Thanjai

Thanjai

சனி, 19 மார்ச், 2011

தீபாவளி ஸ்பெஷல்-2


ஆலயம் சினேகிதி – தீபாவளி சிறப்பிதழ் – நவம்பர் 2003 ல் வெளியானது

கரஞ்சி (மஹாராஷ்டிரா)
தேவையானவை:

மைதா – 1 கப்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – சிட்டிகை
கோவா - ½ கப்,
கொப்பரைத் தேங்காய் – 1 கப்
ஏலப்பொடி, கசகசா – 2 டீஸ்பூன்
சர்க்கரை – 1 கிலோ (பொடியாக்கியது)
எண்ணெய் – வேகவிட.

செய்முறை:

மைதாவை நன்கு சலித்து, அத்துடன் நெய், தேவையான நீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.
கொப்பரையை மென்மையாகத் துருவவும். கோவாவை உதிர்க்கவும். கசகசாவை வறுத்துப் பொடி செய்யவும். துருவிய கொப்பரை, கசகசாபொடி இவற்றை ஒன்றாகக் கலந்து பூரணம் தயாரிக்கவும். பிசைந்த மாவை சிறு எலுமிச்சை அளவு எடுத்து பூரியாக இட்டு, அதனுள் 2 டீஸ்பூன் பூரணம் வைத்து அரை வட்டமாக மூடி, ஓரத்தை சிறிது நீர் தொட்டுக் கொண்டு ஒட்டி, சோமாசிக் கரண்டியால் கத்தரிக்கவும். எண்ணெயைக் காய வைத்து கரஞ்சிகளைப் பொன்னிறமாக பொறித்து எடுத்து, எண்ணெயை வடிய வைக்கவும். மராட்டியர்கள் தீபாவளிக்கு செய்யும் முக்கிய இனிப்பு இது!


பேஸன் கே லட்டு (மகாராஷ்டிரா)
பேஸன் என்பது கடலை மாவு.

தேவையானவை:

கடலை மாவு - ¼ கிலோ
நெய் – 150 கிராம்
சர்க்கரை - 1½ கப் (பொடியாகியது)
மிந்திரி – 15
திராட்சை – 15
ஏலப்பொடி
ஜாதிக்காய் – சிறு துண்டு.

செய்முறை:


கடலை மாவை சலிக்கவும். வாணலியில் 4 டீஸ்பூன் நெய் விட்டு மிந்திரி, திராட்சையை வறுக்கவும். ஜாதிக்காயை வறுத்துப் பொடி செய்யவும், மீதி நெய் முழுவதும் விட்டு, அதில் கடலை மாவைப் போட்டு, அடுப்பை சிறிதாக வைத்துக் கொண்டு நல்ல மணம் வரும் வரை சிவக்க வறுக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி அத்துடன் சர்க்கரைப் பொடி, வறுத்த மிந்திரி, திராட்சை, ஏலப்பொடி, ஜாதிக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து, கை பொறுக்கும் சூடு இருக்கும்போதே உருண்டைகளாகப் பிடிக்கவும். பேஸன் கே லட்டுவின் சுவையே தனிதான்!


கலர் பூந்தி (பாம்பே)
தேவையானவை:

மைதா மாவு – 2 கப்
அரிசி மாவு – 1 கப்
உளுத்தம் பருப்பு - ¼ கப்
சோடா உப்பு –சிறிது
சர்க்கரை – 3 கப்
மிந்திரி – 15
திராட்சை -15
ஏலப்பொடி, பச்சை, ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு வண்ணப்பொடி அல்லது திரவம், எண்ணெய்.

செய்முறை:

உளுத்தம் பருப்பை ஊற வைத்து, ஜாங்கிரிக்கு அரைப்பது போல் அரைக்கவும், மைதா மாவு, அரிசி மாவை நீர் விட்டு கரைக்கவும். 1 மணி நேரம் கழித்து எல்லா மாவையும் ஒன்றாகச் சேர்த்து கெட்டியாகக் கரைக்கவும். இதனை ஐந்து பாகமாகப் பிரித்து ஒரு பாகம் தவிர மற்றவற்றில் ஒவ்வொரு கலர் சேர்க்கவும். சர்க்கரையில் 1 கப் நீர் சேர்த்து கம்பிப் பாகு தயாரிக்கவும். எண்ணெயைக் காய வைத்து, மாவை பூந்திக் கரண்டியில் கரண்டியால் விட்டுத் தேய்த்து, பூந்தி வெந்ததும் சூட்டுடன் பாகில் போட்டுக் கலக்கவும். எல்லா பூந்தியும் பொரித்துப் போட்டு ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை போட்டு நன்கு கலக்கவும். ஆறியதும் எடுத்து வைக்கவும். இது உதிரியாகத்தான் இருக்கும். லாடு பிடிக்கக் கூடாது. பல வண்ண பூந்தி கண்ணைப் பறிக்கும் அழகுடன் நாவில் இனிக்கும்!


காஜர் கா ஹல்வா (பஞ்சாப்)
காஜர் என்பது கேரட்

தேவையானவை:

கேரட் துருவல் – 1 கப்
பால் - ½ கப்
சர்க்கரை - 1½ கப்
நெய் -1 கப்
கோவா - ¼ கப்
மிந்திரி – 15
திராட்சை – 15, ஏலப்பொடி, குங்குமப்பூ.

செய்முறை:

கேரட் துருவலை பாலில் குக்கரில் வேக விடவும். வெந்த கேரட்டை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். அடி கனமான பாத்திரத்தில் இதைப் போட்டு கொதிக்க விட்டு, சற்று கெட்டியானதும் இதில் கோவா, சர்க்கரை போட்டு, சேர்ந்து கொண்ட்தும், நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கிளறவும். ஹல்வா பதம் வந்ததும் மிந்திரி, திராட்சை, ஏலப்பொடி, குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.

சுர்மா-நா-லட்டு (குஜராத்)
தேவையானவை:

கோதுமை மாவு – 2 கப்
வெல்லம் - 1½ கப்
நெய் - ½ கப்
கொப்பரைத் துருவல் - ½ கப்
எண்ணெய், ஏலப்பொடி.

செய்முறை:

கோதுமை மாவில் ¼ கப் நெய்யை உருக்கி விட்டு, சிறிது பால் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். அவற்றை சீடைகள் போல் உருட்டி, நடுவில் விரலால் அழுத்தவும். எண்ணெயைக் காய வைத்து இந்த சீடைகளை நல்ல கரகரப்பாக பொரிக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் பொடி செய்யவும். மீதியுள்ள நெய்யில் அரைத்த பொடியை 10 நிமிடங்கள், காஸை சிம்மில் வைத்து வறுக்கவும்.

வெல்லத்தில் சிறிது நீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைய விடவும். நன்கு கரைந்து கொதிக்கும் போது, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி சேர்த்து அதை கோதுமைப் பொடியில் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக்கவும். இதையே வெல்லத்திற்குப் பதில் 150 கிராம் சர்க்கரையைப் பொடி செய்து சேர்த்து உருண்டை பிடிக்கலாம். சர்க்கரைப் பாகு ஆக்கத் தேவையில்லை. சுர்மா நா லட்டு சுவையான இனிப்பு!


அசோகா ஹல்வா (தமிழ் நாடு)
தேவையானவை:

பயத்தம் பருப்பு -1/2 கப்
கோதுமை மாவு     - 1/4 கப்
சர்க்கரை               – 1 கப்
நெய்              - 1 1/2 கப்
மிந்திரி          – 15
திராட்சை       – 15
ஏலப்பொடி, ஜாதிக்காய் பொடி
குங்குமப்பூ     – சில இதழ்கள்
பால்                     - 1½ கப்
கேசரி பவுடர் – சிட்டிகை.

செய்முறை:

பயத்தம் பருப்பைக் களைந்து பாலில் குக்கரில் நன்கு வேக வைக்கவும். ¼ கப் நெய்யில் மிந்திரி, திராட்சை வறுத்துக் கொண்டு, அதில் மைதாவைப் போட்டு பொரித்தாற் போல் வறுத்துக் கொள்ளவும். வெந்த பருப்பை நன்கு மசிக்கவும். காஸை சின்னதாக வைத்து, அடி கனமான வாணலியில் போட்டுக் கிளறவும். அதில் சர்க்கரை சேர்த்து, கரைந்து கெட்டியானதும் அதில் நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கிளறவும். அல்வா நன்கு வெந்து, ஒட்டாமல் நெய் பிரியும் போது கேசரி பவுடர், குங்குமப்பூ சேர்த்து, மேலும் ஒரு கிளறூ கிளறி இறக்கி, மிந்திரி, திராட்சை சேர்க்கவும். இதை துண்டம் போட முடியாது. நெய் ஒழுக சாப்பிட்டால்தான் இதன் சுவை அபாரமாக இருக்கும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக