Thanjai

Thanjai

வியாழன், 17 மார்ச், 2011

ஆசையை நிறைவேற்றும் ஆ ஷாபுரா தேவி

ஞான ஆலயம் அக்டோபர் 2008 இதழில் வெளியானது



 சக்தி பீட வரிசைகளிலே ஷாபுரா தேவி பற்றி தனது ஹிங்குளாஜ் யாத்ராவில் குறிப்பிட்டிருந்தார் மஞ்சுளா ரமேஷ். இதோஷாபுரா தேவி நமது நாட்டிலும் மிகச் சிறப்பாக, குறிப்பாக நவராத்திரி நேரத்தில் வழிபடப்படுகிறாள்



ஆதி பராசக்தியான அம்பிகை மக்களின் நன்மை கருதி பல சக்தி வடிவங்களாக அருள் புரிகிறாள். பரமேஸ்வரனுடன் இணைந்து இருக்கும்போது பார்வதி எனப்படுகிறாள். தீயவர்களை அழிக்கும்போது துர்க்கை; செல்வத்தை வாரி வழங்கும்போது மகாலட்சுமி; அறிவு ஞானத்தை, ஆற்றலை அளிப்பவள் சரஸ்வதி! நான்முகி, நாராயணி, சாம்பவி, சங்கரி, ச்யாமளை, மாதங்கி என்றெல்லாம் அழைக்கப்படும் தேவியின் ரூபங்களில் ஓன்றான ஆ ஷாபுரா தேவியின் மகிமை சொல்லில் அடங்காது.

அரக்கன் மஹிஷாசுரன் பிரம்மதேவரை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். அவனுக்கு தரிசனம் தந்த பிரம்மனிடம் "எந்த ஆண்மகனாலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது" என்ற வரம் பெற்றான். அந்த அகந்தையினால் தேவர்களை துன்புறுத்த, இந்திராதி தேவர்கள் பிரம்மனிடம் சென்று முறையிட, அவர் ஆதிசக்தியிடம் வேண்டும்படி கூறினார். இந்திராதி தேவர்கள் ஆதிசக்தியை துதித்து வேண்ட, தேவி மனமிரங்கி மஹிஷாசுரனுடன் போர் செய்தாள். இருவருக்குமிடையே பயங்கரப் போர் நடந்தது. அவ்விடமே குஜராத்தில் 'கட்ச்' அருகிலுள்ள 'மட்' என்ற இடம். அங்குதான் தேவி அசுரனை வதம் செய்தாள்.

கருணை வடிவான தேவி அசுரன் இறக்குமுன் "உன் ஆசை என்ன?" என்று கேட்க மஹிஷனும் மனம் திருந்தி "என்றும் தங்கள் திருவடியின் கீழ் சாம்பலாக இருக்க வேண்டும்" என்று கேட்டான். இன்றும் மட்டில் அவ்வாலயத்தின் அருகில் அச்சாம்பல் காணப்படுவதாகவும், அதனருகிலுள்ள குளத்தில் ஸ்நானம் செய்வதால் சகல ஜன்ம பாபங்களும் தீரும் என்றும் கூறப்படுகிறது. மஹிஷனை வதம் செய்த தேவியைத் துதித்த தேவர்களிடம் தேவி "என்ன வரம் வேண்டும்?" என, தேவாதி தேவர்கள் "மங்கள வாரமாகிய செவ்வாய்க் கிழமையில் மஹிஷனை வதம் செய்து எங்கள் ஆசையைப் பூர்த்தி செய்ததுபோல், 'ஆ ஷாபுராமா' என்ற பெயரில் இங்கு கோயில் கொண்டு உன்னை பக்தியுடன் வழிபடும் அடியவர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்" என வேண்ட, தேவியும் அங்கு குடிகொண்டாள்.

சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன், மார்வார் நாட்டிலிருந்து தேவ்சந்த் என்ற வியாபாரி ஓருவன் 'மட்' வழியே வந்த சமயம், இருட்டி விட்டதால் அங்கு இரவு தங்கிவிட்டான். அன்று இரவு அவன் கனவில் தோன்றிய தேவியிடம் அவன் தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்று கேட்க தேவியும், "இவ்விடம் நான் மஹிஷனை வதம் செய்த இடம். இங்கு எனக்கு ஓரு ஆலயம் அமை. ஆறு மாதங்கள் அக்கதவு மூடியிருக்க வேண்டும். அதன்பின் கதவைத் திறந்தால் என் முழு உருவத்தையும் நீ தர்சனம் செய்யலாம். பின் உன் ஆசையும் நிறைவேறும். நானே ஆ ஷாபுரா தேவி" என்று சொல்லி மறைந்தாள்.

விழித்தெழுந்த தேவ்சந்த், தேவி சொன்னதுபோல் ஆலயம் அமைத்து, ஆறு மாதம் ஆகக் காத்திருந்தான். ஐந்து மாதம் முடிந்ததும் ஆலயத்தினுள் இசையும், நடனமும், கொலுசு சத்தமும் கேட்க ஆர்வமிகுதியால் கதவைத் திறக்க பாதி அளவே உருவாகியிருந்த தேவி வியாபாரியிடம் "நீ அவசரப்பட்டு கதவைத் திறந்ததால் என் பாத தரிசனம் கிடைக்காது. இந்த உருவத்துடனே எனக்கு ஆலயம் எழுப்பு. உன் ஆசை விரைவில் ஈடேறும். உன்னைப்போல் பக்தியுடன் வழிபடுவோர் ஆசைகளையும் நிறைவேற்றுவேன்" என்று சொல்லி மறைந்தாள். இது மட் ஆலயம் உருவான கதை.


இதே ஆ ஷாபுரா தேவி ஆலயம் மும்பை தானாவில் காபூர்பாவடி என்ற இடத்தில் அமைந்துள்ளது. செளராஷ்டிரத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஜம்னாகிரி கோசுவாமி என்று துறவி வசை என்ற இடத்திலுள்ள சிவாலயத்தில் வசித்தார். அவர் பாத யாத்திரை சென்ற போது காடாக இருந்த காபூர்பாவடியில் தங்கியிருந்தார். அச்சமயம் ஆ புராதேவியின் உருவம் அடிக்கடி கனவில் வர, அங்கு ஏதோ இருக்க வேண்டும் என நினைத்த சுவாமிஜி, அவ்விடத்தைத் தோண்டும்போது கண்ணைக் கூசச் செய்யும் ஆ ஷாபுரா தேவியின் விக்ரகம் கிடைத்தது. 1951 ஆம் ஆண்டு அங்கு ஓரு சிறிய ஆலயம் கட்டினார். நாளடைவில் காடு மறைந்து, போக்குவரத்து அதிகரிக்க, அவ்வாலயமும் சிறிது சிறிதாக வளர்ந்து இன்று மும்பையின் மிக முக்கிய கோயில்களில் ஓன்றாகக் காட்சி தருகிறது.



அழகான சிறிய மண்டபத்தை அடுத்து சில படிகள் ஏறிச் சென்றால் அன்னையின் கர்ப்பக்கிரகம். அன்னையின் தீட்சண்யமான கண்கள் நம்மைக் கருணையுடன் நோக்கி, "உன் ஆசை என்ன? சொல்." என்று நம்மைக் கேட்பது போல் தோன்றும் உருவம். முழுமை பெறாத தேவியின் உருவம், முகம் மட்டுமே அலங்கரிக்கப்பட்டுள்ளது. தேவியின் காலம் கடந்த சுயம்பு ரூபத்தில் ஓரு ஈர்ப்பு சக்தியை நம்மால் உணர முடிகிறது. சன்னதியிலேயே சில நிமிடங்கள் அமர்ந்து நம் ஆசைகளை, தேவைகளை அன்னையிடம் விண்ணப்பித்து வலம் வரும்போது, சுற்றுப் பிரகாரத்தில் சிவலிங்கம், சந்தோஷிமாதா, துர்க்கை தேவி ஆகியோரையும் தரிசிக்கலாம்.



பிரகாரத்திலுள்ள ஓரு ஆல மரம் முழுவதும் செவ்வண்ண ரிப்பன்களால் சுற்றப்பட்டிருக்கும். இந்த தேவியிடம் நம் ஆசையை நினைத்துக் கொண்டு ஆலயத்தில் விற்கும் ஓரு ரிப்பனை வாங்கி அம்மரத்தில் கட்ட வேண்டும். அதில் 'மேரி ஆ ஷா பூர்ண கரோ மா' (என் ஆசையைப் பூர்த்தி செய் அம்மா) என்று எழுதப்பட்டிருக்கும். நியாயமான ஆசை நிச்சயம் வெகு விரைவில் நிறைவேறி விடுகிறது. பின் ஆலயம் சென்று ஏதாவதொரு ரிப்பனை அவிழ்த்து நீரில் விசர்ஜனம் செய்து, அன்னதானம் செய்ய வேண்டும்.



தேவிக்கு செவ்வாய்க்கிழமை மிக விசே ஷமான நாள் என்பதால் அன்று இவ்வாலயத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் வந்து தரிசிப்பர். ஐந்து செவ்வாய்க்கிழமைகள் விரதமிருந்து, பாத யாத்திரையாக தொடர்ந்து வருவோர் வேண்டிய விருப்பங்கள் உடன் நிறைவேறும். திருமணம், பிள்ளைப்பேறு, வேலை, சொந்த வீடு என்று எந்த விருப்பமும் விரைவில் நிறைவேற்றுவாள் ஆ ஷாபுரா தேவி.


இவளே நவராத்திரி நாயகி என்பதால் நவராத்திரி ஓன்பது நாட்களும் ஹோமம், விசே ஷ அலங்காரம், பூஜை என்று காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அஷ்டமி அன்று மிக விமரிசையாக அன்னை காட்சி தருவாள். மும்பை வரும் மக்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயம் ஆ ஷாபுராதேவி ஆலயம். ஆலயம் மும்பை தானாவிலுள்ள காபூர்பாவடி என்ற இடத்தில் அமைந்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக