Thanjai

Thanjai

திங்கள், 21 மார்ச், 2011

என் சிநேகிதி

முப்பது வயதுக்கு மேல் அவள் என் சிநேகிதியானாள்!



தன் சிநேகிதியைப் பற்றி மனம் நெகிழ்ந்து சொல்கிறார் ஒரு வாசகி.

குமுதம் சிநேகிதி பிப்ரவரி 2004 இதழில் வெளியானது

என் கணவருக்கு அடிக்கடி வேலை மாற்றல் நடக்கும். இதனால் எனது குடும்பம் பல ஊர்களுக்கும் செல்லும் நிலையிலிருந்தது. அப்போது எனக்கு சில நல்ல சிநேகிதிகள் கிடைத்தார்கள்.

ஆனால் அடுத்த ஊருக்குச் செல்லும்போது, அந்த சிநேகம் சில நாட்களிலேயே கடிதத் தொடர்புடன் துண்டித்துப் போகும். ஆனால் நாங்கள் ஈரோட்டில் இருந்த சமயம் என் மகனுடன் படித்த மாணவனின் தாயாக அறிமுகமான என் தோழி முத்துலட்சுமியின் ஆழமான, அழுத்தமான நட்பு, பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது.

எங்களின் எண்ணங்கள், அபிப்பிராயங்கள் ஒரே மாதிரியாக இருப்பதினால், எங்கள் நட்பு வலுவாயிற்று. ஈரோட்டை விட்டு வேலை மாற்றலாகி நாங்கள் கிளம்பியபோது, பிரிவு தாங்காமல் இருவருமே கண்கலங்கி விட்டோம். அன்று முதல் இன்று வரை தொலைபேசி, ஈமெயில், கடிதங்கள்தான் எங்கள் நட்பிற்குப் பாலமாக இருக்கிறது.

எங்களுக்குள் நட்பு இவ்வளவு வலுவாகக் காரணமே பகிர்ந்து கொள்ளுதல்தான்!

கணவரிடமோ, உடன் பிறந்த சகோதரிகளிடமோ கூடப் பேச முடியாத பல விஷயங்களை எங்களுக்குள் பரிமாறிக் கொள்வோம். அப்போது கிடைக்கும் ஆறுதலும் நிம்மதியும் தனிதான். எங்கள் மனக் கவலைகளை, ஆதங்கங்களை ஒருவருக்கொருவர் நாங்கள் பகிர்ந்து கொள்ளுவதால் மனம் லேசாகி கவலை பறந்தோடுவதை உணர்கிறோம். நாங்கள் பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. எங்கள் குழந்தைகள் கூட எங்களைக் கேலி செய்வார்கள். எங்களுக்கு ‘உபிச்’ (உடன் பிறவா சகோதரி) என்ற பட்டமே கொடுத்திருக்கிறார்கள்.

வருடத்தில் ஒரு முறையாவது நாங்கள் தவறாமல் சந்தித்துக் கொள்வோம். நான் சென்னை சென்றால் கண்டிப்பாக என்னைப் பார்க்க வந்துவிடுவாள். நாங்கள் ஈரோட்டில் இருக்கும் போது வீட்டுக்கு வருவாள். என் குழந்தைகளுக்கு ஸ்பெஷலாக ‘எக் ஆம்லெட்’ போட்டுக் கொடுப்பாள். நான் செய்யும் நெல்லிக்காய் ஊறுகாய் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்.


இன்றும் மனக்கவலை, கஷ்டம் ஏற்படும்போது உடனே போனில் பேசிக் கொள்வோம். வாய்விட்டுச் சிரிப்போம். கடிதங்களிலும் நாங்கள் மனம் திறந்து பேசிக் கொள்வோம். எத்தனை நெருங்கிய உறவுகள் இருந்தாலும் மனம் ஒன்றிய சிநேகிதிதத்திற்கு எதுவும் இணையாகாதுதான். எங்கள் முப்பது வயதுக்கு மேல் ஏற்பட்ட இந்த நட்பு, புரிந்து கொள்ளல் - நிறைந்ததாக, முத்தானதாக இருக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக