதது. எத்தனை சுலபமான, சிறிய செயலையும்  நேர்த்தியாக, செய்தாலும் அதைப் பாராட்டுவதில் என்ன தவறு? அது தரும் சந்தோஷம் பாராட்டப்பட்டவர்களே அறிவர்.

இரண்டு வயதுக் குழந்தை கண்டபடி கோடுகளை வரைந்து காக்கா, குருவி என்று  காட்டும்போது, 'ஜோராக வரைந்திருக்கிறாயே'  என்று பாராட்டி அந்த உற்சாகம் பின்னால் அந்தக் குழந்தை பெரிய ஓவியராக வழி வகுக்கும்.

படிக்கும் குழந்தைகளை ஒப்பிட்டுப் பேசுவது இக்காலத் தாய்மார்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. குழந்தைகள் குறைந்த மதிப்பெண் வாங்கினாலும், அவர்களைப் பாராட்டிதட்டிக் கொடுத்து அதிக மதிப்பெண் பெறவேண்டுமென்பதை ஆதரவாகவும் சொல்வதுதான் புத்திசாலித்தனம்.

என் தோழி மாலுவுக்கு எப்பொழுதும் ஒரு குறை! தான் எத்தனை அருமையாகச் சமைத்தாலும் தன வீட்டார்முக்கியமாக தன் கணவரிடமிருந்து ஒரு சின்ன பாராட்டு கூட கிடைப்பதில்லையே என்று!

ஒரு சின்ன பாராட்டு, பெரிய மலை போன்ற காரியத்தைக் கூட  ஆர்வத்துடன், எளிதாகச் செய்ய வைக்கும் ஆயுதம் என்பதைப் பலர் அறிவதில்லை.

குடும்பத்தில் ஒருவருக்கொருவர் மற்றவர்களின் வேறுபட்ட  திறமைகளை மதித்துப் பாராட்டிக் கொள்வதும், அதன் சார்பாக சின்னச் சின்ன பரிசுகள் கொடுத்தும் குடும்பத்தினரில் பாசப் பிணைப்பு பெருக உதவும். 

சின்னக் குழந்தைகளின் மழலைப் பாட்டு,  கிறுக்கல் ஓவியம், பள்ளி, கல்லூரி குழந்தைகளின் விளையாட்டுத் திறமை, மனைவியின் மிளகுக் குழம்பு, துணைவரின் அலுவலகத் திறமை, பக்கத்து வீட்டு பாட்டியின் இழை விலகாத கோலம், எதிர் வீட்டுத் தோழியின் எம்பராய்டரி வேலை இப்படி பாராட்ட எத்தனை .விஷயங்கள்.

மனம் விட்டுப் பாராட்டுங்கள்.

பாராட்டினால் ஒரு பெரும் பயனும் உண்டு. பிறர் நம் செயலைப்  பாராட்டும்போது, நம்மை அறியாமல் நமக்குள் இருக்கும் திறமை வெளிப்பட்டு, அதன் மூலம் நாம் அடையும்  முன்னேற்றம் வாழ்க்கையின் ஒரு திருப்பு முனையாக அமைய வாய்ப்புண்டு.

இருபது வருடங்களுக்கு முன் என் சிறு  துணுக்கு ஒரு பிரபல பெண்கள் பத்திரிகையில் பிரசுரமானது. அதைப் பார்த்த என் கணவர் என்னைப் பாராட்டி, நிறைய எழுத்து என கொடுத்த ஊக்கமே, இன்று நான் பல பத்திரிகைகளிலும் எழுத   காரணமாயிற்று! எனக்குள்ளிருக்கும் எழுத்துத் திறமை வெளிவரக் காரணம் என் கணவர், சுற்றத்தார், நண்பர்கள், என் குழந்தைகளின் பாராட்டு தான்! குழந்தைகளுக்கு எந்தத்துறையில் ஆர்வம், ஈடுபாடு உள்ளதோ அதை மனமாரப் பாராட்டுங்கள். உங்கள் பாராட்டு அவர்களிடம் அற்புதங்கள் செய்வதைக் கண்டு  மகிழ்வீர்கள்.

கணவன், மனைவிக்குள் 'ஈகோ' இல்லாமல் பாராட்டிக் கொள்வது, தாம்பத்தியம் மேலும் இறுக வழி செய்யும்!

அரசியல் வாதிகளுக்கும், சாதனை செய்தவர்களுக்கும் பாராட்டு விழா நடத்துவது அவர்கள் மேலும் சிறந்த முறையில் மக்களுக்கு பணி ஆற்ற வேண்டும் என்பதற்கே!

கடவுளைக் கூடப் பாராட்டி, துதி செய்வதுதான் நாம் பிரார்த்தனை செய்கிறோம்.

பாராட்டில் 'போலிப் பாராட்டும்' உண்டு! இதில் நாம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நம்மைப் பாராட்டுவது போல் தங்கள் வேலைகளை நம் தலையில் கட்டி விட்டு 'ஹாயாக' இருக்கும் சோம்பேறிகளை இனம் கண்டு ஒதுங்க வேண்டியது உங்கள் திறமை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக