Thanjai

Thanjai

ஞாயிறு, 20 மார்ச், 2011

என் விமரிசனங்கள்



குமுதம் சிநேகிதி – அக்டோபர் 2001 இதழில் வெளியான கடிதம்
சிநேகிதிக்குச் சொல்கிறார்கள் -1





என்ன இருந்தாலும் எல்லாவற்றிற்கும் (கணவன், மகன் என்று) கையேந்தி இருப்பதை விட நம் கையால் சம்பாதிக்கும் சந்தோஷம் அளவிட முடியாததுதான். நான் வேலைக்குப் போகாத பெண்தான். அவ்வப்போது என் எழுத்துக்கள் புத்தகங்களில் பிரசுரமாகி, அதற்கான சன்மானத்தை நான் பெறும்போது கிடைக்கும் சந்தோஷம் இருக்கிறதே. இந்தச் சின்ன தொகைக்கே இப்படி என்றால், மாதம் ஆயிரக் கணக்கில் சம்பாதிக்கும் பெண்கள் இந்த சந்தோஷத்திற்காகத்தான் அத்தனை கஷ்டங்களையும் தூசாக நினைத்து வேலைக்குப் போகிறார்கள் என்றால் அது மறுக்க முடியாத உண்மைதானே.


குமுதம் சிநேகிதி – பிப்ரவரி 2002 இதழில் வெளியானது

சிநேகிதிக்குச் சொல்கிறார்கள் – 2


இனிய தாம்பத்திய வஃஜ்விற்குத் தேவை நான்கு ‘T’ க்கள். (3 ரோஸஸ் டீ அல்ல). Trust(நம்பிக்கை), Time (நேரம்), Touch (ஸ்பரிசம்), Talk (பேச்சு) ஆகியவைதான்!

இருவரும் பரஸ்பர நம்பிக்கையுடன், நேரம் கிடைக்கும் போது மனம் விட்டுப் பேசி, அவ்வப்போது ஒரு சின்ன அணைப்பு, முத்தம் இவற்றால் அன்பைப் பரிமாறிக் கொள்வது தாம்பத்தியத்திற்குப் புத்துணர்வு தரும் வழிகள்.



குமுதம் சிநேகிதி – ஏப்ரல் 2003 இதழில் வெளியானது
சிநேகிதிக்குச் சொல்கிறார்கள் – 3




பெண்களுக்கான இதழ்களின் வரிசையில் சிநேகிதி மிகச் சிறப்பான இடத்தை வகிக்கிறது. பெண்களின் முன்னேற்றத்துக்குத் தேவையான பல கட்டுரைகள், வாசகிகள் அதிக அளவில் பங்கு பேர இடமளிப்பது கோலம், மெஹந்தி டிசைன் இணப்புகள் என்று அபாரம் போங்கள்!



ஸ்ரீபோஸ்டு – அவள் விகடன்




‘நமக்குள்ளே படித்ததும் பகீர் என்றது. எத்தனை கனவுகளுடன்...
என்னென்னவோ சாதிக்க நினைக்கும் பள்ளி, கல்லூரிப் பிஞ்சுகளின் அகால மரணம் பெரிய வலி! குழந்தைகளை தோழியாக, தோழனாக மதித்து மனம் விட்டுப் பழக பெற்றோர் தயாராகாத வரை இந்தக் கொடுமை தீராது.



அவள் விகடன் ஆகஸ்டு15, 2003 இதழில் வெளியானது




‘நாளை உனக்கு’ படித்து மனம் வலித்தது. பெற்றவர்களை மகங்கள் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நம்மிடையே எழுதப்படாத விதியாக இருக்கிறது. பிள்ளைகளைப் போன்றுதான் பெண்களைப் பெற்று வளர்க்கிறோம். ஆனால், பெற்றோர் மகள்களிடம் போய் இருப்பதை கவுரவக் குறைவாக நினைக்கிறார்கள். சொத்தில் பங்கு உள்ள பெண்ணுக்கு பெற்றோர்களை வைத்துக் கொள்வதிலும் பங்கு தேவைதானே? இந்த நிலை வர இன்னும் ஒரு நூற்றாண்டாகுமா?


தினமலர் – நகர் மலர்
05-04-1993 இதழில் வெளியானது




பெறுனர்
பொறூப்பாசிரியர்
நகர் மலர்-தினமலர்
ஈரோடு

சார்!
வணக்கம். தாங்கள் 29-03-1993 நகர் மலரில் அடுத்த வாரத்திலிருந்து சமையல் பகுதி ஆரம்பிப்பதாயும், அதிக செலவில்லாத சமியல்களை எழுதி அனுப்பும்படியும் குறிப்பிட்டுள்ளீர்கள். தாங்கள் அறீவித்துள்ளபடி உங்களின் (?) (அதாவது தந்தைக் குலங்களின்) பர்ஸ்களை கடிக்காதவாறு எளிய, சுவையான, சிக்கனமான சில சமையற் குறிப்புகளை எழுதி அனுப்பியுள்ளேன். ஏற்று பிரசுரிப்பீர்களா?

(ஏன் சார்! சாமான் லிஸ்டைப் பார்த்து தந்தைக் குலங்களுக்கு கோபம் வந்து விடும் என்று குறிப்பிட்டுள்ளீர்களே? நீங்கள் சிகரெட்டிற்கும், மற்றவற்றிற்கும் செலவழிக்கும் போது, உங்களுக்கு தினுசு தினுசாக செய்து போட்டு திக்கு முக்காட வைக்கும் எங்களுக்காக கொஞ்சம் செலவழிக்கக் கூடாதா? என்ன சார் நியாயம் இது? பிறகு எதுவுமே புதிதாக செய்யத் தெரியவில்லை என்று குற்றச் சாட்டு வேறு எங்கள் மீது! ‘சமையல் செய்ய தாராளமாக வாங்கித் தாங்க’ என்று கூட நாங்கள் கேட்கணும் போலிருக்கிறது! என்ன சார் ‘பெண் விடுதலை!’


தின மலர் – நகர் மலர் – 2
24-01-1994 இதழில் வெளியானது




எங்கள் பகுதியில் பெரிய பிரச்சினை – தண்ணீர் பிரச்சினைதாங்க! ‘என்ன? ஈரோட்டில் தண்ணீர்ப் பிரச்சினையா? சென்னைக்குக் கூட இங்கிருந்து தானே தண்ணீர் செல்கிறது என்கிறீர்களா?’

அது என்னவோ நாங்கள் என்ன பாவம் செய்தோமோ, கிட்டத்தட்ட ஆறு மாத காலமாக எங்கள் குமாரசாமி வீதி உட்பட இப்பகுதியில் உள்ள பல தெருக்களிலும் குழாய் நீர் சரியாகவே வருவதில்லை. இரண்டு நாள் வந்தால் நாங்கு நாள் வருவதில்லை. அந்த நாளிலும் ஒரு மணி நேரம் மட்டுமே வரும். தண்ணீர் நிரம்புவது நாங்கைந்து குடங்களில்தான். சில நாள் வேகமாக காற்று வருவதோடு சரி! தண்ணீரைக் காண தவம் செய்ய வேண்டும்! போர் (bore), கிணறு இல்லாமல் இந்த நல்ல தண்ணீரை மட்டுமே நம்பியிருப்பவர்கள் பாடு திண்டாட்டம்தான். மாலை ஆறு மணிக்கு வழக்கமாக வர வேண்டிய தண்ணீர் இரவு 10 மணிக்கும், 11 மணிக்கும் வருவதோடு சற்று அசந்து விட்டாலோ மறு நாள் அரோகராதான். நீரேற்று நிலையத்தில் விசாரித்தாலும் சரியான பதிலில்லை. இன்றாவது தண்ணீர் சரியாக வரும? என்பதே எங்கள் பகுதி வாசிகளின் தினசரி கவலையாகி விட்ட்து. தாராளமாக தண்ணீர் வரும் நாளை எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.



ஹாய் ... மதன்
ஆனந்த விகடன் – 09-06-2002 இதழில் வெளியானது




கேள்வி: எனக்கும் என் கணவருக்கும் உங்களைப் பற்றி ஒரு சின்ன வாக்குவாதம். கேள்விகளை நீங்கள்தான் தேர்ந்தெடுப்பதாக நான் சொன்னேன். அவரோ, குலுக்கிப் போட்டுத்தான் எடுப்பார்கள் என்று சத்தியமே செய்கிறார்! குலுக்கலில் அதிர்ஷ்டம் இல்லாததால், என் கேள்வி தேர்ந்தெடுக்கப்படவில்லை என்கிறார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் பதில் சொல்லும்வரை, எங்கள் வாக்குவாதம் தொடரும்!

பதில்: ஏதோ ‘பூடான் லாட்டரி’ ரீதியில் நான் கேள்விகளுக்குப் பதில் எழுதுகிறேன் என்று சொல்கிறீர்களே, நியாயமா? குலுக்கலில் எடுக்கப்படும் எந்தக் கேள்விக்கும் எனக்குப் பதில் தெரியாவிட்டால் என்ன செய்வதாம்? ஒவ்வொரு பதிலுக்கும் என்ட அளவுக்கு நான் மண்டையை உடைத்துக் கொள்கிறேன் என்பது எனக்குத்தான் தெரியும். பை த வே... உங்கள் கையெழுத்தைப் பார்த்தாலே, நீங்கள் கணவருடன் வாக்குவாதம் புரிகிற டைப் அல்ல என்று புரிகிறது, பதில் வாங்கி விட்ட்தற்கு கங்கிராட்ஸ்.





அன்புடன்
கிருஹ ஷோபா செப்டம்பர் 2003 இதழில் வெளியானது




‘சிறப்புப் பார்வையில்!’ நகரங்கள் அவலமாகி வருவதைத் தடுக்க சங்கீதா ஜிண்டலும், பிரோசா கோத்ரெஜூம் எடுத்து வர்ம் முயற்சிகளைப் பற்றி எழுதியிருந்தது பாராட்டப்பட வேண்டிய விஷயம். வீடு மட்டுமல்ல, நாட்டின் ஆரோக்கியத்துக்கும் பெண்களே பாடுபட வேண்டியுள்ளது! நம் நாட்டில்தான் பிள்ளைகள் காதலித்தால் பெற்றோர்கள் தண்டிப்பதும், வலுக் கட்டாயமாகத் திருமணம் செய்து வைப்பதும் என்று எண்ணிய எனக்கு, ஆஸ்திரேலியாவில் கூட இந்த நிலைதான் என்பது ஆச்சரியத்தைத் தந்தது.

‘அறுசுவை அரசு’ நடராஜனின் பேட்டி, அவரது உழைப்பின் உயர்வை எடுத்துக் காட்டியது. மூன்று ஹோட்டல்களை நடத்தும் அவரே, ‘ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிடுவது சரியல்ல’ என்று கூறியது பாராட்டத் தக்கது. எனினும் அலுவலக வேலைகளில் அலுத்து வரும் பெண்களுக்கு ஹோட்டல் ஒரு வரப் பிரசாதம்தானே!

சட்னி, பிரியாணி, ஊறுகாய், கேக், கிச்சடி, கட்லெட் என விதவிதமான சமையல் குறிப்புகளில் எங்களைக் கட்டிப் போட்டு விட்டீர்கள். ஒவ்வொரு பெண்ணும் தங்கள் சமையல் அறையில் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் இது. ‘நள தமயந்தி’ பட்த்தை ‘ஆஹா ஓஹோ’ என்று எல்லோரும் புகழ்ந்து எழுத, கமல்-மௌலி-மாதவன் கூட்டணிக்கு பாதி வெற்றிதான் என்று ‘பளிச்சென்று’ எழுதிய உங்கள் விமர்சனம் அருமை. பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி, மூட நம்பிக்கைகள் மற்றும் அபத்த சீரியல்களிலிருந்து பெண்களை மீட்டு முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும் ‘க்ருஹ ஷோபா’வைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.



சக்தி விகடன் கடிதங்கள்
சக்தி விகடன் 2-6-2004 இதழில் வெளிவந்தது

சொந்தமாக வீடு கட்ட ஒரு மனை வாங்க வேண்டும் என்ற ‘அவா’ சில வாரங்களாகவே மனதுக்குள் சுழன்று கொண்டிருந்தது. அந்த நேரம் பார்த்து, ‘சொந்த வீடு அமைய வேண்டுமா? சிறுவாபுரி முருகனைத் தரிசியுங்கள்’ என்ற கட்டுரையை வெளியிட்டு நெகிழச் செய்து விட்டீர்கள்! என் எண்ணத்தின் பிரதிபலிப்பு, சக்தி விகடன் ரூபத்தில் வந்து என்னைப் பரவசப் படுத்தி விட்ட்து. இதோ, சில தினங்களில் குடும்பத்தோடு கிளம்பப் போகிறோம் சிறுவாபுரிக்கு!




ஸ்ரீசுப்ரமணிய கனபாடிகள் பதில்கள்




ஞான ஆலயம் செப்டம்பர் 2004 இதழில் கேட்கப்பட்ட என்னுடைய கேள்விக்கு ஸ்ரீசுப்ரமணிய கனபாடிகள் அளித்த பதில்:

ஆலயங்களில் அம்பாளுக்கு அணிவித்த புடவைகளை ஏலத்தில் வாங்கி உடுத்தினால், அதை அம்மனுக்கு எந்த தோஷம் நிவர்த்தியாக சாற்றினார்களோ அதே தோஷம் நமக்கு ஏற்பட்டுவிடும் எங்கிறார்களே, இது சரியா?

ஒருவரிடமிருந்து பூசணிக் காயை தானமாகப் பெறுவது பெரிய பாவம். ஆனால் அதையே மிக ஏழையான சம்சாரி ஒருவன் தானமாகப் பெற்று சமைத்து, தன் குடும்பத்தாருக்கு உணவாக அளித்தால் தவறில்லை, காயத்ரி ஜபத்தினை ஜபித்து தோஷத்தைப் போக்கிக் கொள்ளலாம். ஆனால் இதனை தானமாக வாங்கி கடையில் விற்று, காசாகப் பெற்று வட்டிக்கு விடும் நபரை, இந்த தோஷம் பாதிக்கும். அம்மனுக்கு சாற்றிய புடவையை வாங்குபவருக்கும் இதே நியாயம் பொருந்தும்.


அவள் விகடன் மார்ச் 24, 2006 இதழில் வெளியான என்னுடைய தகவல்



சமீபத்தில் நமது மும்பை வாசகி ராதா பாலு எழுதி அனுப்பி இருந்த ஒரு தகவல் நம்மி உறைய வைத்தது.


“நான் மும்பை ஐரோலி பகுதியில் இருக்கிற ‘சமதா ஃப்ளாட்ஸ்’ எங்கிற அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறேன். எங்கள் குடியிருப்பில் தனியாக வாழ்ந்து வந்த ஒரு முதியவர் அவர் ஃப்ளாட்டிலேயே இறந்து கிடந்த விஷயம், பத்து மாதங்களாகியும் அக்கம் பக்கத்தினருக்குத் தெரியவே இல்லை! பத்து மாத வாடகையை அவர் அட்வான்ஸாக கொடுத்திருந்ததால் அதுவரை அந்தப் பக்கமே எட்டிப் பார்க்காத வீட்டு உரிமையாளர், அதன் பிறகே அவரைத் தேடி வந்தார். இறுதியில், அந்த முதியவர் மிஞ்சிய எலும்புகளாகக் கண்டெடுக்கப்பட்டார்.”


Times of India - New Bombay plus -ல் வெளியான கடிதம்



Postal Problems

I am resident of Sector 8, Airoli. People in sectors 6, 7, 8, 9, 10 find it very difficult to do without a post box. They have to go all the way to sector 4 to post a letter. It becomes difficult to send children there since they have to cross the main road to go to the post box to drop letters. Since the main road is always full of traffic, this can get dangerous. Will the postal authorities do the needful by placing a post box anywhere in one of these sectors?

Radha Balu
402, Samta CHS
Sector 8, Airoli


மங்கையர் மலர் ஜூன் 2003 இதழில் வெளியான ஒரு குறிப்பு



கறை வெளிவராத நாப்கின் உபயோகித்தால், இடுப்பு வலியும், கால் வலியும் குறைந்துவிடுமா என்ன? அதற்கும் பெயின் கில்லர்களை உபயோகித்து வேலைச் சுமைகளில் மூழ்கி விடுகிறோம். இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, ஏகப்பட்ட பிரச்னைகள்.


சோர்ந்து உட்காரும்போது, “நான் இருக்கிறேன் டியர்! கவலைப்படாதே” என்று ஆறுதல் கூறும் கணவரும், “டோன்ட் ஒர்ரி மம்மி! உனக்குத் துணையாக நாங்கள் இருக்கிறோம்” என்று கூறும் குழந்தைகளும், ‘உனக்கு எந்த உதவியும் நாங்கள் செய்கிறோம்!’ என்று சொல்லும் பெரியவர்களும் நம்முடன் இருந்தால், அந்த வார்த்தைகள் தரும் பூஸ்ட் உற்சாகத்தில் நாம் உலகையே வெல்லலாம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக